Monday, February 22, 2021

மகாசுவேதா தேவி

மகாசுவேதா தேவி (Mahasweta Devi, 14 சனவரி 1926 — 28 சூலை 2016)[2][3] வங்காள எழுத்தாளர் மற்றும் பீகார், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் முதலான பகுதிகளின் பழங்குடி மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவர். இவர் இலக்கியக் குடும்பத்தில் பிறந்தவர். ரமன் மெகசசே விருது, நாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது, சாகித்ய அகாதமி, பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் முதலான பல விருதுகள் பெற்றவர். இவரது நூல்கள் ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது கதைகள் பல திரையுருவம் பெற்றுள்ளன. பொருளடக்கம் [மறை] • 1விருதுகள் • 2மறைவு • 3மேற்கோள்கள் • 4வெளியிணைப்புகள் விருதுகள்[தொகு] • 1979: சாகித்திய அகாதமி விருது (வங்காள மொழி): – அரன்யெர் அதிகார் (Aranyer Adhikar) (புதினம்)[4] • 1986: சமூகப்பணிக்காக பத்மசிறீ விருது[4][5] • 1996: ஞானபீட விருது[4] • 1997: ரமோன் மக்சேசே விருது[3][6] • 1999: மதிப்புறு முனைவர் பட்டம் – இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் • 2006: பத்ம விபூசண் – [4] • 2009: மான் புக்கர் பன்னாட்டுப் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்[7] • 2010: யஷ்வந்த்ராவ் சவான் தேசிய விருது[8] • 2011: வங்க பிபூஷண் (Banga Bibhushan) – மேற்கு வங்காள அரசு[9] மறைவு[தொகு] மகாசுவேத்தாதேவி 2016 சூலை 23 இல் மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 2016 சூலை 28 வியாழக்கிழமை தனது 90வது அகவையில் காலமானார்.[10][11] புகழ்பெற்ற வங்க மொழி மூத்த எழுத்தாளரும், பழங்குடி மக்கள் தொண்டருமான மஹாஸ்வேதா தேவி காலமானார் புகழ்பெற்ற வங்க மொழி எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளரும், பழங்குடி மக்கள் தொண்டருமான மஹாஸ்வேதா தேவி வியாழக்கிழமையன்று கொல்கத்தாவில் காலமானார். இவருக்கு வயது 90. இவர் கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி தெற்கு கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ரத்தத்தில் தீவிர கிருமி தொற்று ஏற்பட்டு ரத்தம் அசுத்தமாயிருந்தது, மேலும் சிறுநீர்ப்பாதை நோயும் இருந்து வந்தது. சர்க்கரை நோயும் இவருக்கு இருந்தது, இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மதியம் 3 மணியளவில் இவரது உயிர் பிரிந்தது. 1940-களில் கம்யூனிஸ்ட் இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டு மேற்கு வங்கத்தின் ஏழ்மையிலும் ஏழ்மையான பழங்குடி மக்களிடையே சமூகப் பணியில் ஈடுபட்டார். பழங்குடி மக்கள் உரிமைக்காக போராடியவர்களில் மஹாஸ்வேதா தேவி குறிப்பிடத்தகுந்தவர். வங்க மொழி திரைப்பட இயக்குநர் ரித்விக் கட்டக் இவரது மாமா. வங்க மொழி இலக்கியம் மற்றும் நாடகத்துறை எழுத்தாளர் பைஜன் பட்டாச்சார்யா இவரது கணவர். ஒரு அறிவார்த்த சூழலில் மஹாஸ்வேதா தேவி தன் சமூகப்பணியில் சந்தித்த மனிதர்கள் பெரும்பாலோனரை தனது கதை மாந்தர்களாக படைப்பில் சித்திரப்படுத்தியுள்ளார். இவரது மொழி நடை சிக்கல் நிரம்பியது. அதாவது ஒரு புதிர்ப்பாதையில் பயணிப்பது போன்ற நடையாகும். பிரதமர் மோடி தனது ட்வீட்டில் அஞ்சலி செலுத்தும்போது, “பேனாவின் வலிமை என்ன என்பதை மஹாஸ்வேதா தேவி எடுத்துக்காட்டியவர். கருணை, சமத்துவம், மற்றும் நீதியின் குரல் அவருடையது. அவரது மறைவு நம்மிடையே ஆழ்ந்த வருத்தங்களை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா தனது ட்வீட்டில், “இந்தியா ஒரு மகத்தான எழுத்தாளரை இழந்து விட்டது. வங்காளம் அதன் ஒளிமிகுந்த தாயை இழந்து விட்டது, நான் எனது சொந்த வழிகாட்டியை இழ்ந்துள்ளேன் அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று கூறியுள்ளார். மஹாஸ்வேதா தேவி (1926-2016) ஒரு சிறு குறிப்பு: மஹாஸ்வேதா தேவி 1926-ம் ஆண்டு டாக்காவில் பிறந்தார். இவரது தந்தை மணீஷ் கட்டக் நன்கு அறியப்பட்ட கவிஞர் மற்றும் நாவலாசிரியர். தாயார் தாரித்ரி தேவியும் எழுத்தாளர் மற்றும் சமூகப்பணியாளர். பிரிவினைக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் மஹாஸ்வேதா தேவி குடும்பம் குடியேறியது. ரவீந்திர நாத் தாகூரின் சாந்தி நிகேதனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தில் பி.