Monday, February 22, 2021

சமயவேல்

கவிஞர் சமயவேல் சமயவேல் (பிறப்பு பிப்ருவரி 04, 1957) சமகாலத் தமிழ்க் கவிதையின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர். எண்பதுகளில் இறுதிப்பகுதியில் ஒரு முக்கியமான கவிஞராக உருவாகிய இவர் தமிழில் Plain Poetryயை முதலில் அறிமுகப்படுத்தியவர் ஆகிறார். வாழ்வியல் நெருக்கடிகளை, இந்திய கிராமிய சிதைவுகளின் வழியாக தமிழ் அழகியலோடு கவிதைகளாக மாற்றினார் சமயவேல். 1. வாழ்க்கைக் குறிப்புகள் ________________________________________ கவிஞர் சமயவேல் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகில் நால்வழிச் சாலையின் இடப்புறம் உள்ள வெம்பூர் என்னும் கிராமத்தில் பிறந்தார். அவரது அம்மா திருமதி க.முனியம்மாள், விளாத்திகுளம் அருகில் உள்ள வேலிடுபட்டி கிராமத்தில் உமையன் என்னும் புகழ் பெற்ற சேவற்கட்டு வீரரின் மகளாவார். அப்பா திரு ச.கருப்பசாமி. அந்தப் பகுதியின் மிக நுட்பமான மரச் செதுக்கோவியக் கலைஞராக இருந்திருக்கிறார். 04.02.1957ல் பிறந்த இவர் வெம்பூரில் உள்ள பஞ்சாயத்து உயர்தொடக்கப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். பிறகு வெம்பூருக்கு அருகில் உள்ள புதூரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். பத்தாம் வகுப்பில் இருக்கும் போது "ஆலமரம் தன்வரலாறு கூறுதல்" என்னும் தலைப்பில் இவர் எழுதிய கட்டுரை தமிழாசிரியர்களால் பெரிதும் பாராட்டப்பட்டதால் இலக்கியம் பால் இவரது கவனம் திரும்பியது. புதூரில் உள்ள நூலகத்திலும் பந்தல்குடி நூலகத்திலும் உள்ள நூல்களை வாசிக்க ஆரம்பித்தார். ஆரம்பப் பள்ளி தையலாசிரியர் திரு தேவசகாயம் என்பவரது வழி காட்டுதலின் படி தத்துவம் அரசியல் துறைகளின் ஆரம்பநிலை நூல்களைப் பயின்றார். 1972ல் S.S.L.C. தேர்வில் புதூர் பள்ளியின் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். தனது கல்லூரிப் படிப்பை மதுரை நாகமலை ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் தொடர்ந்தார். இளங்கலை கணிதம் பயின்றபோது அங்கு தமிழ் பேராசிரியர் திரு இ.சு.பாலசுந்தரம் அவர்கள் மூலம் நவீனத் தமிழ் இலக்கியம் பரிச்சயமானது. ஜெயகாந்தனிடம் தொடங்கி மௌனி வரையிலான வாசிப்பு பெருந்தாக்கத்தை உருவாக்கியது. "இளமதி" என்னும் கையெழுத்து இதழை நடத்தினார். சிற்றிதழ்களை வாசித்துவிட்டு இவரும் இவரது நண்பர் மற்றும் கல்லூரித் தோழர் ந.முருகேசபாண்டியுடன் சேர்ந்து கவிஞர் கலாப்ரியா, கி.ராஜநாராயணன், வண்ணதாசன் போன்ற படைப்பாளிகளை நேரில் சந்தித்து உரையாடி நவீனத் தமிழ் இலக்கிய நுட்பங்களைப் பயின்றார். பட்டப் படிப்பை முடித்த பிறகு சென்னைக்கு சென்ற இவர் சுதந்திர இதழாளராக பல இதழ்களுக்குப் பணியாற்றினார். பிறகு மத்திய அரசின் தபால் தந்தித் துறையில் தந்தி எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். துறைத் தேர்வுகள் மூலம் தொலை தொடர்புத்துறை பொறியாளராக பதவி உயர்வு பெற்றார். உப கோட்டப் பொறியாளராக ஒய்வு பெற்று தற்சமயம் தனது துணைவியார் திருமதி பேச்சியம்மாளுடன் மதுரையில் வசிக்கிறார். ஒரு மகளும் இரண்டு மகன்களும் நல்ல பணிகளில் வெளியூர்களில் இருக்கிறார்கள். கவிதைத் தொகுப்புகள் ________________________________________ 1. காற்றின் பாடல் (1987) 2. அகாலம் (1994) 3. தெற்கிலிருந்து சில கவிதைகள் (தொகை நூல்) 4. அரைக்கணத்தின் புத்தகம் (2007) 5. மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் (2010) 6. இனி நான் டைகர் இல்லை (2011) (சிறுகதைகள்) 7. பறவைகள் நிரம்பிய முன்னிரவு (2014) 8. >ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் – சமயவேல் இந்த இரவு நான் அருந்திக் கொண்டிருப்பது எனக்குப் பிடித்த ரம் இல்லை வெறும் ஆப்பிள் ரஸம் தான் எனினும் இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது நாம் நடந்து வரும் பொழுது எவ்வளவோ வாகனங்கள் நம்மைக் கடந்தன எவ்வளவோ நாம் பார்த்துவிட்டோம் நாம் விவாதிப்பதற்கு ஒரு பொருளும் இல்லை நடந்த மரணங்களும் வரும் மரணங்களும் உறையச் செய்த நம் மெளனங்களின் இடைவெளிகளில் இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது பக்கத்தில் ஆளுக்கொரு பானம் அருந்தியபடி சிரித்துக் கொண்டிருக்கும் இளம் முகங்களில் பறக்கும் சிட்டுக் குருவிகளை நாம் நன்கறிவோம் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறோம் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறோம் ஆப்பிள் ரஸத்தின் இரத்தம் போன்றதோர் நிறம் கோமியம் போன்றதோர் அதன் வாசம் எல்லாவற்றிற்குமான மாயத் திறவுகோலை ஏதோ ஒரு சாலைத் திருப்பத்தில் எப்பொழுதோ நாம் தூக்கி எறிந்து விட்டோம் நமது சிகரட்கள் நம்மை சுவாசிக்கும் நறுமணத்தில் இந்த இரவு நிறைந்து தளும்பிக் கொண்டே இருக்கிறது. (நண்பர் இராஜமார்த்தாண்டனுக்கு) ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் கசாப்புக் கடையின் வெட்டுமரத்தோடு முடிந்துவிடும் என்று நீங்கள் வருத்தப்படவோ பகடி செய்யவோ வேண்டாம் ஓங்கிய அரிவாளின் கீழே தலையில் தண்ணீர் ஊற்றப்படும் பொழுது கூட மரணம் பற்றிய பிரக்ஞையற்று குலுக்கி எறிவோம் ஓர் உடல்மழையை; உள்ளக இடம்பெயர் மனித முகாம்கள் பக்கத்து நாட்டின் அகதி முகாம்கள் எல்லையோர தற்காலிகக் கொடுஞ் சிறைகள் விசாரணைக் கொட்டடிகள் வீட்டுக் காவல்கள் என்று வதைபடும் மனிதர்களை விட எத்தகு மேன்மையான வாழ்வுடன் நாங்கள் புல்வெளிகளில் அலைகிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள் எங்கள் மேய்ப்பர்கள் பெற்ற காசுக்காக நாங்கள் கொல்லப் படுவதில் ஒரு அறம் இருக்கிறது ஆனால் நீங்கள் எந்த அறமும் அற்று ஒருவரை யொருவர் கொல்வது பற்றி உங்களால் மே என்று கூட கத்த முடியாது எங்கள் கொலைகளின் கதறல்களுக்கும் உங்கள் கொலைகளின் கதறல்களுக்கும் நடுவில் ஒரு சிறு கிறுக்கலைக் கூட உங்களால் வரைய முடியாது. 