Wednesday, February 17, 2021

ஹெப்சிபா ஜேசுதாசன்

 

ஹெப்சிபா ஜேசுதாசன்

ஹெப்சிபா ஜேசுதாசன் (Hephzibah Jesudasan1925 - பெப்ரவரி 92012) தமிழ்நாட்டைச் சேர்ந்த புதின எழுத்தாளர். ஆங்கிலப் பேராசிரியர். தமிழ் இலக்கிய வரலாற்றை நான்கு பாகங்களில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர். எழுத்தாளர் ஜேசுதாசனின் துணைவியார்.

பொருளடக்கம்

·         1வாழ்க்கைச் சுருக்கம்

·         2எழுத்தாளராக

·         3இறுதி நாட்கள்

·         4எழுதிய நூல்கள்

o    4.1புதினங்கள்

o    4.2ஆங்கில நூல்கள்

·         5விருதுகள்

·         6உசாத்துணை

·         7வெளி இணைப்புகள்

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

தமிழ்நாடு குமரி மாவட்டம், தக்கலைபுலிப்புனம் என்ற ஊரைச் சேர்ந்தவர். பர்மாவில் பிறந்தவர். இவரது தந்தை பர்மாவில் மர வணிகராக இருந்தவர். இரண்டாம் உலகப்போரை அடுத்து இவரது குடும்பம் நாகர்கோயிலில் குடியேறியது. ஹெப்சிபா நாகர்கோயில் டதி பள்ளியில் சேர்ந்தார். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுதிருவனந்தபுரம் பல்கலைக்கல்லூரியில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றினார்.

எழுத்தாளராக[தொகு]

ஹெப்சிபா சாதாரணக் கொத்தனாரின் மகனான தமிழ்ப் பேராசிரியர் ஜேசுதாசனை மணந்தார். கணவரின் தூண்டுதலால் ஹெப்சிபா புத்தம் வீடுஎன்ற தனது முதலாவது புதினத்தை எழுதினார். இப்புதினம் தமிழின் தொடக்ககால நாவல்களில் முக்கியமானதாக இன்றும் கருதப்படுகிறது. புத்தம் வீடு மலையாளத்திலும் ஆங்கிலத்தில் "லிசீஸ் லெகசி" (Lissy’s Legacy) என்ற பெயரிலும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. பேராசிரியரின் துணையுடன் ஹெப்சிபா Countdown from Solomon என்ற அவரது பெரிய இலக்கிய வரலாற்று நூலை நான்கு பாகங்களாக எழுதி முடித்தார்.

இறுதி நாட்கள்[தொகு]

கணவர் ஜெசுதாசன் 2002 ஆம் ஆண்டில் காலமானார். தீவிரமான கிறித்தவரான ஹெப்சிபா அவரது இறுதிக்காலத்தை மதச்சேவையில் கழித்தார். 2012 பெப்ரவரி 9 மாலை அவரது புலிப்புனம் ஊரில் தனது 88வது அகவையில் காலமானார்.

எழுதிய நூல்கள்[தொகு]

புதினங்கள்[தொகு]

·         புத்தம் வீடு (1964)

·         டாக்டர் செல்லப்பா (1967)

·         அனாதை (1978)

·         மா-னீ (1982)

ஆங்கில நூல்கள்[தொகு]

·         Count-down from Solomon, or, The Tamils down the ages through their literature.

·         Vol. 1 Caṅkam and the aftermath, 1999

·         Vol. 2 Bhakti, ethics and epics, 1999

·         Vol. 3 Kampan, 2001

·         Vol. 4 13th - 20th century A.D.

·         An early Sheaf (கவிதைகள்)

·         Sky Lights (கவிதைகள்)

·         en- Exercises (கட்டுரைகள்)

·         Tit-bits for Tinytots (சிறுவர் இலக்கியம்)

·         STORY TIMES DARLINGS (சிறுவர் இலக்கியம்)

·         Songs of The Cuckoo and Other Poems (பாரதியாரின் குயில் பாட்டு)

விருதுகள்

·         விளக்கு விருது (2002, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்)