ஏ. ஆங்கிலம் (ஹானர்ஸ்) முடித்தார். பிறகு கொல்கத்தாவில் எம்.ஏ. ஆங்கிலமும் முடித்தார். பைஜன் பட்டாச்சாரியாவை மணம் முடித்தார், இருவருக்கும் நபருன் பட்டாச்சரியா என்ற மகன் பிறந்தார், இவரும் பிற்பாடு இந்தியாவின் முன்னணி நாவலாசரியராக திகழ்ந்தார். 1959-ல் பைஜன் பட்டாச்சரியாவிடமிருந்து பிரிந்தார். 1964-ம் ஆண்டு முதல் இவர் பழங்குடியினருக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்கத் தொடங்கினார். பிஹார், மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் மாநில பழங்குடியினர் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகும் போது இவர் எதிர்த்துப் போராடினார், தீண்டாமையை எதிர்த்தும், அடக்குமுறையை எதிர்த்தும் போராடிய இவர் தன் கதைகளில் நிலப்பிரபுத்துவ, ஆதிக்க சாதி வன்முறைகளை கடுமையாக விமர்சித்தார். “உண்மையான வரலாற்றை உருவாக்குபவர்கள் சாதாரண மக்களே. நான் இவர்களை எழுதுவதற்குக் காரணம், இவர்கள் கடுமையாக சுரண்டப்படுபவர்கள், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படுபவர்கள். ஆனாலும் தோல்வியை ஏற்க மறுப்பவர்கள், அதனால்தான் இவர்கள் எனது எழுத்தில் அதிக தாக்கம் செலுத்திவருகின்றனர். என்னுடைய எழுத்து இம்மக்களின் செயல்” என்று அவர் ஒரு முறை கூறினார். இவரது சமூகப்பணிகளுக்காக மகசசே விருது அளிக்கப்பட்டது. இவரது பிரெஸ்ட் ஸ்டோரிஸ் என்ற சிறுகதைத் தொகுதி ஒடுக்கப்பட்ட, பழங்குடி பெண்களின் வாழ்க்கையை அதன் அத்தனை கொடூரங்களுடனும் கூட இயல்பான அவர்களது வாழ்க்கையை பிரதிபலிப்பதாக அமைந்ததாகும். ஸ்தனதாயினி என்ற கதை இதற்குச் சான்று. மேல் சாதியினரின் மூடநம்பிக்கைகள், மதநம்பிக்கைகள் எப்படி படிப்பறிவில்லாத ஏழை ஜனங்களை கடுமையாகச் சுரண்ட, ஏமாற்ற, அவர்களை ஒன்றுமில்லாமல் அடித்து பிச்சைக்காரர்களாக மாற்ற பயன்படுத்தப்பட்டது என்பது இவரது கதைகளில் அடியோட்டமாக செல்லும் ஒரு வரலாற்று இழையாகும். சோட்டி முண்டா அண்ட் ஹிஸ் ஏரோ என்ற நாவல் மேஜிக்கல் ரியலிச வகையைச் சேர்ந்ததாகும். இதில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு அறியாத வேறொரு அடித்தட்டு மக்கள் வரலாறு சிதறிக் கிடக்கும். இன்னும் சொல்லப்போனால் இதில் சித்தரிக்கப்படும் முண்டா மனிதர்கள் சுதந்திரப் போராட்டம் என்ற ஒன்று நடைபெற்று வந்ததையே அறியாதவர்கள். இந்த நாவலும், இவரத் இமேஜினரி மேப்ஸ் என்ற படைப்பும். பிரெஸ்ட் ஸ்டோரிஸ் கதைகளும் மிகச்சிறந்த பின் அமைப்பு வாத விமர்சகர் காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது. டஸ்ட் ஆன் தி ரோட், ‘அவர் நான் வெஜ் கவ்’, அவுட் காஸ்ட், திரௌபதி ஆகியவை உள்ளிட்ட படைப்புகளும் குறிப்பிடத்தகுந்த விமர்சன கவனத்தை ஈர்த்துள்ளன. இவரது படைப்புகள் சில திரைப்பட ஆக்கங்களாகவும் வந்துள்ளன. இவரது கதைகள் பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழிலும் இவரது கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. காடுகளை அக்ரமித்தல் என்ற இவரது படைப்புக்கு 1979-ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது அளிக்கப்பட்டது. 1996-ம் ஆண்டு ஞானபீட விருதையும் பெற்றார் மஹாஸ்வேதா தேவி. பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், மகசசே ஆகிய விருதுகளையும் வென்றுள்ளார் இவர். மஹாஸ்வேதா தேவி எழுதிய புகழ்பெற்ற ‘திரௌபதி’ சிறுகதையின் இறுதிப் பகுதி… (தமிழாக்கம் : என்.எஸ்.