2 இருமைகள் என்பது எதார்த்தம் எனில் அதில் ஒரு கை அள்ளி என் கண்களைக் கழுவுவேன் இரவு பகலோ, இறப்போ பிறப்போ இருமைகள் றெக்கைகளாக ஒரு பறவைக் கூட்டமாய் பழுப்பு வானில் பறந்து திரிவேன் மூன்றாம் நான்காம் அடுக்குகள் தேடி அதல பாதாளம் மூழ்கிப் பார்ப்பேன் இதுவும் அதுவும் கவ்வி முயங்கும் இடமோ பொழுதோ வெளியோ சிந்தும் இன்மையின் இனிமையை பருகி மகிழ்வேன் ஒரு சிறு ஆட்டுக் குட்டியல்ல நான் எல்லாப் புள்ளிகளிலும் இருக்க முடிகிற ஒரு முடிவிலி எனக்குள் சுழல்கிறது அதன் வெண்மணற் பரப்பில் கோபுரங்களும் மலைகளும் கடல்களும் நகரங்களும் ஆகாயமும் கூட சிப்பிகள் போலவும் நுரைச்செடிகள் போலவும் புதைந்து கிடக்கின்றன என் புல் வெளியில் மரணம் ஒரு சர்ப்பமென சரசரத்து வருகையில் நான் ஒரு நாகலிங்க மரமாவேன் என் கழுத்தைத் தழுவி ஆயிரம் நாகங்கள் பூக்களாய் தொங்கும் எங்கிலும் என்றென்றைக்கும் ஆனவன் நான். இப்பொழுதெல்லாம் அலுவலகத்தை விட மருத்துவ்மனை பிடித்திருக்கிறது வீட்டை விட அழுக்கு வீசும் விடுதி அறைகளில் விரும்பித் தங்குகிறேன். இசை அரங்குகளை விட சப்தங்கள் உயிர்ப்புடன் எழும் பேருந்து நிலையங்களில் வெகு நேரம் பராக்குப் பார்த்தபடி நிற்கிறேன் சாலைகளை விடுத்து பன்றிகள் அலையும் குறுக்குச் சந்துகளில் நடக்கிறேன் கட்டணக் கழிப்பிடங்களின் பேரழகு குறித்து வாசகர் கடிதம் எழுதுகிறேன் பூங்காக்களை விட பெரு மரங்கள் நிற்கிற மயானங்கள் அழகானவைகள் என்று சுவரொட்டிகள் ஒட்டுகிறேன் வெறும் மண்ணாலாகிய இந்த பூமியை விட மாய விண்வெளியே நிரந்தரம் என்று இப்பொழுதெல்லாம். ************ யதார்த்தம் என்பது சகிக்க முடியாத பொதுமனச் சிதைவு கவிஞர் சமயவேலுடன் ஒரு உரையாடல் உரையாடுபவர்: எஸ்.செந்தில்குமார். --------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வி 1 70, 80களில் சத்யஜித்ரே, ஷியாம்பெனகல், ரித்விக் கடக் ஆகியோரின் படங்களைப் பார்த்து அதன் தாக்கத்தில் உருவான சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். இப்போது எழுதுகிறவர்களில் பெரும்பாலும் தென் கொரியப்படத்தின் இயக்குநர் கிம்கிடுக்கின் படங்களைப் பார்ப்பதும் அதன் பாதிப்பில் தங்களது படைப்புகளை உருவாக்குவதிலும் முனைந்திருக்கிறார்கள். நீங்கள் தொடர்ந்து மாற்று மொழி சினிமாவின் பார்வையாளராக இருக்கிறீர்கள். சமகாலப் படைப்பாளிகளை தொடர்ந்து வாசித்து வருகிறீர்கள இது தலைமுறை இடைவெளி என்ற போதிலும் கிம்கிடுக்கின் பாதிப்பின் காரணம் என்னவாக இருக்கமுடியும்? பதில்: 70, 80களின் படைப்பாளிகளில் சிலர்மட்டுமேசத்யஜித்ரே, ஷியாம்பெனகல், ரித்விக்கடக், மற்றும் இன்னும் பல உலகஇயக்குனர்களின் படங்களைப் பார்த்தார்கள். சென்னை, திருச்சி, மதுரை என பலநகரங்களிலும் திரைபடக் கழகங்கள் அமைத்து உலகத் திரைப்படங்களைப்பார்த்தார்கள். தங்களது வாசிப்பு அனுபவங்களோடு அதையும் இணைத்துக்கொண்டார்கள். அவ்வளவுதான். படங்களின் தாக்கத்தில் யாரும் எழுதவில்லை. இப்பொழுது உலகப்படங்கள், குறுவட்டுக்களாகவும் எண்வட்டுக்களாகவும் டோர்ரன்ட், யூ ட்யூப் என எளிதாகக் கிடைத்தாலும் யாரும் அவைகளின் தாக்கத்தில்கதையோ கவிதையோ எழுதுவதாக சட்டென்று கூறிவிட முடியாது. தென்கொரிய இயக்குனர் கிம்கிடுக் எனக்கும் மிகப்பிடித்த இயக்குனர். சமகால இளையவர்களின் சமூக-உளவியல் மற்றும் பாலியல் சிக்கல்கள், வித்தியாசமான இசைவுடன் கூடியஅழகியல் காட்சிக் கோர்வைகளாக பார்வையாளர்களை அலைக்கழிக்கின்றன.சம்மர்,வின்டர்… படம் ஹெர்மன் ஹெஸ்ஸேவின் சித்தார்த்தா நாவலைப் போலஆன்மீகத் தேடலை, பாலியல் ரீதியாக அணுகும் அற்புதமான படம். 3-ஐர்ன்,டைம், தி போ, ப்ரீத், ட்ரீம் என பல படங்கள் எனக்குப் பிடித்தவை. உலகத்திரைப்பட விழாக்களில் முக்கியமான இயக்குனராக அங்கீகரிக்கப்பட்டாலும்கொரியாவில் சர்ச்சைக்குரியவராகவும், பெண்ணிய இயக்கங்களின் கண்டனத்துக்குஉரியவராகவும் கிம்கிடுக் இருந்திருக்கிறார். கிம்மின் 2013 படமான 'மொய்பியஸ்'படத்தில் ஆணுறுப்பைக் கடித்துத் துப்புகிற காட்சிகளைப் பார்த்து பலரும் அதிர்ச்சிஅடைந்தார்கள். எனது நண்பர் லஷ்மிசரவணக்குமார் ஒரு முழு நாவலையும்அந்தப்படம் மாதிரியே எழுத முயன்றிருக்கிறார். அந்த நாவல் களமான சென்னைமாநகரின் அடியுலகம், கிம்கிடுக் படத்தின் அடிஉலகத்தோடு ஒத்துப்போகிறது.மற்றபடி வேறுயாரும், இப்படி எழுதியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கேள்வி 2 தொடர்ந்து இன்றைய நவீன கவிஞர்களுடன் நேரடியான உரையாடலும் அவர்களது தொகுப்புக்களை உடனுக்குடன் வாசிக்கவுமாக இருக்கிறீர்கள்.தற்போதைய நவீன தமிழ் கவிதையின் இருப்பிடம் என்னவாக உள்ளது? பதில்: 70, 80களின் இளம்படைப்பாளிகள் பலரும் தங்களது மூத்தபடைப்பாளிகளோடு நேரடியான உரையாடலில் இருந்தார்கள். கவிதை, நாவல்,சிறுகதைகள், அரசியல் சித்தாந்தங்கள், தத்துவம், வரலாறு, உளவியல் என்றுஎல்லாவற்றையும் வாசித்தார்கள். உலகத் திரைப்படங்களைப் பார்த்தார்கள். பலநாடகக் குழுக்களும், உலக அளவிலான நாடகவியல் பற்றிய உரையாடலும்இருந்தன. சென்னைக் கலைக்கல்லூரி ஓவியர்களோடு சேர்ந்து, ஓவியக்கண்காட்சிகளை எழுத்தாளர்கள் சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஆனால் இன்றுநிலைமை முற்றிலும் மாறிவிட்டது. கவிதை எழுதுபவர்கள் நாவல் வாசிப்பதில்லை.