·         நாஞ்சில் வட்டார வாழ்வு, தலித்துகளைப் போலவே அடிமை களாக வாழ்ந்த வரலாறு கொண்ட நாடார் இனக்குழுவின் மாறிவரும் விழுமியங்கள், அக-புற உலகப் பிணைப்பை அதீத உணர்வு குமுறல்கள் இன்றிப் பிணைப்பை அதீத உணர்வுக் குமுறல்கள் இன்றிச் சித்திரிப்பது ... போன்ற கூறுகளுக்காகத் தமிழ்நாவல் உலகில் மறுக்க முடியாத இடத்தைப் பெற்ற ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்கள் பிப்ரவரி, 10, 2012இல் மறைந்தார். தமிழ்ப் புனைகதை தன்னளவில் பக்குவப்பட்ட 1960களில் எழுத வந்தவர் ஹெப்சிபா. கிறித்துவப் போதகப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். அவரது கொள்ளுப்பாட்டி ஒரு பைபிள் பெண்மணியாக, உபதேசியாகத் திகழ்ந்தவர். எனவே கல்வி அவருக்கு முதுசம். அவரது தந்தை அன்றைய பர்மாவில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

·         ஒரு ஆங்கிலக் கவிஞராக வேண்டும் என்ற முனைப்புடன் இளம் வயதில் இருந்தே தன்னை வளர்த்துக் கொண்டவர். அவரது வாழ்க்கை இணையாக அமைந்த காலஞ்சென்ற பேரா.ஜேசுதாசன், ஹெப்சிபாவுக்குத் தமிழ் இலக்கிய உலகைக் காட்டினார். பன்னிருகைப்பெருமாள், பேரா.. வையாபுரிப்பிள்ளை ஆகியோரின் மாணவராக உருப்பெற்ற பேரா.ஜேசுதாசன் அவர்களோடு இணைந்து ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலை எழுதினார் (1961). அவ்விருவரது வாழ்க்கை நிறைவான பகிர்தலும் ஆங்கிலப் பயிற்சியும் தமிழ்க் காதலும் மிக்கதாக இறுதி வரை அமைந்தது. பேராசிரியரின் சாதாரணக் கூற்று ஒன்று ஹெப்சிபா நாவலாசிரியராக உருப்பெறக் காரணியாயிற்று. கல்கியின் எழுத்துப் பற்றிப் பேசுகையில், பார்ப்பனர் தவிர வேறொருவருமே தமிழ் பேசுவதில்லை என்ற உணர்வு தரும் படைப்பு! என்று அவர் கூறிவிட்டுப் போகத் தான் வளர்ந்த, வாழ்ந்த பனையேறிச் சமூகத்தைப் பற்றிய புத்தம் வீடு நாவலை ஒரே மூச்சில் எழுதி முடித்தார் ஹெப்சிபா. மௌனி, சுந்தரராமசாமி ஆகியோரிடம் அதனைக் காட்டினார் ஜேசுதாசன்.

·         1964இல் புத்தம் வீடு வெளி யானது. லிஸியின் காதல் கதையாகவும், வாழ்ந்து கெட்ட குடும்பத் தின் கதையாகவும் பெண்களின் பாதுகாப்பை யட்டி கட்டுப்பாடு நிறைந்த ஒரு குடும்பத்தின் கதை எனச் சிட்டியால் வர்ணிக்கப்பட்ட நாவல் இது. ஒரு சமூகத்தின் அசைவியக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அகமனக் கூறுகளில் ஏற்படுத்தும் விரிசல்களைப் பாசாங்கின்றிக் காட்டும் முயற்சியாகப் புத்தம் வீடு இன்றும் திகழ்கிறது. 1968இல் வெளிவந்த டாக்டர் செல்லப்பா புத்தம் வீடு தங்கராஜின் சகோதரனின் கதை. 1978இல் அனாதை, 1982இல் மா-னீ என நாவல் கள் தொடர்ந்தன. இரண்டாம் உலகப் போரின்போது பர்மாவை விட்டுத் தப்பி மீண்டும் தமிழகம் திரும்பிய மக்களின் இடர்களை விவரிக்கும் நாவல் மா-னீ. தனது தந்தைக்காற்றும் அஞ்சலியாக ஹெப்சிபா அந்த நாவலைத் தொடங்கினார். நாவல் வெளிவரும் முன் அவரது தந்தை மரணம் அடைந்தார்.