ஜெகந்நாதன்) …. மாலை ஆறுமணிக்கு தோப்தி அப்ரிஹெண்ட் ஆனாள். அவளை காம்ப்புக்கு அழைத்துச்செல்ல ஒருமணிநேரம் பிடித்தது. கேள்விகள் சரியாக ஒருமணிநேரம் பிடித்தன. ஒருவரும் அவள் மேல் கை வைக்கவில்லை. ஒரு கான்வாஸ் ஸ்டூலில் உட்கார வைக்கப்பட்டாள். எட்டு ஐம்பத்தேழுக்கு அதிகாரியின் டின்னர் டைம். “அவளைக் கவனித்துக்கொள். டூ தி நீட்•புல்” என்று சொல்லிவிட்டு அதிகாரி அந்தர்தியானமானார். பிறகு பத்து லட்சம் சந்திரர்கள் தோன்றி மறைந்தனர்.. பத்துலட்ச சந்திர வருடங்கள் கடந்தன. ஒரு லட்சம் ஒளி வருடங்களுக்குப் பிறகு திரௌபதி கண்ணைத் திறக்கிறாள். என்ன அதிசயம்! வானையும் சந்திரனையும்தான் முதலில் பார்க்கிறாள். பிறகு அவளுடைய மனதிலிருந்து ரத்தம் தோய்ந்த நகநுனிகள் நகர்ந்து நகர்ந்து நகர்ந்து செல்கின்றன, தான் அசைய முயன்றபோது கால்களும் கைகளும் கட்டில் கால்களில் கட்டப்பட்டிருப்பதை உணர்கிறாள். ஆசனத்திலும், இடுப்பிலும் இது என்ன ‘பிசுக், பிசுக்’ என்று..? அவளுடைய ரத்தம். வாயில் சுருட்டி அடைக்கப்பட்ட துணி மட்டும் இப்போது அங்கில்லை. தாங்க முடியாத தாகம். ‘தண்ணீர்’ என்று கேட்க வாயை அசைக்க முயன்ற கணத்திலேயே பற்களால் கீழ் உதட்டைக்கடித்து வார்த்தையை விழுங்குகிறாள். தனது அல்குலில் ரத்தப் பெருக்கை உணர்கிறாள். எத்தனை பேர் தன்னைப் புணர்ந்திருக்கிறார்கள்… கண்களின் ஓரத்தில் நீர் சுரந்தபோது வெட்கமடைந்தாள். கலங்கிய நிலவொளியில் பார்வையற்ற தன் கண்களைத் திருப்பி தன் முலைகளைப் பார்க்கிறாள். நன்றாக ‘கவனிக்கப்பட்டிருப்பதை’ உணர்கிறாள். இந்தமுறை ராணுவ அதிகாரிக்கு பூரண திருப்தி கிடைத்திருக்கும். அவளுடைய முலைக்காம்புகள் கடித்துக் குதறப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தன. எத்தனை பேர்? நான்கு? ஐந்து? ஆறு? ஏழு? திரௌபதி மூர்ச்சையடைகிறாள். கண்களைத் திறந்து பார்க்கும்போது, பக்கத்தில் வெண்ணிறமான ஒன்றைப் பார்க்கிறாள். அவளுடைய உடை . வேறொன்றும் கண்ணில் படவில்லை. திடீரென ஆண்டவன் அருள் மேல் நம்பிக்கை சுரக்கிறது. ஒருவேளை அவளை விட்டெறிந்திருக்கிறார்கள் – நரிக்கு உணவாக.. ஆனால் காலடிகளின் ஒலி கேட்கிறது. தலையைத் திருப்பிப் பார்க்கும்போது பயனெட் ஏந்திய கார்ட் ஒருவன் சுற்றி வருவது தெரிகிறது. அவன் கண்களில் காமம் புகைந்து கொண்டிருக்கிறது. உதட்டில் வெறிச் சிரிப்பு. திரௌபதி கண்களை மூடிக்கொள்கிறாள். வெகுநேரம் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. மறுபடியும் அவளைக் ‘கவனித்துக் கொள்ளும்’ பணி தொடங்குகிறது. தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு துண்டு வெளிச்சத்தைக் கக்கிவிட்டு நிலவு தூங்கப்போய்விட்டது. இருள் மட்டுமே மிஞ்சியது. கைகளும் கால்களும் கட்டப்பட்டு, படுக்க வைக்கப்பட்ட அசையாத பெண் தேகம். அதன்மேல் சுறுசுறுப்பாக இயங்கும் தசைகளால் செய்யப்பட்ட பிஸ்டன்கள் ஏறுகின்றன, இறங்குகின்றன, ஏறுகின்றன, இறங்குகின்றன.. மறுபடியும் காலை வருகிறது. தோப்தி மேஜேன் கூடாரத்திற்குக் கொண்டுவரப்பட்டு வைக்கோல் போரின்மேல் தூக்கி எறியப்படுகிறாள். அவள் உடல்மேல் அவளுடைய ஆடை வீசப்படுகிறது. பிரேக்ஃபாஸ்ட், தினசரி பத்திரிகைகள் படிப்பது எல்லாம் முடிந்து, ‘திரௌபதி மேஜேன் அப்ரெஹெண்டட்’ என்ற ரேடியோ மெசேஜ் அனுப்பப்பட்ட பிறகு, அந்த ராணுவ அதிகாரி திரௌபதி மேஜேனை தன்முன் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டார். திடீரென ஒரு விபரீதம் நிகழ்கிறது. “உம். கிளம்பு” என்ற உத்தரவு வந்தவுடனே, திரௌபதி எழுந்து உட்காருகிறாள். “எங்கே போகச் சொல்கிறாய்?” என்று கேட்கிறாள். “பெரிய தொரை கூடாரத்துக்கு” “எங்கே இருக்குது?” “அதோ அங்கே” திரௌபதி தன் சிவந்த கண்களை அருகிலேயே இருந்த அந்தக் கூடாரத்தின் மேல் திருப்புகிறாள். “சரி, நீ போ. நான் வருகிறேன்.” என்கிறாள். சென்ட்ரி ஒரு தண்ணீர்க் குவளையை அவள் முன்னால் தள்ளுகிறான். திரௌபதி எழுந்து நிற்கிறாள். குவளையை உதைத்து தண்ணீரைத் தரையில் கொட்டுகிறாள். தன் துணியை பல்லால் கடித்துக் குதறுகிறாள். இந்த அதிசய நிகழ்ச்சியைக் கண்ட சென்ட்ரி “பைத்தியமாயிட்டா! பைத்தியமாயிட்டா!” என்று கூச்சலிட்டுக்கொண்டே மேலிட ஆணைக்காக ஓடுகிறான். சாதாரணக் கைதிகளை அவனால் சமாளிக்க முடியும். ஆனால் புரியாதபடி இப்படி நடந்து கொள்ளும் கைதியை சமாளிப்பது அவனால் இயலாத காரியம். ஆகவேதான் அவன் மேலதிகாரியின் உத்தரவிற்காக ஓடுகிறான். ஜெயிலில் ‘பைத்தியக்கார மணி’ அடிக்கும்போது இப்படித்தான் அங்குமிங்கும் ஓடுவார்கள். கூச்சல் குழப்பத்தைக் கேட்டு ராணுவ அதிகாரி கூடாரத்திலிருந்து வெளியே வருகிறார். கண்ணைக் கூசவைக்கும் சூரிய ஒளியில் நிமிர்ந்த தலையுடன் முழுநிர்வாணமான