கதைக்காரர்கள் கவிஞர்களை இளக்காரமாகப் பேசுகிறார்கள். உலக அரசியல்மற்றும் தத்துவம்பற்றிய ஆழமான புரிதல்கள் இல்லை. தீவிரமான தளங்களுக்கு நகரமுடியவில்லை. புத்தாயிரத்தில் சுகிர்தராணி, இசை, இளங்கோ கிருஷ்ணன், கண்டராதித்தன்,ராணிதிலக், ஸ்ரீநேசன், லீனா மணிமேகலை என ஒரு பெரிய பட்டாளமே தமிழ்கவிதையுலகைக் கலக்கியது. ஆனால் அவர்களது தொடக்கத் தளத்திலிருந்து அடுத்ததளத்திற்கு நகர முடியாத ஒரு தேக்கம் வந்துவிட்டது. இவர்களுக்குப் பிறகு வந்தஇளம் கவிகளின் பட்டியல் இன்னும் பெரியது. பெரிதும் சமூக வலைத்தளங்கள்சார்ந்து இயங்கும் இந்தக் கவிஞர்கள் என்ன செய்யப் போகிறார்கள் எனத்தெரியவில்லை. சிறந்த கவிதைகளை அடையாளம் காண்பது, கவிதைகளைவகைமைப் படுத்துவது, கோட்பாடுகளின் வழியாக கவிதைகளை அணுகுவதுபோன்ற விமர்சனப் பாங்குகள் தமிழில் மிகக் குறைவாக இருப்பதும் ஒரு காரணம்எனலாம். பின் நவீனத்துவம், அமைப்பியல், பின்-அமைப்பியல் சார்ந்தகோட்பாட்டாளர்கள் எழுதுவதை படித்துப் புரிந்து கொள்பவர்களின் எண்ணிக்கைஒற்றைப்படையில் இருப்பது ஏன்? கார்களையும் கணினிகளையும் இறக்குமதிசெய்வது போல, ஏன் கோட்பாடுகளை எளிதாக இறக்குமதி செய்து பயன்படுத்தமுடிவதில்லை?. மொழி சார்ந்த செயல்பாடுகள் அனைத்துமே அந்த மொழிபேசும்இனக்குழுவின் தொன்மத்திலிருந்து இன்று வரையிலான ஆழ்ந்த வாழ்வியல்சார்ந்தவை. வாழ்வியல் உறிஞ்சிக் கொள்ள முடிவதை மட்டுமே நாம் அதற்குவழங்க இயலும். விமர்சகர்கள் இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் பயின்று நமதுவாழ்வியலின் அடிப்படை அலகுகளுடன் பொருந்தக்கூடியவைகளை எழுதவேண்டும். அமைப்பியல் என்ற கோட்பாட்டை ஐரோப்பியர்கள் வாழ்வின் எல்லாத்துறைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். தமிழில், இலக்கிய உலகில் மட்டுமேஇயங்கும் கோட்பாடுகள், ஒரு சமூக ரீதியான பாதிப்பை ஏற்படுத்த முடியாததின்காரணம் பிறதுறைகள் ஏதொன்றிலும் இல்லாத சிந்தனா வறட்சியும், முற்றானஒருங்கிணைவு இன்மையுமே. மொழி மற்றும் இலக்கிய உலகக் கோட்பாட்டுஅறிவுஜீவிகள் தமிழ் வாழ்வின் அடிப்படைகளுக்குள் ஊடுருவ முடியாத ஒரு துயரகாலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். கேள்வி 3 தமிழ் கவிதையைத் தவிர நீங்கள் பிற மொழி கவிதைகள் அதிகமாக வாசிக்கிறீர்கள்.அதனதன் உலகம் என்னவாகவுள்ளது?. குறிப்பாக இந்தியாவில் நாம் அதிகமும்அறியாத அஸ்ஸாம் மற்றும் வட கிழக்கு பகுதிகளின் கவிஞரின் உலகம்? பதில்: தமிழும் ஆங்கிலமும் மட்டுமே எனக்கு வாசிக்கத் தெரிந்த மொழிகள். எனவே எனக்குதமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கும் படைப்புகளையே வாசிக்கிறேன்.அஸ்ஸாமிய இளம் கவிஞர் பிஜோய் சங்கர் பர்மனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில்சந்தித்தேன். தன்னுடைய ‘அசோகாஷ்டமி’ தொகுப்புக்காக யுவ புரஸ்கார் விருதுபெற்றிருக்கிறார். குறுந்தொகையை அஸ்ஸாம் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். அவரது கவிதைகளில் நமது சங்கப் பாடல்களின் கூறுகள்இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது. சாகித்ய அகடமியின் ‘இந்தியன்லிடெரச்சர்’ வாசிப்பதுண்டு. ஆனால் இந்திய அளவில் இன்று தமிழ் கவிதைகள்,முன்னனியில் இருப்பதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். பிஜோய் சங்கர் பர்மன் கவிதை: பட்டம் ஒரு நுண்ணிய இழையினால் என்னைக் கட்டிப் போட்டிருக்கிறாய் நீ ஆலய மணியுடன் தனித்த குன்றில் மற்றும் நீ பறந்து கொண்டிருக்கிறாய் மேலே மணி அசைகிறது மேற்கிலிருந்து வீசும் காற்றில் கோடையின் முதல் மழை போல நான் விழுந்துவிட்டேன் புல்லின் இதயத்தின் மேல் எங்கிருக்கிறாய் நீ நிர்வாண மரங்களுக்குப் பின்னால் குன்றின் உச்சியில் சூரியன் கீழே போகிறது அவனது இதயம் பெண்-ஓக்கு மரங்களின் மேல் மேய்கிறது இரவு காத்துக் கொண்டிருக்கிறது நீயும் உன் வழியைத் தொலைத்துவிட்டாய் வெகுதூரம் பறந்தபடி அல்லது வீழ்ந்து மூங்கில் புதர்களின் மேல் கவனிக்கப்படாமல். அஸ்ஸாமியக் கவிதை ஆங்கிலம் வழியாக தமிழில்: சமயவேல். கேள்வி 4 தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்த நீங்கள் தீடீரென சிறுகதை எழுதத்தொடங்கிஒரு தொகுப்பு கொண்டுவந்தீர்கள். பிறகு சிறுகதை எழுதவில்லை. தொடர்ச்சியாகநீங்கள் சிறுகதையில் கவனம் செலுத்தாதற்கு உங்களது சிறுகதைகளை சரியாகவாசகர்கள் வாசிக்கவில்லையென்ற ஆதங்கம்தானா? பதில்: நான் கவிதைகள் எழுதத் தொடங்குவதற்கு முன்பு சிறுகதைகள் தான் எழுதிக் கொண்டிருந்தேன்.கு.அழகிரிசாமி, கு.ப.ரா., கி.ராஜநாராயணன், வண்ணநிலவன், சா.கந்தசாமி, வண்ணதாசன் கதைகளின் தீவிர வாசகனாய் இருந்தேன். வாழ்வின் அலைக்கழிப்புகளால் எழுதிய கதைகள் பல தொலைந்து போயின. சென்னையிலிருந்து கோவில்பட்டிக்கு வந்த பிறகு திருமணம் குடும்பம் என முற்றிலுமாக பிறிதொரு வாழ்வைத் தேர்ந்து கொண்டேன். முக்கியமாக எனது அரசியல் சார்புகளிலிருந்து மொத்தமாக என்னைத் துண்டித்துக் கொண்டேன். அந்த சமயத்தில் நண்பன் கோணங்கி, சிறுகதைகள் எழுதத் தொடங்கியிருந்தார். நான் எழுதாமல் போன பல கதைகளையும் அவர் சிறப்பாக எழுதிக் கொண்டிருந்ததால் நான் எழுதுவதையே நிறுத்திக் கொண்டேன். எனது மகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, எனது டைரியில் அவ்வப்பொழுது எழுதிய குறிப்புகளையே கவிதைகளாக்கி, உருவானதே எனது முதல் தொகுப்பு ‘காற்றின் பாடல்’. அந்த சமயத்தில் தேவதச்சனோடு ஒரு தீவிரமான உரையாடலில் இருந்தேன். கவிதையில் தத்துவத்தின் பங்கு குறித்த எங்கள் உரையாடலில் உறைந்த மௌனங்களே, எனது கவிதைகளை எழுதின. தத்துவம் vs கவிதை உரையாடல், பல கிளைகளாகப் பிரிந்து எங்கள் கவிதைகளை அவரவர் பாணியில் புதியதாக்கியது. எனது நண்பர்களிலேயே, ஏன் தமிழகத்திலேயே, மிக அற்புதமான உரையாடுபவராக தேவதச்சன் இன்றும் இருந்து வருகிறார். அவரது தோழமையின் பாதிப்பால் தான், நான் முழுக்க கவிதை சார்ந்து இயங்கத் தொடங்கினேன். தனிமனிதன் அல்லது சமூகத்தின் உள்ளார்ந்த தவிப்புகளின் ஆன்மீகத்தை பலநூற்றாண்டுகளாக தொடர்ந்து கவிதைகள் சுமந்துகொண்டு அலைவதைப் புரிந்து கொண்டதால், கவிதை சார்ந்தே இயங்கிவருகிறேன். ஆனால் கதைகள் வழங்கியிருந்த மயக்கமும் கதகதப்பும் தொடர்ந்து தேவைப்பட்டுக் கொண்டே இருப்பதால் எப்பொழுதும் போல கதைகளையும் தேடித் தேடி வாசிக்கிறேன். அவ்வப்பொழுது ஓரிரு கதைகளையும் பரிசோதனை முறையில் எழுதிப் பார்க்கிறேன். வாசிக்கிறார்களா இல்லையா என்பதையெல்லாம் பொருட்படுத்தினால் தமிழில் ஒரு படைப்பாளியும் இருக்க மாட்டார்கள். கவிதை