·         நாவல்கள் தவிர கவிதைகள், தமிழ் இலக்கிய வரலாற்றைப் பதிவு செய்யும் நான்கு தொகுதிகள் கொண்ட கலைக்களஞ்சியம், மொழி பெயர்ப்புகள் ஆகியவை அவரது படைப்புலகில் அடங்கும். இறுதி வரை தொடர்ந்து இயங்கும். விருப்போடும், அயர்வின்றி உழைக் கும் உறுதியோடும் திகழ்ந்தார். ஷிறிகிஸிஸிளிகீ அமைப்பின் ஆவணப் பதிவிற்காக அவரைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. அவரது எளிமையும் மனந்திறந்த பேச்சும் சிரிக்கும் கண்களும் மாறி மாறி சேரும் நினைவுகளுக்கு இடையே வெளிப்பட்ட மனிதநேயமும் எழுத்தாளர் என்று தோள்தட்டும் பலரிடம் காணக்கிடைக்காத பண்புகள். நேரடியான அரசியல் வாக்குமூலங்கள் எதுவும் அவர் தர வில்லை. ஆனால் மாறிவரும், தானறிந்த சமூகத்தின் எதார்த்தத்தைக் காட்டினார்.

·         பல ஆண்டுகள் கழித்து அழகியநாயகி அம்மாள் கவலை என்ற தனது வாழ்க்கை வரலாற்று நூலைப் படைத்தபோது, புத்தம் வீட்டிற்குள் மீண்டும் பயணிக்க முடிந்தது. ஒரே வட்டாரத்தைச் சேர்ந்த, இருவேறு மதங்களைத் தழுவிய, ஒரே தொழிலை மேற் கொண்ட இனத்தைச் சேர்ந்த இரு பெண்களின் பதிவுகளைக் காணும் வாய்ப்பு இதனால் சாத்தியமாயிற்று.

·         ஹெப்சிபாவின் உலகம் தானறிந்த இனக்குழுவின் வாழ் முறையை அகஉலகம் சார்ந்து வெளிப்படுத்துவதில் தங்கி இருந்தது. குடும்பச் சித்திரிப்பு, ஆண் - பெண் வாழ்வியல் என்பன குறுகிய வரையெல்லை என்ற தொனி எல்லாப் பெண் படைப்பாளிகளின் எழுத்துக்களுக்கும் கிடைக்கும் எதிர்வினை. அதற்கு ஹெப்சிபாவும் விதிவிலக்கல்ல. ஆனால் புதியதொரு நாடாக உருவான இந்தியா வின் இளம் அதிகாரிகள் உலகை மையப்படுத்தி 1950கள் தொடங்கிப் புனைகதைகள் எழுதிய கிருத்திகாவின் நாவல்களில் இம்மாற்றங் களின் ஊற்றாகவும் மடையாகவும் திகழ்வது பாலுறவுச் சிக்கல்களும் அகமன உளைச்சல்களும் தான்! தமிழ் நாவல் உலக ஜாம்பவானாகக் கருதப்படும் தி.ஜானகிராமனின் படைப்புகள் ஊறித்திளைப்பது அக மன உணர்வெழுச்சிகளின் அலைகளில்தான்! எனவே தனிமனித வாழ்வு, உணர்வு ஆகியவற்றை மையப்படுத்தும் சொல்லாடல்கள் அகவாழ்வின் சிக்கல் சிடுக்குகளைக் காட்டுபவை. கற்பனையில் பிறந்த ஏக மனிதனின் மனநிலை குறித்தது மட்டுமல்ல. எனவேதான் பெண்ணியவாதிகள் தனிவாழ்வும் அரசியலே என்ற முழக்கத்தை வலியுறுத்துகின்றனர்.

·         ஹெப்சிபாவின் ஆங்கில-தமிழ் சீசா விளையாட்டு காலனியச் சூழலின் முரண்களைக் காட்டுவதாக அமைகிறது. ஆங்கிலத்தில் புலமையோடும், ஈர்ப்போடும் வளர்ந்த ஹெப்சிபா, தமிழ் இலக்கியத் தில் ஊறித் திளைக்கத் தொடங்கியதும் அதில் கொண்ட ஆறாக் காதல் சொல்லி மாளாது. இறுதிவரை கம்ப இராமாயணக் கவிமொழியில் திளைத்தார். தமிழ் தொடர்பான செய்திகளை ஆங்கிலத்தில் பதிவு செய்வதில் முனைப்புக் காட்டினார். இவரைப் போலவே இரு மொழிப் புலமை கொண்டு விளங்கிய கிருத்திகா புனைகதைப் படைப்புமொழியாகத் தமிழையும் குழந்தை இலக்கியம், கட்டுரைகளுக்கான மொழியாக ஆங்கிலத்தையும் கொண்டதோடு மட்டுமன்றி, ஆங்கில எழுத்தில் தனது இயற்பெயரைப் பயன்படுத்தி னார். இந்தியப் பண்பாடு சார்ந்த கலை, புராணங்கள் அவற்றொடு கிருத்திகா, ஆங்கிலத்தில் தந்தது பாரதியின் வாழ்வை! ஆனால் ஹெப்சிபாவுக்குத் தமிழ் இலக்கியம் என்ற மாபெரும் கொடையை அறிமுகமாகவேணும் ஆங்கிலத்தில் பதியவைக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்தது. தென் தமிழகத்தின், விளிம்பு நிலை இனத்தில் வாழ்ந்த ஹெப்சிபா, வசதிகள் இருந்தும், கால் பாவி நின்றது தமிழ் இலக்கிய மரபில் தான்.