திரௌபதி தன்னை நோக்கி நடந்து வருவதைப் பார்க்கிறார். ஆயுதம் தரித்த ஸெண்ட்ரிகள் நடுங்கிக் கொண்டே அவள் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள். “இதெல்லாம் என்ன?” என்று கேட்கத் தொடங்கிய அவர் மௌனமாகி விடுகிறார். திரௌபதி அவர் முன்னால் வந்து நிற்கிறாள். நிர்வாணமான தொடையிலும் அல்குலிலும் தோய்ந்து உறைந்து போன ரத்தம். இரண்டு முலைகளிலும் ரணங்கள். “இதெல்லாம் என்ன..?” அவர் அச்சுறுத்தப் பார்க்கிறார். திரௌபதி மேலும் அருகில் நெருங்குகிறாள். இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு சிரிக்கிறாள். “நீ தேடிக்கிட்டு இருந்தியே அந்த தோப்தி மேஜேன் நான்தான்..! ‘கவனிச்சுக்க’ன்னு சொன்னேயில்ல? அவங்க எப்படி கவனிச்சாங்கன்னு நீ பார்க்க வேண்டாமா..?” “இவ துணியெல்லாம் எங்கே..?” “உடுத்த மாட்டேங்குறா சார்! கிழிச்சுப் போட்டுட்டா..” திரௌபதியின் கரிய உடல் மேலும் அருகில் வருகிறது. அதிகாரிக்குப் புரியாத ஆவேசத்துடன் சிரித்துக் குலுங்குகிறாள். சிரிக்கச் சிரிக்க, குதறப்பட்ட உதடுகளிலிருந்து ரத்தம் பெருக்கெடுக்கிறது. அந்த ரத்தத்தை புறங்கையால் துடைத்துக் கொண்டு வானத்தைக் கிழிக்கும் பயங்கரக் குரலில் கேட்கிறாள்: “துணி என்ன துணி..? யாருக்கு வேணும் துணி? என்னை நிர்வாணமாக்க உன்னால முடியும். ஆனால் என்னை திரும்ப உடுத்த வைக்க முடியுமா உன்னால? சீ.. நீ ஒரு ஆம்பிளையா..?” நாலாபக்கமும் பார்த்துவிட்டு ராணுவ அதிகாரியின் தூயவெள்ளை புஷ் ஷர்ட்டின் மேல் ரத்தம் கலந்த எச்சிலை ‘தூ..’ என்று துப்புகிறாள். “நான் பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பிள இங்க யாருமில்ல. என்மேல் துணியைப்போட எவனையும் விட மாட்டேன். அப்போ என்ன செய்வே? வா.. கௌண்டர் பண்ணு.. வா.. கௌண்ட்டர் பண்ணு..” அருகில் நெருங்கி சிதைக்கப்பட்ட இரு முலைகளையும் அதிகாரியின் மேல் உரசுகிறாள். தனது ஆயுளில் முதல்முறையாக ஒரு நிராயதபாணியான டார்கெட் முன்னால் நிற்க ராணுவ அதிகாரி பயப்படுகிறார். அது ஒரு அமானுஷ்ய பயம். ஆதிவாசிப் பழங்குடி மக்கள் குறித்தும்,மனித உரிமைகள் பற்றியும் மிகுதியாக எழுதியும் பேசியும் வந்தவர் என்பதோடு மட்டுமல்லாமல் அந்த நிலைப்பாட்டோடு கூடிய தீவிரக்களச் செயல்பாட்டாளராகவும் விளங்கிய சமூகப்போராளியான [social activist]மஹாஸ்வேதாதேவி காலமான செய்தியில் வங்கமே இருண்டு கிடப்பது போல் இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த அந்த வங்காள மொழி எழுத்தாளரை ஆங்கில மற்றும் தமிழ்ப்பெயர்ப்புக்கள் வாயிலாக அறிந்து கொள்ள நேர்ந்தது என் பேறு. மதுரையில் இருந்த காலகட்டத்தில் ம கா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த பணியிடைப்பயிற்சியில் இளம் ஆசிரியர்களுக்கு வகுப்பெடுக்கும் வாய்ப்பு வாய்த்தபோது ஒரு பிற்பகல் அமர்வு முழுவதையும் மஹாஸ்வேதா தேவியின் 1084 இன் அம்மா என்னும் அற்புதமான நாவலை அறிமுகம்செய்வதில்மட்டுமே செலவழித்தேன்...வங்கத்தில் நக்ஸல் இயக்கம் தீவிரம் பெற்றபோது உயர் வர்க்கம் சார்ந்த குடும்பத்து இளைஞன் ஒருவன் அதில் போய் இணைவதையும்...அது சார்ந்த அந்தக்குடும்பத்தாரின் எதிர்வினைகளையும் வெளிப்படுத்தும் அந்தப்படைப்பில் - எல்லாவற்றையும் விட முதன்மையாக அந்தத் தாயின் உள்ளம் கொண்ட தவிப்பை......எந்த நிமிடத்தில் அந்தப்பொறி மகனின் மனதில் விழுந்தது என அறியாமல் பரிதவித்தபடி அவனுக்காகத் துடிக்கும் தாய் நெஞ்சை மிக அழகாக விண்டு வைத்திருப்பார் மஹாஸ்வேதா தேவி அது நாள் வரை அவர் பெயரையோ படைப்புக்களையோ அறியாமல் இருந்த அந்த இளம் ஆசிரியக்கூட்டம் உண்மையான இலக்கியத்தின் சுவையை, குறிப்பிட்ட இலக்குகளோடு கூடிய ஒரு படைப்பாளியை அறிந்து நெகிழ்ந்தது; ..