தோழி என்றால், கதை காதலியாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுவேன். இப்பொழுது ஒரு மெகா நாவலையும், ஒரு சிறுவர் நாவலையும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். கேள்வி 5 சமகால நவீன இலக்கிய சூழலில் கவிதை எழுதத்தொடங்கி சிறுகதை நாவல் எனபயணிக்கும் இலக்கியவாதிகளை நாம் பார்க்கிறோம். இச்சூழலில் உங்களதுமாயஏதார்த்த பாணியிலான மற்றும் பின் நவீனத்துவ பாணியிலான கதைகதையற்ற கதைக்கான எதிர்வினைகளும் வரவேற்பும் சரியாக அமைந்ததா? பதில்: கவிதை அனைத்து வகையான படைப்பு வடிவங்களிலும் மையச் சரடாக இருக்கிறது. சிற்பம், இசை, ஓவியம், மட்பாண்டங்கள், ஓலை விசிறிகள், பரதம், கதகளி, சிறுகதை, நாவல் எல்லாவற்றிலும் கவிதையின் தடங்களைப் பார்க்க முடியும். எனவே ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்துக்கான பயணம் அவரவர் வாழ்வின் ஒழுங்கோடு மிக இயற்கையாகவே நடக்கிறது. என்னுடைய கதைகளுக்கான எதிர்வினைகள் அல்லது வரவேற்பு பற்றி நான் ஒருபோதும் யோசிக்கவில்லை. ஆகச் சிறந்த படைப்பாளிகள் எவரும் வாசகர்கள் விருப்பங்கள் பற்றி தனியாகக் கவலைப்படுவதில்லை. அவர்களைக் கலங்கடிக்கும் மொத்த சமூகத்தின் ஒரு பகுதியாகத்தானே வாசகர்களும் இருக்கிறார்கள். மொத்த வாழ்வும் குறித்த எழுத்தாளனின் கவனம் எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கொள்கிறது. அமைப்பியல், பின் அமைப்பியல் மற்றும் பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்கள் தமிழில் ஒரு மிகச் சிறிய குழுவாக இயங்குகிறார்கள். கோட்பாட்டாளர்களே படைப்பாளிகளாகவும் இருப்பதால், அவர்களது சொந்தப் படைப்புகளை முன்னிறுத்தும் பணிகளே இன்னும் நிறைவேறாத சூழலில் இருக்கிறோம். தலித்தியக் கோட்பாட்டாளர்கள் நடப்பது அனைத்தையும் கூர்ந்து கவனிக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சமநிலையில் ஒரு சிறிய துண்டு கூட இன்னும் கிடைத்தபாடில்லை. அண்மையில் வலதுசாரி சிந்தனையாளர்கள் பலரும் புத்துயிர்ப்பு பெற்று ஊடகங்களில் புகுந்து விளையாடுகிறார்கள். கார்ப்பரேட்டியம் சகல சிந்தனைப் பிரிவுகளையும் சிதறடித்திருக்கிறது. கிரிமானலிட்டி, ஊடகங்களில், அரசியலில், சமூகங்களில், குடும்பங்களிலும் கூட புற்றாய் வளர்ந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் நிலம், நீர், காற்று என சகலமும் மாசடைந்து அழிந்து வருகின்றன. எனவே இலக்கிய விமர்சனம் நோஞ்சான் பிள்ளையாகத் தானே இருக்கும். ஒரு திசையற்ற சுழற்காற்றுக்குள் தமிழ் இலக்கிய மையம் சிக்கிக் கொண்டதால், இளம் படைப்பாளிகள் விளிம்புகளில் எழும்பி வருகிறார்கள். விளிம்புகளே புதிய மையங்களாக மாறும் மாயமும் நடக்கும். பரிசோதனைப் படைப்புகளைப் பற்றிப் பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பம் கூடிவராத சூழலில்தான் நாம் பலகாலமாக வாழ்கிறோம். பிரேம்-ரமேஷ் கவிதைகளும் கதைகளும் உச்சபட்ச பரிசோதனைப் படைப்புகள். ஜி.முருகனின் ‘மின்மினிகளின் கனவுக்காலம்’ நாவல் 1993ல் எழுதப்பட்டது. முற்றிலும் புதிய வகைமையினால் ஆன இந்த நாவலை கோட்பாட்டாளர்கள் பலரும் கண்டுகொள்ளவே இல்லை. ஏனெனில் ஜி.முருகன் எந்தக் குழுவிலும் இல்லாமல் இருந்தார். அதே போல் கௌதம சித்தார்த்தனின் மாய யதார்த்த சிறுகதைகள் குறித்து எவரும் பேசவில்லை. ஆர்.சிவகுமார், கால சுப்ரமண்யம் போன்றவர்களது மொழிபெயர்ப்புகள் பரவலாக வாசிக்கப்படவில்லை. கோணங்கி ஒருவர்தான் தனது கல்குதிரை மூலம் எல்லாவகையான தீவிரப் படைப்பாளிகளையும் ஒருக்கூட்டுகிற பெரும் சக்தியாக இயங்கிவருகிறார். கேள்வி 6 உங்களது கவிதை அழகியலும் நுட்பமான அரசியலும் கொண்டது. காண் உலகின்காட்சிகளையும் எதார்த்தமான நிகழ்ச்சிகளையும் எளிமையான அதேநேரத்தில்பொயட்டிக்கான வரிகளில் சிக்கனமாக கவிதை எழுதுவதில் பெயர்பெற்றவர்கள்நீங்கள். இதற்கு நேர் மாறாக ஃபேண்டஸி உலகின் தோற்றத்தை உங்களதுகதைக்குள் கொண்டுவர காரணமாக அமைந்தது என்ன? ஏற்கனவே தமிழில்நிறைய ஃபேண்டஸி மேஜிக்ரியலிச எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதைநீங்கள் அறிவீர்கள். நீங்கள் அவர்களுடன் இணைந்து கொள்ளும் முயற்சிதானா? பதில்: கவிதையே ஒரு ஃபேண்டஸி தான். யதார்த்தம் என்பது சகிக்க முடியாத வகையில் பொதுமனச் சிதைவை, சமூக சித்தப்பிரமைகளை உருவாக்கியதால்தான் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், மெக்சிகோவிலும் மாய யதார்த்த எழுத்துகள் தோன்றின. இங்கும் அப்படியான ஒரு சூழல் இன்று உருவாகிவிட்டது. ஜனத்திரளில் எத்தகைய சூழலிலும் புதிய தளங்களை அமைத்துக் கொள்ள முடிபவர்களாக கலைஞர்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஒரு இதயத் தாக்கிலிருந்து மீண்டு ஓய்வில் இருந்த ஒரு அதிகாலையில் கண்ட கனவை கொஞ்சமும் மாற்றாமல் அப்படியே எழுதினேன். அதுதான் என்னுடைய “மன்னார் வளைகுடாவில் ஒரு நன்னீரோட்டம்” சிறுகதை. அந்த ஆண்டு நான் எழுதிய சில கதைகளுக்கு கனவுகளே தூண்டலாக இருந்தன. தினசரி வாழ்வின் சலிப்பிலிருந்தே ஃபேண்டஸி உருவாகிறது. ஃபேண்டஸி வகை வாசிப்பு சிறுவயதிலிருந்தே இருக்கிறது. கதையற்ற கதைகள் என்பதெல்லாம் எனது வாசிப்பிலிருந்து கிடைத்தவைதாம். ஒரு கதை எழுதுவதில் உள்ள பலவகையான திறப்புகள், சுதந்திரங்கள், மாய நகர்வுகள் எல்லாம் என்னைப் பெரிதும் கிளர்ச்சியூட்டுகின்றன. ஒரு பத்தியை நாம் எழுதுவதும், அடுத்த பத்தியை கதையே எழுதுவதும் செம த்ரில்லிங். உங்களுக்கும் அந்த அனுபவங்கள் இருக்குமல்லவா? கதைப்பிரிவில் மிகக் குறைவாக எழுதியிருக்கும் என்னை அந்த மேஜிக்ரியலிச எழுத்தாளர்கள் இணைத்துக் கொள்வார்களா என்பது தெரியவில்லை. சா.தேவதாஸ் ஒருவர் தான் எனது கதைகளைப் பற்றிய ஒரு மதிப்புரையை தமிழ் இந்தியா டுடேயில் எழுதியிருந்தார். கால்வினோ போன்ற எழுத்தாளர்களை மொழிபெயர்த்திருக்கும் அவரது மதிப்புரையும், நான் பெரிதும் மதிக்கிற எழுத்தாளர் மா.