·         கோஷங்கள் அற்ற, அதீத புனைவுகள் அற்ற, உருவம் குறித்த கூடுதலான கவலைகள் அற்ற படைப்புகள் மூலம் தாமறிந்த உலகிற்கு நியாயம் செய்ய விரும்பிய ஹெப்சிபாவின் கையில் இருந்தது அவரது இளவயதுக் கனவான தேவதை தந்த பேனா தான்.

 

சிறைவாசம்

 

வருஷங்கள் எப்படித்தான் ஓடி விடுகின்றன! வாழ்க்கை முறைதான் எப்படி எப்படி மாறி விடுகின்றது! சுயேச்சையாக ஓடியாடித் திரிந்து, நெல்லி மரத்தில் கல்லெறிந்து, குளத்தில் குதித்து நீச்சலடித்து, கூச்சலிட்டுச் சண்டை போட்டு, கலகலவென்று சிரித்து மகிழ்ந்து, எப்படி எப்படியெல்லாமோ இருந்த ஒரு குழந்தை பாவாடைக்கு மேல் ஒற்றைத் தாவணி அணிந்து கொண்டு, அது தோளிலிருந்து நழுவிவிடாதபடி இடுப்பில் இழுத்துக் கட்டிக் கொண்டு, கதவு மறைவில் பாதி முகம் வெளியில் தெரியும்படி குற்றவாளிபோல் எட்டிப் பார்க்கிற பரிதாபத்துக்கு இத்தனை சடுதியில் வந்து விடுகிறதே, இந்த வாழ்க்கைத் திருவிளையாடலை என்னவென்று சொல்வது!8abf414a-3b05-49f3-9af7-a2d5b2cd4ffc

·         அதோ அந்த அடிச்சுக் கூட்டிலிருந்து அப்படிப் பாதிமுகமாக வெளியில் தெரிகிறதே, அந்த முகத்துக்கு உரியவள் லிஸிதான். அந்தக் கண்கள் வேறு யாருடைய கண்களாகவும் இருக்க முடியாது. அவை அவளைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. ஆனால் அந்தக் கண்களில் குறுகுறுப்போ மகிழ்ச்சியோ துள்ளி விளையாடவில்லை. அவற்றில் படிந்திருப்பது சோகமா, கனவுலகத்தின் நிழலா சும்மா வெறும் சோர்வா என்பதுதான் தெரியவில்லை. தலையில் நன்றாய் எண்ணெய் தேய்த்து வாரியிருக்கிறாள். அவள் முகத்திலும் எண்ணெய்தான் வழிகிறது. மாநிறமான அந்த முகத்துக்கு ஒளி தந்து அழகு செய்வதற்குப் புன்னகை ஒன்றும் அதில் தவழவில்லை. லிஸியா அது? நம் லிஸியா? ஏன் இப்படிக் குன்றிக் கூசிப் போய் நிற்கிறாள்? ஏன்? ஏன்?