அதற்கு நானும் ஒரு கருவியானேன் என்பதில் மகிழ்ச்சி... அந்த நாவல் ஜெயா பாதுரியின் நடிப்பில் ’ஹசார்சௌரசி கி மா’ என்னும் பெயரில் இந்தி திரைப்படமாகவும் வெளி வந்திருக்கிறது. பரீக்ஷா ஞாநியும் அந்தக்கதையை நாடகமாக மேடை ஏற்றியிருக்கிறார்... ஒரு பக்கம் பெண்ணின் தாய்மையைப்போற்றிக்கொண்டே இன்னொரு புறம் அந்தத் தாய்மைக்கானசின்னங்களை இழிவுபடுத்தும் ’சோளி கேபீசே க்யா ஹை ’ என்ற பிரபலமான இந்திப்பாடலை எதிர்த்து அதே தலைப்பில் தன் சிறுகதையால் அதற்கு எதிர்வினை அளித்தார்ஸ்வேதாதேவி... பீர்சா முண்டாவின் கதையைக் ‘’காட்டின் உரிமை’’ என்றபெயரில் எழுதியதற்காக சாகித்தியாக அகாதமி விருதையும் [1979],, ஞான பீடவிருதையும் பெற்றிருக்கும் இவர் எழுத்தோடு நின்றுவிடாமல் இயங்கவும் செய்தவரென்பதை அவர்ஞானபீடம் பெற்றபோது நடந்த ஒரு நிகழ்வே என்றும் சொல்லிக்கொண்டிருக்கும். இந்தியக்குடியரசுத் தலைவரின் கரங்களால் மஹாஸ்வேதாதேவி ஞானபீட விருது வாங்கவிருந்த மகத்தான ஒரு தருணம் ; அதே நேரத்தில்...ஆந்திரச் சிறையில் மறுநாள் தூக்குதண்டனைக்குக் காத்திருக்கும் மூன்று பேர். மரணதண்டனை என்பது மனித உரிமைக்கு எதிரானது என்ற கருத்தைக்கொண்டிருந்தவரான மஹாஸ்வேதாதேவி, அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனிடமிருந்து ஞானபீட விருதைப்பெற்றுக்கொள்வதற்கு முன் ‘’நானும் உங்களுக்கு ஒன்று தர விரும்புகிறேன்’’என்று கூறியபடியே ஒரு கடிதத்தை அவர் கையில் தருகிறார். புகழ்பெற்ற ஒரு படைப்பாளி தனக்குத் தரும் அந்தத் தாளைக் குடியரசுத் தலைவரும் ஆர்வத்தோடு வாங்கிக் கொள்கிறார். அது.... தூக்குக்கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் மூன்றுபேருக்காக மஹாஸ்வேதா தேவி அளித்திருக்கும் கருணை மனு. அதை உரிய இடத்தில் சேர்ப்பித்துவிட்ட நிறைவோடு அதன் பிறகே தனக்குரிய விருதைப்பெற்றுக் கொள்கிறார் அவர், கருணை மனு தரப்பட்டு விட்டால் அதன் மீது முடிவு அறிவிக்கப்படும்வரை தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்பது சட்டம்; கருணை மனு தரப்பட்டிருக்கும் செய்தி உச்ச நீதிபதியை அடைந்து - குடியரசுத் தலைவர் முடிவெடுக்கும் வரை தண்டனையை நிறுத்தி வைக்கும் நீதிமன்றஉத்தரவு விடியற்காலை 3 மணிக்கு சிறையை வந்தடைகிறது.காலை 4.30க்கு மரணத்தின் வாயில் திறக்கப்போகிறது என நினைத்துக் கொண்டிருந்த குற்றவாளிகள் நிம்மதிப்பெருமூச்சு விடுகிறார்கள். அதன் பிறகு ஒரு இடைவெளிக்குப் பின் அந்த மனுவைப்பரிசீலித்த குடியரசுத் தலைவர் அந்தக்குற்றவாளிகள் செய்திருப்பது கொலையே என்றாலும் அதற்கு மரணதண்டனை தேவையில்லை என முடிவெடுத்து அதை ஆயுள் தண்டனையாக மாற்றுகிறார்... தனது எழுத்து வெறும் வாய்ச்சொல் வீரம் பேசுவது மட்டும் அல்ல என்பது, அவரால் உறுதி செய்யப்பட்ட அபூர்வக்கணம் அது... அவருக்கு உள்ளார்ந்தவணக்கமும் நெகிழ்வுமாய்க்கரம் கூப்பி அஞ்சலி செலுத்துவதோடு அவரது படைப்புக்களில் ஒன்றான குந்தியும் நிஷாதப்பெண்ணும் என்னும் சிறுகதை பற்றி முன்பு நான் எழுதிய கட்டுரையை மீள் பதிவு செய்கிறேன்... குந்தியும் நிஷாதப்பெண்ணும் விளிம்புநிலை மக்களைத் தங்களின் சுயநலத்துக்காகக் காவு கொடுக்கும் அதிகார வர்க்கத்துக்கு ஒரு சாட்டையடியாக அமைந்திருப்பது வங்கமொழி இலக்கியத்தின் புகழ் மிக்க படைப்பாளியும்,சமூகப் போராளியுமான மகாஸ்வேதா தேவியின் ’குந்தியும் நிஷாதப் பெண்ணும்’என்னும் மீட்டுருவாக்கச் சிறுகதை. இன்றைய சமூகத் தளத்திலும் -கூடங்குளம் முதல் முல்லைப் பெரியாறு வரை...பல வகையான அர்த்தப் பரிமாணங்களிலும் வைத்து வாசிக்க இடம் தரும் அந்தக் கதை குறித்துச் சில பகிர்வுகள்... பாரதப் போர் முடிந்த பின்பு வானப் பிரஸ்தவனவாசம் மேற்கொள்ளும் திருதிராஷ்டிரனுக்கும்,காந்தாரிக்கும் உதவியாகத் தானும் உடன் சென்று காட்டில் - பர்ணசாலையில் அவர்களோடு தங்கிப் பணிவிடை செய்கிறாள் குந்தி.தன் மகன்களால் காந்தாரியின் பிள்ளைகள் ஒட்டு மொத்தமாகக் கொன்றழிக்கப்பட்ட குற்ற உணர்வின் உறுத்தலும் அவளுக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது.காந்தாரியோ வருவதை ஏற்பகும் பக்குவம் கொண்டவளாக...குந்திக்கும் கூட ஆறுதல் சொல்லித் தேற்றுபவளாக-வரப் போகும் மரணத்தை அமைதியோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு நிதானத்தோடு இருக்கிறாள்.குந்திக்கு.. எப்போதுமே ஒரு பதற்றம்...தான் செய்த தவறுகளை யாருமற்ற அந்தத் தனிமைச் சூழலில் நினைத்துப் பார்க்கும்போது அவள் நெஞ்சே அவளைத் தீயாகச் சுடுகிறது. அன்றாடச் சமையலுக்கும் பூசைக்கும் தேவையான மரக்குச்சிகள் மற்றும் பிற பொருட்களைச் சேகரிக்க அந்தக் காட்டுக்குள் செல்லும் வேளைகளில் அங்கு நடமாடும் ’நிஷாத’ப் பெண்கள் பலரைக் காண்கிறாள் குந்தி.