அரங்கநாதன் தொகுப்பைப் படித்துவிட்டு தொலைபேசியில் பேசியதும் எனக்குப் போதுமானதாக இருக்கிறது. சில நண்பர்கள் என்னய்யா எழுதியிருக்க என ஏசியதையும் மதிக்கிறேன். கேள்வி 7 சமகால சிறுகதைகளையும் நாவல்களையும் உடனுக்குடன் வாசித்துவிடுவிதைநான் அறிவேன். தற்போது இவ்வடிவத்தில் இயங்கும் எழுத்தாளர்களைப் பற்றியும்அதன் உலகத்தையும் நீங்கள் என்னமாதிரியான அபிப்ராயத்தை வைத்துள்ளீர்கள்என்பதை தெரிந்து கொள்ளலாமா? பதில்: இளம் எழுத்தாளர்கள் திசைகளற்ற விளிம்புகளில் இயங்குவது பற்றியும், புதிய மையங்களை அவர்கள் உருவாக்க இருப்பதையும் ஏற்கனவே கூறினேன். சந்திரா, எஸ்.செந்தில்குமார், திருச்செந்தாழை, கால பைரவன் ஆகிய சிறுகதையாளர்கள் இப்பொழுது ஒரு தேக்க நிலையில் இருப்பதாகக் கருதுகிறேன். கார்ல் மார்க்ஸ் ஜி என்பவரது சில கதைகளை விரும்பிப் படித்தேன். ஆனால் அவரது ஆசானின் கதையுலகம் அவரைப் பாதிக்காமல் இருக்க ஆசைப்படுகிறேன். சமீபத்தில் கவிஞர் நரன் எழுதிவரும் சிறுகதைகள் கவனிக்க வைக்கின்றன. அண்மையில் நிறைய நாவல்கள் வந்துவிட்டன. குறிப்பிட்டுச் சொல்வது மாதிரி ஒரு நாவலும் இல்லை. ஜோஸ் சரமாஹோ, மிலன் குந்த்ரே, ஓரன் பாமுக், கால்வினோ, ருல்ஃபோ(ஒரே நாவல்), மிஷிமா, கவாபட்டா, முரகாமி, மியா கூட்டோ, அடிச்சி போன்றவர்களது நாவல்களை வாசித்தபிறகு ஒரு வாசகர், தமிழில் இன்றைய நாவல்களை எப்படி எதிர்கொள்வார் எனத் தெரியவில்லை. நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கவிதையில் ஒரு பெரும் பாய்ச்சல் நிகழ்ந்துள்ளதைப் போல கதைப் பரப்பிலும் நடக்கும். கேள்வி 8 கோணங்கி. பா.வெங்கடேசன் இருவரின் நாவல்களுக்கான இடம் அதாவதுபொதுநீரோடையில் இல்லை. அதற்கான வாசகர்கள் கவிஞர்கள் மட்டுமே என்பதும்சாமன்யாமான வாசகர்கள் அப்பிரதியை எளிதில் அணுகமுடியாது என்பதுகுற்றச்சாட்டாக உள்ளது. கோணங்கியும் பா.வெங்கடேசனும் உங்களது நெருங்கியநண்பர்கள். அவர்களது எழுத்துக்களை விவாதித்து வருகிறிர்கள். அதுகுறித்துகட்டுரை எழுதியும் இருக்கிறிர்கள். அவர்களது மொழிகுறித்தும் அவர்களது உலகம்குறித்தும் சாமன்யவாசகனும் புரிந்து கொள்ளவேண்டுமெனில் என்னசெய்யவேண்டுமென நீங்கள் குறிப்பிடுவீர்கள்? பதில்: கொஞ்சம் வாசிக்க வாசிக்கப் பழகிவிடும். கோணங்கியை வாசித்துக் கொண்டே இருக்கலாம். எல்லாம் புரிய வேண்டும் என்பதெல்லாம் பெரிய ஆசை. வாசிப்பதே பெரிய அனுபவம் அவ்வளவுதான் என நண்பர்கள் கூறுகிறார்கள். உலக இலக்கிய இதிகாசங்களை ஊடிழைப் பிரதிகளாக அவர் கொட்டுவதைப் பலரும் வியக்கிறார்கள். எனக்கு அவரது அண்மை எழுத்துக்களில் ‘வெள்ளரிப் பெண்’ தவிர வேறு எதுவும் பிடிக்கவில்லை. அவரது ஊருக்கருகில் உள்ள நென்மேனி (இருக்கண்குடி அருகில்) என்ற ஊரில் உள்ள வெள்ளரித் தோட்டத்திலிருந்து அவரது தாத்தா ஊரான நாகலாபுரம் வரை உள்ள நிலப்பகுதியும், அதன் மரம் செடி கொடி என சகல உயிர்களும் மனிதர்களும் மூச்சுவிடும் அந்த மகத்தான கதையை பல முறை வாசித்தேன். அவரது ‘கல்குதிரை’ ஒரு அசாதரணமான முக்கிய பணி என்றும், அது எதிர்காலத் தமிழ் இலக்கியத்தை வெகுவாக மாற்றும் என்றும் நம்புகிறேன். அவர் ஏற்கனவே ஏராளமான அற்புதச் சிறுகதைகளை எழுதிவிட்டார். ‘சலூன் நாற்காலியில் சுழன்றபடி’ என்னும் அவரது மொத்த சிறுகதைகளின் தொகுப்பு, தமிழின் சிகரம் தொட்ட தொகுப்பு. பா.வெங்கடேசனையும் ‘ராஜா மகள்’ வெங்கடேசனாக மட்டுமே பார்க்கிறேன். அவரது இரு மெகா நாவல்களிலும் சில பகுதிகள் மட்டுமே எனக்குப் பிடித்திருந்தன. ‘தாண்டவராயன் கதை’ நாவலில் முதல் பகுதிகள் கவித்துவமாக வந்துள்ளது. ஆனால் வரலாற்றுக்குள் நாவல் புகுந்ததும் மூடி வைத்துவிட்டேன். எனக்கு தனிப்பட்ட முறையில் வரலாற்று நாவல்கள் என்னும் வகைமையின் மீதே ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது. நேரடியாக வரலாற்றை வாசித்து விடுகிறேன். தொன்மங்களும் இதிகாசங்களும் அதே போல புராண இதிகாசங்களை நாவல்களாக எழுதுவதிலும் எனக்கு உவப்பில்லை. ஜேம்ஸ் ஜாய்சின் “யுலிசஸ்" போன்ற இதிகாச ரேகைகளைக் கொண்ட சமகால நாவல்களையே நான் பெரிதும் விரும்புகிறேன். இது எனது தனிப்பட்ட விருப்பம். இதன் மீதான விவாதங்களில் எனக்கு விருப்பமில்லை. கேள்வி 9 ரஷ்ய இலக்கியம், வங்கமொழி இலக்கியம், லத்தீன்அமெரிக்க இலக்கியம் என்றுஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தேசத்தின் எழுத்துக்கள் நம்தமிழகத்தைகவர்ந்துள்ளது. அதன் பாதிப்பில் எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். சிலர்அதன் தொடர்ச்சியாக எழுதியும் இருக்கிறார்கள். நீங்கள் சமீபத்தில்நைஜீரியாவை சேர்ந்த சீமண்டாஅடிச்சியின் எழுத்து குறித்து கட்டுரைஎழுதியிருந்தீர்கள். பிறகு ஐப்பானிய நாட்டு எழுத்தாளர் முராகாமியின் எழுத்தைகுறிப்பிட்டீர்கள். இவர்களது எழுத்துலகத்தை ஆங்கிலத்தில் வாசித்திருக்கிறிர்கள்.உங்களது அனுபவத்தை சொல்லுங்கள். பதில்: வாசிப்பது என்பதே வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டதால் நிறைய வாசிக்கிறேன். சிமமந்தா அடிச்சி இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கும் தொடக்க நிலை எழுத்தாளர். அவரது ‘ஊதா நிற செம்பருத்தி’ நாவல் அதன் இறுதிப்பகுதியில் விபத்துக்குள்ளானது போல் மோதி நொறுங்கிவிடுகிறது. அதைவிட பன்மடங்கு சிறந்த நாவல்கள் தமிழில் இருக்கின்றன. பூமணியின் வெக்கை, பிறகு, பா.சிவகாமியின் ஆனந்தாயி, இமயத்தின் கோவேறு கழுதைகள் என நம்மிடம் பல சிறந்த நாவல்கள் இருக்கின்றன. ஆனால் பின்காலனியம் பற்றிய சரியான அரசியல் பார்வை கொண்ட நாவல்கள் நம்மிடம் இல்லை. எனவே தான் சிமமந்தா அடிச்சியை நாம் வாசிக்க வேண்டியதாக இருக்கிறது. அண்மையில் பிரேம் இந்த நாவலை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். நைஜீரியா உட்பட்ட ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் பலரும் காலனிய, பின்காலனிய வாழ்க்கை பற்றி நிறைய நாவல்களை எழுதியிருக்கிறார்கள். முக்கியமாக பூர்வீக கலாச்சார அழித்தொழிப்பு பற்றிய அக்கறை இவர்களது பொதுப்பண்பாக இருக்கிறது. மொசாம்பிக் எழுத்தாளர் மியா கூட்டோ (Mia Couto) என்பவரது ‘தூக்கத்தில் நடக்கும் நாடு’ ‘பெண் சிங்கத்தின் ஒப்புதல் வாக்குமூலம்’ ‘அரளிமரத்தடியில்’ ஆகிய நாவல்களை சென்ற ஆண்டு நான் விரும்பி வாசித்தேன். சரமாஹோ, மிலன் குந்த்ரே, பாமுக், முரகாமி வகை நாவல்கள் நம்மிடம் இல்லை. எஸ்.