·         முதலாவது, லிஸி பெரிய வீட்டுப் பிள்ளை என்பதை நீங்கள் அறிய வேண்டும். அதை மறந்திருந்தீர்களானால் இதுதான் அதை மறுபடியும் ஞாபகத்தில் கொள்ள வேண்டிய தருணம். லிஸியும் ஒருபோதும் அதை மறந்து விடக் கூடாது. அவள் பெரிய வீட்டுப் பெண். பனைவிளை புத்தம் வீட்டுக் குலவிளக்கு. ஆகையால் அவள் பலர் காண வெளியில் வருவது கொஞ்சங்கூடத் தகாது. அது அவள் விலையைக் குறைப்பதாகும். இரண்டாவது, இற்செறிப்பு ஒரு பழந்தமிழ் வழக்கம். சங்க காலத்திலேயே உள்ள வழக்கம். நல்லவேளையாக இது இன்னும் வெளிவராத இரகசியமாகவே இருந்து வருகிறது. பனைவிளை புத்தம் வீட்டார்க்குச் சங்க கால வழக்கங்கள் ஒன்றும் தெரியாது. அதற்குள்ள தமிழ் ஞானமும் அவர்களுக்குக் கிடையாது. ஆனால் தலைமுறை தலைமுறையாக வரும் வழக்கம் மட்டும் நன்றாகத் தெரியும். லிஸிக்கு பதினான்கு வயது ஆகிறது. பெரிய பிள்ளை ஆகி விட்டாள். ஒற்றைத் தாவணி அணிந்துவிட்டாள். ஆகையால் இற்செறிப்பு மிகவும் அவசியமாகி விட்டது. நீங்கள் லிஸியின் முகத்தைப் பார்த்தால், அந்தக் கண்கள் மட்டும் உங்களிடம் ஏன்? ஏன்? என்று கேட்பது போலிருக்கும். ஆனால் இதற்கெல்லாம் போய்த் துயரப்படாதேயுங்கள். துயரப்பட்டால் தமிழ்நாட்டின் மற்ற பெண்மணிகளின் துயரங்களுக்கெல்லாம் எப்படிக் கணக்கெடுக்கப் போகிறீர்கள்?

·         அவள் என்னென்ன ஆசைகளை உள்ளத்தில் போற்றி வளர்த்து வந்தாள் என்று யாரும் கவலைப்படவில்லை. லிஸி வெறும் அப்பாவிப் பெண் ஒன்றும் அல்ல. முதலில் ரகளை நடத்தித்தான் பார்த்தாள். அழுது அடம் பிடித்தாள். அவளுக்குத் தெரிந்த முறையில் சத்தியாக்கிரகம் பண்ணினாள். ஆனால் இத்தனை பேரின் எதிர்ப்புக்கு இடையில் ஒரு குழந்தையின் பலம் எத்தனை தூரந்தான் போக முடியும்? அப்பனும் அம்மையுந்தான் போகட்டும். இந்தக் கண்ணப்பச்சியுங் கூட அல்லவா அவர்களுடன் சேர்ந்து கொண்டார்? கண்ணம்மையின் காரியம் கேட்கவே வேண்டாம். சித்தியாவது ஒருவாக்குச் சொல்லக் கூடாதோ? சித்திக்கு வழக்கம்போல வாய்ப்பூட்டு போட்டிருந்தது. மேரியக்கா இந்தத் தருணம் பார்த்துக் கிராமத்தில் இல்லை. மேரியக்கா பாளையங்கோட்டையில் இருக்கிறாள். காலேஜில் படிக்கிறாள். மேரியக்காவைப் படிக்க வைக்க அவளுக்குச் சித்தப்பாவோ மாமாவோ யார் யார் எல்லோமோ இருக்கிறார்கள். லிஸிக்கு யார் இருக்கிறார்கள்?

·         பள்ளிக்கூடத்துக்குத் தான் விட்டபாடில்லை. கோயிலுக்காவது விடக் கூடாதோ? நாலு தோழிகளை அங்கு சந்திக்கும் பாக்கியமாவது கிடைக்கும். கண்ணப்பச்சி கண்டிப்பாகச் சொல்லி விட்டார். இப்ப எதுக்கு? மொதல்ல ரெண்டு பேராப் போவட்டும். நம்ம குடும்பத்திலே இல்லாத பழக்கம் நமக்கு என்னத்துக்கு?