அந்த மலைக் காட்டையே தங்கள் வாழிடமாகக் கொண்டிருக்கும் காட்டுவாசிப் பெண்களான அவர்களை நகர நாகரிகங்கள் அதிகம் தீண்டியிருக்கவில்லை. மலையில் விறகு பொறுக்கித் தலைச் சுமையாகக் கட்டித் தூக்கிக் கொண்டு போகும் பல நடுத்தர வயது நிஷாதப் பெண்களின் உறுதியான உடல்வாகு, பேச்சு சிரிப்பு,இயற்கையின் மக்களாய் இயைந்து போகும் லாவகம்-இதெல்லாம் அரண்மனைக் கிளியாக மட்டுமே வாழ்ந்து ஆரண்ய வாழ்வை ஒரு சுமையாக-தண்டனை போலவே முன்பு எதிர்கொண்டிருந்த குந்தியை மலைக்க வைத்து வியப்பூட்டுகின்றன. ஆனாலும் அவர்களோடு அவள் எதுவும் பேசுவதில்லை.அவர்கள் பேசும் மொழியைத் தெரிந்து கொள்ள விரும்பியதுமில்லை.அரண்மனையில் பணி விடைசெய்த பெண்களிடமிருந்தே சற்று விலகியிருந்து பழகிய அரச குடியல்லவா அவளுடையது? அவர்களோடு உரையாடுவதில் அவளுக்கே உரித்தான ஓர் உயர்குடித் தயக்கம்.. மலைக் காட்டின் தனிமையில் வெறுமையில் பிரபஞ்சத்திடம்...இயற்கை அன்னையிடம் தான் செய்த குற்றங்களைச் சொல்லிப் புலம்பிக் கழுவாய் தேடிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது குந்திக்கு..தன் குற்றங்களிலேயே பூதாகாரமாக அவளுக்கு உறைப்பது கர்ணனுக்கு அவள் செய்த துரோகம்தான்..தானே விரும்பி வரவழைத்த சூரிய மணாளன் மூலம் பெற்ற கர்ணனை ஒரு முறை கூட மகனாக அங்கீகரிக்காமல்,அவன் கொண்ட சோகத்தைப் பற்றி ஒரு கணம் கூட சிந்தித்துப் பார்க்காத தன் மனத்தை அவளே குற்றம் சாட்டுகிறாள்.அரச வாழ்வுக்கே உரிய தருமத்தில் காவு கொடுக்க வேண்டியவைதான் எத்தனை எத்தனை...?பஞ்ச பாண்டவர்களும் கூட அவளுக்கும் மாத்ரிக்கும் வெவ்வேறு தேவர்கள் மூலம் ஜனித்தவர்கள்தான்..ஆனாலும் அது நிகழ்ந்தது பாண்டுவின் ஒப்புதலோடு.ராஜ குடும்பத்தின் சம்மதத்தோடு.கர்ணனைச் சுமந்தது இவளாய் விரும்பி ஏற்றது;அவனைத் துறந்ததும் அந்த ராஜ தருமம் கருதியதுதான்… தன் குழந்தையாக ஒரு பொழுதும் சீராட்டியிருக்காத கர்ணனைப் பாண்டவர் உயிர் காப்பதற்காக மட்டும் சந்திப்பதற்கும்,தாய் என்ற உரிமை பாராட்டிக் கொண்டு அவனிடம் அதை ஒரு கோரிக்கையாக வைப்பதற்கும் அவளுக்குத் தார்மீக உரிமை என்ன இருக்கிறது..? இதையெல்லாம் வாய் விட்டு அவள் புலம்பிக் கொண்டிருக்கும் அந்தத் தருணத்தில் சற்றுத் தள்ளியிருந்து நிஷாத இனப் பெண்கள் அவளைப் பார்த்துத் தஙளுக்குள் ஏதோ பேசிச் சிரித்துக் கொள்கிறார்கள்.அவளைப் பொறுத்தவரை அந்த மலைப் பாறைகளுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் அதிகமில்லை..எவருக்கும் எதுவும் புரியப் போவதில்லை.குந்தியின் புலம்பல் வடிகால் நாளும் தொடர்ந்து கொண்டே போகிறது.இப்போது சற்று வயதான ஒரு நிஷாத இனப் பெண் மட்டும் குந்தியைக் கொஞ்சம் நெருங்கி வரத் தொடங்கியிருக்கிறாள்.ஆனால்..குந்தி அவளைப் பெரிதாகப் பொருட்படுத்தியிருக்கவில்லை. ஒரு நாள் காடு வழக்கத்துக்கு மாறாகச் சலசலப்புக் கூடியதாக இருக்கிறது.பறவைகள் கூட்டைக் காலி செய்து விட்டு எங்கோ செல்கின்றன; நிஷாத இனப் பெண்களும் மூட்டை முடிச்சுக்களோடு வேறு இடம் பெயர்ந்து செல்ல முற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது குந்தியின் முன்வந்து நிற்கிறாள் அந்த வயதில் மூத்த நிஷாத இனப் பெண். ‘’என்ன குந்தி ..உன் பாவங்களையெல்லாம் சொல்லி முடித்து விட்டாயா இன்று சொல்ல எதுவும் மீதம் இல்லையா’’ என்கிறாள். குந்திக்கு வியப்பு. ‘’எங்களுக்கும் உங்கள் மொழி புரியும்,பேசவும் தெரியும்….ஆனால் அதைப் பற்றியெல்லாம் உனக்கென்ன கவலை..நாங்களெல்லாம் இதோ இங்கிருக்கும் மரங்களையும் கற்களையும் போலத்தானே உங்களுக்கு’’ என்கிறாள் அந்தப் பெண். ‘’என் பெயர் அது எப்படி..’’-இது குந்தி. ‘’ஓ அரச வம்சத்துப் பெண்ணின் பெயரைச் சொல்லி விட்டேனென்று அதிர்ச்சியாகிறாயோ..அத உன்னைக் காயப்படுத்துகிறது அப்படித்தானே…எனக்கு உன் பெயர் தெரியும் குந்தி..அதை என் நினைவில் முடிந்து வைத்திருக்கிறேன்…உனக்காகவே இத்தனை ஆண்டுகள் காத்துக் கொண்டும் இருக்கிறேன்.நாங்கள் நகரங்களுக்குள் அதிகம் பிரவேசிப்பதில்லை.என்றாவது ஒரு நாள் நீ இங்கே இந்தக் காட்டுக்கு வந்தே தீருவாய் என நான் காத்திருந்தேன்.