வி.ராஜதுரை ஜோஸ் சரமாஹோவின் நாவல்கள் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார். முரகாமி, பாமுக் ஆகியோரது நாவல்கள் தமிழில் வந்துவிட்டன. எனவே ஒரு புதுவகையான நாவல் எழுத்துக்கு தமிழ் நிலம் தயாராகி வருகிறது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கேள்வி 10 நாவல் எழுதிக் கொண்டிருந்தீர்கள் என்ன ஆனது? பதில்: நிறைய எழுதிக் கொண்டே இருக்கிறேன். இன்னும் நாவலின் வடிவம் புலப்படவில்லை. அண்மையில் எனக்கு மூளையில் கொஞ்சம் செல்கள் அழிந்துவிட்டன. ஞாபகத்திலிருந்து எழுதுவதைவிட மறதியிலிருந்து எழுதுவது எளிதாக இருக்கிறது. நாவல் கட்டுப்பாடில்லாமல் போகிறது. என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஆட்டோ ரைட்டிங் போன்ற உத்திகளைப் பயன்படுத்திப் பார்க்கிறேன். மெட்டா வகை நாவலாக இருக்கும் என்று நினைக்கிறேன். எப்படியும் வரும் மதுரை புத்தகக் காட்சிக்குள் நாவலைக் கொண்டு வந்துவிடுவேன். ஒரு சிறுவர் நாவலையும் ஓரத்தில் எழுதுவதால் ஒரு சமநிலை கிடைக்கிறது. ooo இந்த நேர்காணல், "பேசும் புதிய சக்தி" ஏப்ரல் 2017 இதழில் வெளியாகியுள்ளது. நண்பர் எஸ்.செந்தில்குமாருக்கும், பேசும் புதிய சக்தி இதழுக்கும் எனது நன்றிகள். சமயவேல் கவிதைகள் இப்பொழுதெல்லாம் அலுவலகத்தை விட மருத்துவ்மனை பிடித்திருக்கிறது வீட்டை விட அழுக்கு வீசும் விடுதி அறைகளில் விரும்பித் தங்குகிறேன். இசை அரங்குகளை விட சப்தங்கள் உயிர்ப்புடன் எழும் பேருந்து நிலையங்களில் வெகு நேரம் பராக்குப் பார்த்தபடி நிற்கிறேன் சாலைகளை விடுத்து பன்றிகள் அலையும் குறுக்குச் சந்துகளில் நடக்கிறேன் கட்டணக் கழிப்பிடங்களின் பேரழகு குறித்து வாசகர் கடிதம் எழுதுகிறேன் பூங்காக்களை விட பெரு மரங்கள் நிற்கிற மயானங்கள் அழகானவைகள் என்று சுவரொட்டிகள் ஒட்டுகிறேன் வெறும் மண்ணாலாகிய இந்த பூமியை விட மாய விண்வெளியே நிரந்தரம் என்று இப்பொழுதெல்லாம். விடுமுறை வேண்டும் உடல் எதைப் பற்றியும் கவலை இல்லை உடலுக்கு தன்னைப் பற்றியே பெரும் கவலை கொள்கிற உடல் முடிந்த போதெல்லாம் விடுமுறை கேட்டு நச்சரிக்கிறது பேருந்துப் பயணம் ரயில் பயணம் அலுவலகம் என எதுவும் வேண்டாம் என்று அடம் பிடிக்கிறது சும்மா ஒரு பனை மரத்தைச் சுற்றியிருக்கும் முசுமுசுக்கைச் செடி (சாறுண்ணி) போல் அல்லது வற்றிய கண்மாயின் அளிச்சகதியில் புரளும் எருமை என எப்படியும் இருப்பேன் என்கிறது விடுமுறை விடுமுறை எனும் யாசகச் சொற்களை பரப்பிக் கொண்டே அலைகிறது எதுவும் செய்யாமல் அக்கடா என்று சும்மா கிடக்கும் ஆனந்தம் பற்றிய அனேக நிறமிகளை மூளைக்கு அனுப்பிய வண்ணம் இருக்கிறது மிகுதியும் கனவு காணும் விருப்ப்த்துடன் வெண்சிவப்பு மதியங்களில் கொட்டாவி விடுகிறது எனது உடல் என்னைவிட்டு வேறு யாரிடம் கேட்கும் என சம்மதித்தபடியே இருக்கிறேன். அழகென்னும் அபாயம் ஒரு நெடுஞ்சாலைப் பயணத்தில் ஊர்தி எந்திரம் நிறுத்தி சாலையோரம் கொஞ்சம் நடந்து ஓங்கி வீசுகிற காற்றில் நிரம்பியபடி சிறுமரக் கூட்டமொன்றை நெருங்குகின்றேன் நுணா மரப் புதரொன்றில் ஒரு சிறு பறவை இறகுகள் அடர் சிவப்பு கழுத்து மயில் நீலம் உருண்டை வயிறு சாம்பல் நிறம் கொண்டை மஞ்சள் நிறம் கண்கள் என்ன நிறம்? கால்கள் பசுமஞ்சள் நிறம் விரல்கள் அரக்கு நிறம் நிற்கிற மரமோ மர நிறம் அந்த இத்தினியூண்டு பறவை கொண்டையை ஆட்டி ஒரு வினோதக் கூவலை எழுப்பியபோது என் பெரு நகர ஆத்மாவின் தலை வெட்டுண்டு உருண்டது மரணத்தின் விளிம்பை ஒரு நடனக் கூடமாக்கியது என் உடல் கூவல் முடித்து பறவை விருட்டென்று பறந்தோடியதும் உயிர் மீட்டு ஓர் குழந்தையாக நின்றேன். எண்பதுகளில் எழுதத் தொடங்கிய சமயவேல் தனது முதல் கவிதைத் தொகுப்பான "காற்றின் பாடல்" மூலம் முக்கியமான தமிழ் கவிஞராக அறியப்பட்டார்.இவரது இரண்டாவது தொகுப்பான "அகாலம்" பலரது கவனத்தையும் பெற்று தமிழின் முக்கிய கவிதைத் தொகுப்பாக அமைந்தது. உயிர்ம்மை பதிப்பகம் இவரது "அரைக் கணத்தின் புத்தகம்" தொகுப்பை வெளியிட்டது.அண்மையில் இவரது புதிய தொகுப்பான "மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும்" ஆழி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. மலைகள் பதிப்பகம் 2014ல் 'பறவைகள் நிரம்பிய முன்னிரவு' தொகுப்பை வெளியிட்டது. 'நான் டைகர் இல்லை' என்னும் சிறுகதைத் தொகுப்பை உயிர் எழுத்து பதிப்பகம் வெளியிட்டது.'தெற்கிலிருந்து சில கவிதைகள்' என்னும் தொகைநூலின் ஆசிரியரும் இவரே. உலகின் இமை நடு நெற்றியை மறைத்து விரிந்த கரும் பரப்பில் ஒரு சிறிய மஞ்சள் புள்ளி அருகில் ஒரு நீலத்திட்டு இமைகள் மேலும் இறுக நீலத்திட்டு ஒரு வளையமாகி மஞ்சள் புள்ளியை வளைக்கிறது மஞ்சள் புள்ளி சுழல்கிறது நீல வளையம் எதிர்த் திசையில் சுழல்கிறது. இமைகள் மேலும் இறுக மஞ்சள் புள்ளி பிய்த்துக்கொண்டு பேராழத்துள் ஓடுகிறது நீலவளையம் விரிந்து விரிந்து அடர் கருப்பு இருளாய்ப் போகிறது இமை மேலும் மேலும் இறுகுகிறது தெருவோர சோடியம் கனியில் இருள் பூக்கத் தொடங்குகிறது எனது இமை கொஞ்சம் கொஞ்சமாக உலகின் இமையாக மாறுகிறது எனினும் அது மூடியே இருக்கிறது பார்த்தலின் பரவசத்தை ஒத்தி வைத்தபடி அது மூடியே இருக்கிறது. 