·         ரெண்டு பேர் என்று யாரை கண்ணப்பச்சி குறிப்பிடுகிறார் என லிஸிக்கு ஓரளவு தெரியும். ஆனால் அவள் வருங்காலத்தை விட நிகழ்காலத்திலேயே அக்கறை உடையவள். இரண்டு பேராகக் கோயிலுக்குப் போகலாம் என்ற நம்பிக்கை அப்போதைக்கு அவளுக்குத் திருப்தி தருவதாயில்லை. என்றாலும் இளம் உள்ளங்கள் எப்போதும் அழுதுகொண்டிருக்க முடியாது. எது முதலில் எட்டிக்காயாகக் கசக்கிறதோ அதுவும் நாளடைவில் பழக்கப்பட்டுவிடுகிறது. வாழ்க்கையே உலக ஞானத்தைப் போதிக்கிறது. லிஸிக்குப் பள்ளிக் கூடம் இல்லாவிட்டால் என்ன? வீடு இல்லையா? தோழர், தோழியர் இல்லாவிட்டால் போகிறார்கள். மேரியக்கா தந்த மைனா இருக்கிறது. லில்லி, செல்ல லில்லி இருக்கிறாள். லில்லியோடு கொஞ்சிக் குலவுவதில் பொழுதில் பெரும்பகுதியும் கழிந்து விடுகிறது. அந்தச் சின்னத் தலையை மடியில் இட்டுக் கொள்வதில்தான் எத்தனை இன்பம்! வீட்டு வேலைகளும் அப்படி ஒன்றும் பாரமானவை அல்ல. தானாகச் செய்தால் செய்வாள். இல்லாவிட்டால் அம்மையும் சித்தியும் இல்லையா? லிஸி பெரிய வீட்டுச் செல்லப்பிள்ளை தானே? இப்படியாகத் தன்னை நாளடைவில் சமாதானம் செய்து கொள்ளுகிறாள் அந்தப் பேதைப் பெண். <!––> மேலும், பதவிக்காகப் போய் ஏங்கிக் கிடந்தாளே, வீட்டிலேயே அவளுக்கு மகத்தான பதவி காத்துக் கிடக்கிறது. கண்ணப்பச்சிக்குக் கண் மங்கிக் கொண்டிருக்கிறது. கண்ணம்மை போன பிறகு, அதுவும் இரண்டு வருஷம் ஆகி விட்டது. கண்ணப்பச்சிக்குத் தனிமைத் துயரம் அதிகம். லிஸியின் துணையை இன்னும் கூடுதலாக நாடினார். இந்த ஒரு காரணத்தால்தான் லிஸிக்கு அடிச்சுக் கூட்டுக்கு வரும் உரிமை கிடைத்தது. ஆபத்துக்குப் பாவம் இல்லை அல்லவா? கண்ணப்பச்சிக்கு நினைத்த நேரம் பைபிளும், தினப்பத்திரிக்கையும் வாசித்துக் கொடுக்க வேறு யார் இருக்கிறார்கள்? ஆகையால் லிஸிக்கு அடிச்சக்கூட்டில் பெருமையுடன் நடமாடும் பதவி கிடைத்தது. அம்மைக்கும் சித்திக்கும் கிடைக்காத பதவி; அவர்கள் மாமனாருடன் பேசக் கூடாது. அவர்கள் கணவன்மார்களும் சித்தப்பாவும் இப்படி ஆகிவிட்டாரே என தங்கள் தந்தையுடன் பேசுவதில்லை. லிஸிதான் அந்த வீட்டில் கண்ணப்பச்சிக்கு ஊன்றுகோல். அவளுக்கு அது புரியவும் செய்தது. அதனால் கண்ணப்பச்சியிடம் அவளுடைய பாசம் இன்னமும் அதிகமாயிற்று.