அது உன் விதி.நான் காத்திருந்த அந்த நாள் இன்று வந்தே விட்டது.’’ அவள் எதை நோக்கிக் காய் நகர்த்துகிறாள் என்பது குந்திக்கு இன்னும் விளங்கவில்லை. ‘’இங்கே நீ நிராயுதபாணியாக நிற்கிறாய் குந்தி.உன் புதல்வர்கள் யாரும் இங்கில்லை.எங்களைத் தண்டிக்க அவர்கள் தங்கள் படைகளைக் கூட இங்கே அனுப்ப முடியாது.’’ ‘’நீ யார்..உனக்கு என்னதான் வேண்டும்’’என்கிறாள் குந்தி. ‘’உன்னுடைய மிகப் பெரிய பாவம் ஒன்றை நீ இன்னும் ஒப்புக் கொண்டாகவில்லை’’என்கிறாள் அந்தப் பெண். ‘’இல்லை நான் அதைச் சொல்லி விட்டேன்…உனக்குத்தான் அந்த மொழி புரியவில்லை’’ ‘’கர்ணனைப் பற்றிச் சொன்னதுதானே…உங்களைப் போன்ற அரச குடும்பத்தவர்களுக்கு வேண்டுமானால் அது ஒரு பாவச் செயலாக இருக்கலாம்....மனம் விரும்பிய காதலனோடு மகிழ்வதும் அவன் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதும் எங்களைப் பொறுத்தவரை ஒரு கொண்டாட்டம்.நாங்கள் இயற்கையின் நியதியை மதிப்பவர்கள்;அதன் ஒழுங்குக்கேற்ப வாழ்பவர்கள்.அதெல்லாம் உனக்குப் புரியாது’’ ‘’என் ஒப்புதல் வாக்குமூலத்துக்குச் சற்றும் மதிப்பில்லை என்று எதை வைத்துச் சொல்கிறாய்..’’ ‘’உன்னைப் பொறுத்தவரை உங்கள் ராஜநீதிகளைப் பொறுத்தவரை அது சரியானதாக இருக்கலாம்.எங்களைப் பொறுத்தவரை-தங்களது சுயநலத்துக்காக அப்பாவி மக்களைப் பலியிடுவதுதான் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்.நீ அந்தப் பாவத்தைச் செய்திருக்கிறாய்’’ குந்தி இன்னும் அவள் சொல்வதைப் புரிந்து கொள்ளவில்லை.அப்போது வாரணாவதத்தையும் அரக்கு மாளிகையையும் அந்த மாளிகை எரியூட்டப்பட்டபோது மடிந்து போன ஒரு அப்பாவித் தாய் மற்றும் அவளது ஐந்து புதல்வர்களையும் அவளுக்கு நினைவூடுகிறாள் அந்த முதியவள். ‘’எங்கள் இனத்தைச் சேர்ந்த அவர்கள் அந்தத் தீயில் மடிந்து போனது வேண்டுமென்றே உங்கள் ராஜநீதி வகுத்த திட்டம்;பாண்டவர்களும் நீயும் அந்தத் தீயில் கருகி விட்டீர்கள் என்று வெளியுலகுக்குக் காட்டுவதற்காகப் போடப்பட்ட ஒரு நாடகம்.அதில் இறந்து போனது என் மாமியாரும் கணவர் மற்றும் அவரது சகோதரர்களும்..’’ ’’ஆனால்..’’என்று ஏதோ சொல்ல வாயெடுக்கிறாள் குந்தி.அந்தப் பெண் அவளைப் பேச விடவில்லை. ‘’பாவப்பட்ட எங்கள் இனத்துப் பெண்கள் அரக்கு மாளிகைக்குத் தேவையான அன்றாடப் பொருட்களைச் சுமந்து கொண்டு அங்கே வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.காட்டுக்குப் பக்கத்தில் அந்த மாளிகை இருந்ததால் அவர்களை வேண்டுமென்றே வரவழைத்து விருந்தில் கலந்து கொள்ளச் செய்தாய் நீ..இதற்கு முன்பும் எத்தனையோ முறை அந்தணர்களுக்கு விருந்து படைத்ததுண்டு நீ.அப்போதெல்லாம் எங்களைப் போன்ற மலை சாதிப் பழங்குடிப் பெண்களை..தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களை ஒரு முறையாவது நீ அழைத்ததுண்டா…அந்த ஒரு முறை மட்டும் வருந்தி வருந்தி வேண்டுமென்றே அவர்களை அழைத்தாய்..எக்கச்சக்கமான மது அந்த விருந்தில் வெள்ளமாகப் பெருக்கெடுக்கப் போகிறது என்று சொல்லிச் சொல்லியே அவர்களுக்கு வலை வீசினாய்…’’ ‘’ஆனால் உங்களைப் பார்த்தால் விதவைகளைப் போலத் தெரியவில்லையே..’’ அந்தப் பெண் சத்தமாகச் சிரிக்கிறாள். ‘’இங்கும் உங்கள் அரச நியதிகள் எங்களுக்குப் பொருந்துவதில்லை.விருப்பம் போல மறுமணம் புரிந்து கொள்ளும் உரிமை எங்களுக்கு உண்டு.அதோ சற்றுத் தள்ளி நின்று கொண்டிருக்கிறார்களே..அவர்களும் என் கணவருடன் மாண்டு போன சகோதரர்களின் மனைவியர்தான்…நாங்களெல்லாம் வேறு திருமணம் செய்து கொண்டு பிள்ளைகுட்டிகளோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..’’ பேச்சு நீண்டுகொண்டே போகிறதே ஒழிய அவளது எதிர்பார்ப்பு இன்னதுதான் என்று குந்திக்குத் தெரியவில்லை. ‘’உனக்கு என்னதான் வேண்டும்..?நீ இப்போது என்னை என்ன செய்யப் போகிறாய்.’’ ‘’இல்லை…கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்பதெல்லாம் உங்கள் ராஜ நீதி சொல்வது.…குருட்சேத்திரப் போரே அதன் விளைவுதானே..எங்கள் வழிகளே வேறு..’’ ‘’சரி...சொல் நான் என்ன செய்ய வேண்டும்..’’ ‘’ நீ செய்தது ஒரு பாவம் என்பது கூட உனக்குத் தோன்றவில்லை.