2. இரவு மழை இந்த இசை வானத்திலிருந்து அல்லது பெருவெளியிலிருந்து இந்தத் துளி, துளிகள், சிறுதுளிகள், கோர்க்கப்பட்ட துளிகள் கனத்த துளிகள் உக்கிரத் துளிகள் துளிகளின் மழை இரவு மழை முழு இரவும் மழை முழு இரவும் குளிர் முழு இரவும் மின்னல் முழு இரவும் குமுறும் இடிகள் முழு இரவும் கறுப்பிருட்டு முழு இரவும் கோர்க்கப்படாத இசை முழு இரவும் வெதுவெதுப்பு முழு இரவும் கோதுமை நிறக் காதல் 3. பயணம் உட்கார்ந்த நிலையில் பயணிக்கும் உடலில் குமிழியிடும் சித்தம் ஜன்னலோரம் ஓடும் காட்சிகளில் கைப்பு கூடியிருக்கிறது விழுங்க விழுங்கத் தீராத சாலைக் கருப்பு மயில்களும் தட்டுப்படாமல் இல்லை காணாக் காட்சிகளின் வெற்றில் வழுக்கி விழும் சித்தம் ஆழ்கிணற்றில் ஓயா நீச்சல் நீரில்லாக் கண்மாயின் கலுங்கல் கற்கள் எதையோ பேசத் துடிக்கின்றன பெரிய கண்மாய் கிழக்கு ஓடையில் நானும் அப்புச்சியும் தூரி போட்டிருக்கிறோம் ஒரு விசில் சப்தத்தோடு புழுதியெழுப்பி நிற்கிறது பேருந்து ஓலைக் கொட்டானில் வெள்ளைக் கெண்டைகளின் மரண சுவாசம் அப்புச்சியின் முகத்தில் நிலைகொள்ளாமல் உருளும் எப்பாவமும் அற்ற உயிர்விழிகள் ஒரு இலுப்பை மரம் எல்லா இலைகளையும் உதிர்த்துவிட்டு பச்சை அழகாய் அம்மணமாய் நிற்கிறது உயர வளர்ந்த ரயில் கள்ளியின் உயர்ந்த சிறகுகளில் சிவப்பு மலர்கள் இறங்கியாச்சா இல்லையா ரைட் ரைட் துலாபார பூஞ்சிட்டுக் கன்னங்களின் சிவப்பு உன்னதம் என்னவெல்லாமோ ஆகிப்போனது மூத்த ஆசானின் உடல் முரண்களின் அலைகளில் மிதக்கிறது எழுதி வைத்த கடிதம் அவர் முற்றிலும் வெறுத்த ஊடகத் திரைகளில் படபடக்கிறது மயில்களும் தட்டுப்படாமல் இல்லை நாற்கரச் சாலையில் ஏறிப் பறக்கத் தொடங்கும் பேருந்து ஒரு திசையிலும் நான் ஒரு திசையிலும். 4. எதற்கும் எதற்கும் கட்டண வசூலிப்பகம் தாண்டி ஒரு ஓரமாய் வெள்ளை ஆமையாய் நிற்கிறது ஒரு அம்பாஸிடர் கொஞ்சம் தள்ளி பெரும் பாரங்களோடு வரிசையாய் 4 டிரக்குகள்; வாகை மரங்களைத் தாண்டி வாறுகாலில் ஒரு சுமோ தலைகுப்புற நொறுங்கிக் கிடக்கிறது கிழக்கே ஒரு சிற்பமாய் அரிவாளோடு நிற்கிறான் வலையங்குளம் கருப்பசாமி திரும்பி செம்மண் கரை ஏறியதும் தலைக்கு மேலே ஒரு வெள்ளை விமானம் தாழப் பறந்து மேலேறுகிறது எதற்கும் எதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை போய்க்கொண்டே இருக்கிறது என் மகிழ் வுந்து. ••• வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு மனநிலைகளில் எழுதப்பட்ட இந்தத் தொகுப்பின் எல்லாக் கவிதைகளையும் இன்று ஒரு சேர வாசித்தபின் அடர்ந்த வனாந்திரத்தில் பெருமரம் ஒன்றின் கீழ் நிற்பது போல உணர்ந்தேன். இந்த வாக்கியத்தைப் வாசித்த கணத்தில் இதை எழுதிய கவிஞர் சமயவேல் ஒரு பெருமரமாகவும் நான் அதன் உச்சியடைய முயலும் ஒரு சிற்றெறும்பாகவும் உணர்ந்தேன். ‘அரைகணத்தின் புத்தகம்’ சமயவேல் கவிதைகளின் முழுத்தொகுப்பு. காற்றின் பாடல், அகாலம் உள்ளிட்ட இரண்டே தொகுப்புகளைச் சேர்த்து 2007ல் வெளியான நூல். மனுஷன் 1989ல் இருந்தே எழுதுகிறார். முழுதொகுப்பில் மொத்தமே 81 கவிதைகள் தான் இருக்கு. தேடலின் சிறகுகள் கழன்று மலைகளுக்கப்பால் விழுந்தன .. முடிவற்ற அன்பில் உடம்பு வீங்கிய உருண்டை நிலா .. பூமியின் கோடிக் கணக்கான ஜீவன்களில் நானும் ஒன்று என் துக்கம் தாகம் சந்தோஷமென நானொரு பெரும் சமுத்திரம் .. ஆ, காற்றில் களிநடம் புரிகிற புற்களில் ஒன்றானேன் நான் .. பார்வையை மடக்கி உண்ணும் பிரம்மாண்ட நீலம் ஓயாத அலைச் சப்தம் நான் கடல் முன் நிற்கினேன் .. இப்படி அருமையான பல வரிகள். … சமயவேலின் இரண்டு கவிதைகள்: 1. சொந்த ஆத்திசூடி அரசியல் விலக்கு தத்துவம் தவிர் கனவு காண் காதலித்துக் கொண்டே இரு பிரயாணம் செய் கட்டுரை படிக்காதே புரிந்து கொள் இசையை உண் கட்சிகளைக் கண்டு ஓடு ஓடு வரலாற்றை ஒழி குழந்தைகள் பெறு கடிகாரத்தை தூக்கி எறி பறவைகள் பார் செய்தித்தாள்களில் காமிக்ஸ் மட்டும் படி தாமதித்துப் போ ஒரு நாளாவது நடனம் ஆடிப்பார் நடந்து செல் நகரங்கள் வெறு சிறு பெண்களிடம் அரட்டை அடி வாக்குறுதிகளை மீறு உத்யோகம் தவிர் நீச்சல் படி கூட்டங்களுக்குப் போகாதே விவசாயம் செய் பட்டினிகிட கடிதங்களுக்குப் பதில்எழுதாதே அடிக்கடி அண்ணாந்து ஆகாயம் பார் வியாபாரம் வெறு ஒரு செடி முளைத்து வளர்வதை உற்றுக் கவனி கடைவீதிகளில் அலைய வேண்டாம் சும்மா படுத்துக்கிட தேசிய அசிங்கம் (டிவி) நடுவீட்டில் எதற்கு? நுங்கு தின் சிற்பங்களை ரசி அடிவானத்தோடு உரையாடு எதையும் கும்பிடாதே முதுமையைக் கொண்டாடு டீயும் சிகரெட்டும் துணை விஞ்ஞானம் விலக்கு பெண்களோடு இரு ஆயிலும் அரசியலும் மனிதகுல எதிரிகள். 2. என்றும் கூரை முகட்டுப் பட்சிகளின் கரைதல்களுடன் இமைகளைப் பிரித்து வாழ்த்துச் சொல்லும் இளங்காலை ஒரு உடம்பு முறுக்கலில் மெல்லவே பிரியும் நேற்றின் அயர்வுகள் வாசலைத் தாண்டி உப்புக்காரனின் குரலோடு ஒரு மாபெரும் இயக்கம் தொடங்கி விட்டது குளிக்க சாப்பிட வேலைக்கென கலகத்துக்கு அழைக்கும் வாழ்க்கையை இன்றும் ரசிப்பேன். … நீங்க படிச்சே ஆவணும். சமயவேல் கவிதைகள் இப்பொழுதெல்லாம் அலுவலகத்தை விட மருத்துவ்மனை பிடித்திருக்கிறது வீட்டை விட அழுக்கு வீசும் விடுதி அறைகளில் விரும்பித் தங்குகிறேன். இசை அரங்குகளை விட சப்தங்கள் உயிர்ப்புடன் எழும் பேருந்து நிலையங்களில் வெகு நேரம் பராக்குப் பார்த்தபடி நிற்கிறேன் சாலைகளை விடுத்து பன்றிகள் அலையும் குறுக்குச் சந்துகளில் நடக்கிறேன் கட்டணக் கழிப்பிடங்களின் பேரழகு குறித்து வாசகர் கடிதம் எழுதுகிறேன் பூங்காக்களை விட பெரு மரங்கள் நிற்கிற மயானங்கள் அழகானவைகள் என்று சுவரொட்டிகள் ஒட்டுகிறேன் வெறும் மண்ணாலாகிய இந்த பூமியை விட மாய விண்வெளியே நிரந்தரம் என்று இப்பொழுதெல்லாம். விடுமுறை வேண்டும் உடல் எதைப் பற்றியும் கவலை இல்லை உடலுக்கு தன்னைப் பற்றியே பெரும் கவலை கொள்கிற உடல் முடிந்த போதெல்லாம் விடுமுறை கேட்டு நச்சரிக்கிறது பேருந்துப் பயணம் ரயில் பயணம் அலுவலகம் என எதுவும் வேண்டாம் என்று அடம் பிடிக்கிறது சும்மா ஒரு பனை மரத்தைச் சுற்றியிருக்கும் முசுமுசுக்கைச் செடி (சாறுண்ணி) போல் அல்லது வற்றிய கண்மாயின் அளிச்சகதியில் புரளும் எருமை என எப்படியும் இருப்பேன் என்கிறது விடுமுறை விடுமுறை