·         வீட்டிலுந்தான் என்னென்ன மாற்றங்கள்? ஆடு குழை தின்கிற மாதிரி வெற்றிலை போட்டு வந்த கண்ணம்மை போய் விட்டார்களே! லிஸி வெற்றிலை இடித்துக் கொடுப்பாள் என்று அவள் கையைப் பார்ப்பதற்கு இப்போது யார் இருக்கிறார்கள்? ஆனாலும் அவள் வீட்டார் பல காரியங்களுக்காக அவள் கையை இன்னும் எதிர்பார்த்துத்தான் இருந்தார்கள். அதற்குக் காரணம் லிஸியேதான். லிஸி மேரியக்காவின் வீட்டிலிருந்து சில பாடங்களைக் கற்றறிந்தாள். கிராமத்து வீடானாலும் அதைச் சுத்தமாக வைக்கலாம் என்றறிந்திருந்தாள். ஏராளமாகக் குவிந்து கிடக்கும் பழ வகையறாக்களுக்கென்று ஓரிடம், கண்ணப்பச்சி மாட்டுக்கென்று சீவிப்போடும் பனம் பழக்கொட்டைகளுக்கென்று ஓரிடம், இப்படியெல்லாம் ஒழுங்குபடுத்தி வைத்திருந்தாள். ஈக்களின் தொல்லை இப்போது குறைந்துவிட்டது. அடிச்சுக்கூட்டுக்கு நேராகத் திறக்கும் ஜன்னலுக்கு ஒரு கர்ட்டன் கூடத் தைத்துப் போட்டிருந்தாள். அது லிஸிக்கு மிகவும் சௌகரியமாயிருந்தது. யாராவது கண்ணப்பச்சியிடம் எப்போதாவது பேசுவதற்கென்று வருவார்கள். அப்போது வீட்டினுள் இருந்து கொண்டே எல்லாவற்றையும் பார்க்கலாம். வீட்டை இப்போது பார்த்தால் ஏதோ பெண்மணிகள் வாழும் இல்லமாகத் தோற்றமளித்தது. முன்பெல்லாம் லிஸிக்கு இப்போது சித்தியிடம் மதிப்பு மிகவும் குறைந்து விட்டது. சித்தியாவது வீட்டை கவனித்துக் கொள்ளக் கூடாதா? சித்திக்கு அழகாக ஸாரி கட்டத் தெரியும். பவுடரை நாசுக்காகப் பூசத் தெரியும். ஆனால் இந்த அம்மையிடம் ஒத்துப் போகக் கூடத் தெரியவில்லையே; கண்ணம்மை மரித்த பிறகு! சித்தியின் முகம் இப்போதெல்லாம் கவலை படர்ந்த இருள் சூழ்ந்திருக்கிறது. சித்தப்பா அடிக்கடி பிஸினஸ் என்று சொல்லிக் கொண்டு, திருவனந்தபுரம் போய் வருகிறார். அங்கிருந்து யாராவது உறவினரைக் கூட அழைத்து வருவார், போவார். ஆமாம், அதற்காகவாவது வீட்டை நன்றாக வைத்திருக்க வேண்டாமா? உன் முற்றத்தில் பூத்துக்குலுங்குகின்ற ரோஜாச் செடிதான் எத்தனை அழகாயிருக்கிறது! லில்லியின் பட்டுக் கன்னங்களைப் போல் லிஸியின் பழைய நினைவுகளைப் போல். ஆனால் அதைப் பேண வேண்டுமானால் லிஸி மட்டுந்தான் உண்டு வீட்டில். வேறு யார் இருக்கிறார்கள்?

·         லிஸிக்கு சாமர்த்தியம் இல்லாவிட்டால் அப்பனை இப்படி வீட்டில் பிடித்து வைத்திருக்க முடியுமா? அவர் கள்ளுக்கடைக்குப் போவதை நிறுத்த முடியவில்லை. ஆனால் காப்பிக் கடைக்குப் போகிறதை நிறுத்தி விட்டாள். ஓட்டல் பலகாரம் வீட்டில் கிடைக்கும்போது அவர் எதற்காக ஓட்டலுக்குப் போகிறார்? அவரும் கண்ணப்பச்சியைப் போல லிஸியின் கையை எதிர்பார்த்துத் தானே இருக்கிறார்! இப்படியாக அவளுக்குப் பெருமையும் திருப்தியும் தரக் கூடிய விஷயங்கள் அறவே இல்லாமல் போகவில்லை. இல்லையானால் எப்படித்தான் வாழ்கிறதாம்?

·         இன்றைய வாழ்க்கையில் மிகமிகப் பிடித்த சமயம் பனையேற்றக் காலந்தான். அக்கானி அவள் விரும்பிக் குடிக்கும் பானம். அதில் விழுந்து செத்துக் கிடக்கும் , எறும்புகளை அவள் ஒருபோதும் அசிங்கமாகக் கருதினதில்லை. அவற்றை அகப்பையால் நீக்கி விட்டுக் கோப்பையை பானையில் இட்டு முகந்து குடிப்பாள். ஆனால், அதுவல்ல விஷயம். அக்கானிக் காலத்தில் அதைக் காய்ச்சுவதற்கென்று ஒரு கிழவி வீட்டுக்கு வருவாள். அவளுடன் பேசிக் கொண்டிருப்பது லிஸிக்கு நல்ல பொழுதுபோக்கு. அவள் எரிப்பதற்கென்று உலர்ந்த சருகுகளை விளக்குமாறு கொண்டு அரிக்கும்போது லிஸியும் கூட நடப்பாள்; அவர்கள் வீட்டடிதான்; ஆகையால் அதில் ஒன்றும் கட்டுப்பாடில்லை. இந்தக் கிழவியின் மகன்தான் இவர்களுக்குப் பனையேறிக் கொடுப்பது. அவன் பெயர் தங்கையன். பனையேற்ற ஒழுங்குபடி ஒருநாள் அக்கானி தங்கையனைச் சேரும். தங்கையன் முறை வரும்போது அவனுடைய இளமனைவி அக்கானியை எடுத்துப் போக வருவாள். இவர்கள் குழந்தைகள் இரண்டு பேர். பிறந்த மேனியாகக் கூட ஓடி வருவார்கள். வாழ்க்கை வெறும் சப்பென்று ஆகி விடாதபடி இவர்கள் எல்லோரும் லிஸிக்கு உதவினார்கள்.