உங்கள் சுயநலத்துக்காக ஆறு அப்பாவிக் காட்டுவாசிகளைப் பொசுக்கியது ஒரு பாவம் என்று உங்கள் புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கவில்லை..உன் ஞாபகத்திலும் கூட அது இல்லை.ஆனால் எங்களின் தருமப்படி…இயற்கைஅன்னையின் சட்டப்படி நீ,உன் மைந்தர்கள் அவர்களது கூட்டாளிகள் என்று எல்லோருமே குற்றவாளிகள்தான்…’’ அந்த முதியவள் குந்தியை நெருங்கி வருகிறாள்.. ‘’இப்போது இந்தக் காட்டைப் பார்த்தாயா….வெகு சீக்கிரத்தில் இங்கே காட்டுத் தீ வரப் போகிறது.காட்டிலுள்ள பிற ஜீவராசிகளைப் போலக் காற்றின் வாசத்தை வைத்தே அதை எங்களால் சொல்லி விட முடியும்..அதனால்தான் நாங்கள் இங்கிருந்து போய்க் கொண்டிருக்கிறோம்…காட்டுதீ தீண்ட முடியாத தொலைதூர மலைகளுக்கு…ஏரிகளும் நதிகளும் நிறைந்த இடத்துக்கு..’’ ‘’என்ன காட்டுத்தீ வரப் போகிறதா..’’ ’’ஆமாம்…ஆனால் இங்குள்ள மூன்று குருடர்களால் எங்களைப் போல இங்கிருந்து தப்பிச் செல்ல முடியாது.ஒருவன் குருடனாகவே பிறந்தவன்.இன்னொருத்தி வேண்டுமென்றே தன்னை அவ்வாறு ஆக்கிக் கொண்டவள்.நீ…ஆமாம் நீயோ மூவரிலும் மிக மோசமான ஒரு குருடி..அப்பாவிகளைக் கொன்று விட்டு அதைப் பற்றி மிகச் சுலபமாக மறந்து விட முடிபவள் நீ..’’ ‘’நிஷாதப் பெண்ணே என்னை மன்னிப்பதென்பது உன்னால் அத்தனை சாத்தியமில்லாததா என்ன?…’’ ‘’மன்னிப்புக்காக இறைஞ்சுவதென்பது ராஜவம்சத்துக்கே உரிய ஒரு பலவீனம்.நாங்கள் ஐந்து பேரும் இங்கே வந்தபோது மற்றவர்களும் எங்களோடு வந்து விட்டார்கள்.வருடக் கணக்காக இந்தக் காடுதான் எங்களுக்கு எல்லாமே..’’ ‘’ஆனால்..இப்போது காட்டுத் தீ வரப் போகிறதே..’’ ‘’ஆமாம்..அதற்கென்ன..அது பாட்டுக்கு வந்து தன் வேலையைப் பார்த்து விட்டுப் போகும்;பிறகு மழை பெய்து தீயை அணைக்கும்;கருகிப் போன செடிகளில் மீண்டும் பச்சைநிறம் துளிர்க்கும்’’- அந்தப் பெண் பேசிக் கொண்டே பறந்து போய்விட குந்தி உறைந்து போய் நிற்கிறாள்.அவள் மனம் வெறுமை மண்டிக் கிடக்கிறது.ஆசைகளோ விருப்பங்களோ எண்ணங்களோ உணர்ச்சிகளோ எதற்குமே அதில் இடமில்லை.தான் இருந்த இடத்தை விட்டு ஆசிரமத்துக்குச் சென்றபடி காட்டுத் தீயின் வரவுக்காகக் காத்திருக்க ஆரம்பிக்கிறாள் அவள்.தங்கள் நூறு பிள்ளைகளைப் பறி கொடுத்த திருதிராஷ்டிரனும்,காந்தாரியும்அங்கேதான் தங்கள் சாவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். குந்தியும் இப்போது மரணத்தை வரவேற்கும் மனநிலைக்கு வந்து விட்டிருக்கிறாள்.காட்டுத் தீயில் வெந்து பொசுங்கும் வேளையில் அதே போன்ற கோரத் தீயில் கருகிப் போன முகம் மறந்து போன ஒரு நிஷாதப் பெண்ணிடம் அவள் மன்னிப்பைக் கோர முற்படப் போகிறாளா..? அரச வம்சத்தில் பிறந்தவர்கள் அப்பாவிகளைக் கொன்றழித்த குற்றத்துக்கு மன்னிப்புக் கோருவதும் உண்டா..? குந்திக்குத் தெரியவில்லை என்று அவளது மனப் போராட்டத்தோடு கதையை முடிக்கிறார் மகா ஸ்வேதாதேவி. மலை வாழ் பழங்குடி மக்கள்,ஆதிவாசிகள்,விளிம்பு நிலை மக்கள் ஆகியோரின் நலன் மீது ஆத்மார்த்தமான அக்கறை கொண்டு அவர்களின் போராட்டங்கள் பலவற்றில் ஒரு சமூகப் போராளியாகவும் பங்கேற்றிருப்பவர் மகா ஸ்வேதாதேவி என்பதனாலேயே - அந்த மக்களின் சார்பில் மகாபாரதக் கதையை அறச் சீற்றத்தோடு மறு ஆக்கம் செய்திருக்கிறது அவரது எழுதுகோல். பி.கு; கிட்டத்தட்ட இதே போக்கிலமைந்த வங்க மொழி நாடகம் ஒன்றும் உண்டு;அதில் சொர்க்க லோகத்தை நோக்கிச் செல்லும் தருமனை வழி மறித்து அங்கே செல்லும் தகுதி அவனுக்கு உண்மையில் இருக்கிறதா என வினாத் தொடுக்கிறான் ஒருவன்.தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்து தன் தாய் மற்றும் சகோதரர்களோடு பாண்டவர்களுக்காக இதே அரக்கு மாளிகை சம்பவத்தில் களபலியானவன் அவன்.அந்த நாடகமும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு பரீக்‌ஷா ஞாநியால் மேடை நாடகமாக்கப்பட்டிருக்கிறது [இப்போது பெயர்,ஆசிரியர் நினைவில்லை.எவரேனும் நினைவிருந்தால் தெரிவித்தால் நல்லது] குருட்சேத்திரப் போருக்குப் பின்.[After Kurukshethra-ஸ்வேதா தேவி கதைகளின் ஆங்கில மொழியாக்கம்]என்னும் அவரது சிறுகதைத் தொகுப்பில் இப் படைப்பு இடம் பெற்றிருக்கிறது.

No comments:

Post a Comment