எனும் யாசகச் சொற்களை பரப்பிக் கொண்டே அலைகிறது எதுவும் செய்யாமல் அக்கடா என்று சும்மா கிடக்கும் ஆனந்தம் பற்றிய அனேக நிறமிகளை மூளைக்கு அனுப்பிய வண்ணம் இருக்கிறது மிகுதியும் கனவு காணும் விருப்ப்த்துடன் வெண்சிவப்பு மதியங்களில் கொட்டாவி விடுகிறது எனது உடல் என்னைவிட்டு வேறு யாரிடம் கேட்கும் என சம்மதித்தபடியே இருக்கிறேன். அழகென்னும் அபாயம் ஒரு நெடுஞ்சாலைப் பயணத்தில் ஊர்தி எந்திரம் நிறுத்தி சாலையோரம் கொஞ்சம் நடந்து ஓங்கி வீசுகிற காற்றில் நிரம்பியபடி சிறுமரக் கூட்டமொன்றை நெருங்குகின்றேன் நுணா மரப் புதரொன்றில் ஒரு சிறு பறவை இறகுகள் அடர் சிவப்பு கழுத்து மயில் நீலம் உருண்டை வயிறு சாம்பல் நிறம் கொண்டை மஞ்சள் நிறம் கண்கள் என்ன நிறம்? கால்கள் பசுமஞ்சள் நிறம் விரல்கள் அரக்கு நிறம் நிற்கிற மரமோ மர நிறம் அந்த இத்தினியூண்டு பறவை கொண்டையை ஆட்டி ஒரு வினோதக் கூவலை எழுப்பியபோது என் பெரு நகர ஆத்மாவின் தலை வெட்டுண்டு உருண்டது மரணத்தின் விளிம்பை ஒரு நடனக் கூடமாக்கியது என் உடல் கூவல் முடித்து பறவை விருட்டென்று பறந்தோடியதும் உயிர் மீட்டு ஓர் குழந்தையாக நின்றேன். இடுகையிட்டது சமயவேல் நேரம் 19:20 2 comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest லேபிள்கள்: கவிதைகள் Thursday, July 30, 2009 என்னைப் பற்றி சமயவேல் எட்டையபுரம் அருகில் உள்ள வெம்பூர் என்ற கிராமத்துக்காரன் . முதல் கவிதைத் தொகுப்பு : காற்றின் பாடல் அடுத்து கொஞ்சம் இடைவெளிக்குப்பிறகு : அகாலம் பிறகு நண்பர் எஸ். இராமகிருஷ்ணனின் அட்சரம் இதழில் வந்த கவிதைகள் என மொத்த கவிதைகளும் அரைக்கணத்தின் புத்தகம் உயிர்மை பதிப்பகம் கொண்டு வந்தது. தெற்கிலிருந்து சில கவிதைகள் என்ற தொகை நூலும் வந்திருக்கிறது. இடுகையிட்டது சமயவேல் நேரம் 18:54 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest சமயவேல் கவிதைகள் இந்த இரவு நான் அருந்திக் கொண்டிருப்பது எனக்குப் பிடித்த ரம் இல்லை வெறும் ஆப்பிள் ரஸம் தான் எனினும் இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது நாம் நடந்து வரும் பொழுது எவ்வளவோ வாகனங்கள் நம்மைக் கடந்தன எவ்வளவோ நாம் பார்த்துவிட்டோம் நாம் விவாதிப்பதற்கு ஒரு பொருளும் இல்லை நடந்த மரணங்களும் வரும் மரணங்களும் உறையச் செய்த நம் மெளனங்களின் இடைவெளிகளில் இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது பக்கத்தில் ஆளுக்கொரு பானம் அருந்தியபடி சிரித்துக் கொண்டிருக்கும் இளம் முகங்களில் பறக்கும் சிட்டுக் குருவிகளை நாம் நன்கறிவோம் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறோம் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறோம் ஆப்பிள் ரஸத்தின் இரத்தம் போன்றதோர் நிறம் கோமியம் போன்றதோர் அதன் வாசம் எல்லாவற்றிற்குமான மாயத் திறவுகோலை ஏதோ ஒரு சாலைத் திருப்பத்தில் எப்பொழுதோ நாம் தூக்கி எறிந்து விட்டோம் நமது சிகரட்கள் நம்மை சுவாசிக்கும் நறுமணத்தில் இந்த இரவு நிறைந்து தளும்பிக் கொண்டே இருக்கிறது. (நண்பர் இராஜமார்த்தாண்டனுக்கு) ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் கசாப்புக் கடையின் வெட்டுமரத்தோடு முடிந்துவிடும் என்று நீங்கள் வருத்தப்படவோ பகடி செய்யவோ வேண்டாம் ஓங்கிய அரிவாளின் கீழே தலையில் தண்ணீர் ஊற்றப்படும் பொழுது கூட மரணம் பற்றிய பிரக்ஞையற்று குலுக்கி எறிவோம் ஓர் உடல்மழையை; உள்ளக இடம்பெயர் மனித முகாம்கள் பக்கத்து நாட்டின் அகதி முகாம்கள் எல்லையோர தற்காலிகக் கொடுஞ் சிறைகள் விசாரணைக் கொட்டடிகள் வீட்டுக் காவல்கள் என்று வதைபடும் மனிதர்களை விட எத்தகு மேன்மையான வாழ்வுடன் நாங்கள் புல்வெளிகளில் அலைகிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள் எங்கள் மேய்ப்பர்கள் பெற்ற காசுக்காக நாங்கள் கொல்லப் படுவதில் ஒரு அறம் இருக்கிறது ஆனால் நீங்கள் எந்த அறமும் அற்று ஒருவரை யொருவர் கொல்வது பற்றி உங்களால் மே என்று கூட கத்த முடியாது எங்கள் கொலைகளின் கதறல்களுக்கும் உங்கள் கொலைகளின் கதறல்களுக்கும் நடுவில் ஒரு சிறு கிறுக்கலைக் கூட உங்களால் வரைய முடியாது. 2 இருமைகள் என்பது எதார்த்தம் எனில் அதில் ஒரு கை அள்ளி என் கண்களைக் கழுவுவேன் இரவு பகலோ, இறப்போ பிறப்போ இருமைகள் றெக்கைகளாக ஒரு பறவைக் கூட்டமாய் பழுப்பு வானில் பறந்து திரிவேன் மூன்றாம் நான்காம் அடுக்குகள் தேடி அதல பாதாளம் மூழ்கிப் பார்ப்பேன் இதுவும் அதுவும் கவ்வி முயங்கும் இடமோ பொழுதோ வெளியோ சிந்தும் இன்மையின் இனிமையை பருகி மகிழ்வேன் ஒரு சிறு ஆட்டுக் குட்டியல்ல நான் எல்லாப் புள்ளிகளிலும் இருக்க முடிகிற ஒரு முடிவிலி எனக்குள் சுழல்கிறது அதன் வெண்மணற் பரப்பில் கோபுரங்களும் மலைகளும் கடல்களும் நகரங்களும் ஆகாயமும் கூட சிப்பிகள் போலவும் நுரைச்செடிகள் போலவும் புதைந்து கிடக்கின்றன என் புல் வெளியில் மரணம் ஒரு சர்ப்பமென சரசரத்து வருகையில் நான் ஒரு நாகலிங்க மரமாவேன் என் கழுத்தைத் தழுவி ஆயிரம் நாகங்கள் பூக்களாய் தொங்கும் எங்கிலும் என்றென்றைக்கும் ஆனவன் நான். OOOOOOOO புராதனத் தோழிக்கு ஓவியப் பெண்ணின் இமைகளின் அடியில் பழந் தூரிகையின் மந்திர வரைவில் சிக்குண்டு தள்ளாடும் நாரையின் கால்களில் தொங்குகிறது என் சிற்றிதயம் இரகசியமாக அடிக்கடி திறந்து திறந்து மூடுகிறது ஓவியம் பிறிதொரு நாள் திடீரெனக் கண்டுபிடிக்கிறேன் புதைந்திருப்பது தோழியே உனது கண்களென புராதனத்திலும் நீ யென் தோழியா தெரியாது என மூடுகிறது ஓவியம் கொடிய தூக்க மாத்திரைகளும் அழிக்க முடியாத ஒரு கனவில் நாம் புணர்ந்து கிடந்ததை ஒப்புக் கொள்ள முடியாமல் அறைக்குள் இரவு கருகத் தொடங்கியது உன் உடல்மொழிகளின் மேல் ஒருபோதும் மோகம் கொள்ளாத என் பண்பாடு அக ஆழங்களில் நீந்தும் ஊதா மீன்களைக் கொல்ல முடியாமல் புராதன ஓவியனின் தூரிகையில் உன் அடர்ந்த இமைகளுக்கடியில் பழுப்பு வர்ணமாய் வழிகிறது.

No comments:

Post a Comment