·         லிஸிக்கு வெளியுலகந்தானே அடைத்துக் கொண்டது? ஆனால் உள்ளே இவளுக்கென்று ஒரு தனி உலகம் உருவாகிக் கொண்டிருந்தது. பனையேறுபவர்கள் சடக் சடக்கென்று குடுவையைத் தட்டிக் கொண்டு வருவதும் பனையோலைகளின் இடையே வானத்தை எட்டிப் பிடிப்பதைப் போல் இருந்து கொண்டு அலுங்குகளை அதாவது பனம் பாளைகளைச் சீவிக் கீழே தள்ளுவதும் ஒருவரையொருவர் கூவியழைத்து வேடிக்கை பேசிக் கொள்வதும் எல்லாம் சுவாரஸ்யமான காரியங்களே. பனையுச்சியிலிருந்து எந்தெந்த விஷயங்களெல்லாம் அலசி ஆராயப்படும் தெரியுமா? மன்னர் அரண்மனை இரகசியங்கள் தொட்டு ஹிட்லரின் ராணுவ காரியங்கள் வரையுள்ள விஷயங்கள் அடிபடும். லிஸி இப்போது பள்ளிக் கூடத்தில் படிக்கிற மாதிரிதான். தன் வீட்டு வாசலில் இருந்து கொண்டே பல புதிய பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கிறாள்.

·         *****

புத்தம் வீடு எளிய மொழியில் சொல்லப்பட்ட காதல் கதையாகத் தோற்றம்கொள்ளும் நாவல்.

லிஸியும் தங்கராஜூம் இளம்பருவத்தில் கொண்ட ஈர்ப்பு காதலாக மு100-00-0000-046-8_bதிர்ந்து திருமணத்தில் கனிய நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். தடைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். இறுதியில் இணைகிறார்கள். முதல் சந்திப்புக்கும் முதல் நெருக்கத்துக்கும் இடையில் வருடங்கள் கடந்து போகின்றன. இடங்கள் மாறுகின்றன. மனிதர்கள் கடந்து போகிறார்கள். அவர்கள் உறவாடுகிறார்கள். காசுக்காகத் தகப்பனை ஏய்க்கிறார்கள். பகைகொண்டு சொந்தச் சகோதரனையே கொல்கிறார்கள். குலப்பெருமை பேசுகிறார்கள். புதிய தலைமுறையோடு பிணங்குகிறார்கள். காலத்துக்கேற்ப மாறுகிறார்கள்.

இது லிஸியின் கதை. மூன்று தலைமுறைகளை இணைக்கும் கண்ணி அவள். அவளையே மையமாகக் கொண்டு விரியும் கிராம உறவுகளின் கதை. ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிப்படும் அவளுடைய சிநேகச் சரடின் மறுமுனையில்தான் அவளைத் தூற்றியவர்களும் விரும்பியவர்களும் இயங்குகிறார்கள்.

படைப்பு இயல்பால் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட இலக்கிய ஆக்கங்களில் ஒன்று. புத்தம் வீடு. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்டது. எனினும் இன்னும் வாசிப்பில் சுவை குன்றாமல் துலங்குகிறது.

புத்தகம் வாங்க இங்கே செல்லவும்.

 

ஹெப்சிபா ஜேசுதாசன்நேர்காணல்

ஒரு ஜாதிக்கு என்று தனி இலக்கியம் வரக்கூடாதுஹெப்சிபா ஜேசுதாசன்

ஹெப்சிபா ஜேசுதாசன் அறுபதுகளில் இலக்கிய உலகில் வெகுவாக விவாதிக்கப்பட்ட எழுத்தாளர். அவரது முதல் நாவல் புத்தம் வீடு இன்றும் வெகுவாக வாசகர்களிடையே பேசப்படும் ஒன்று. அறுபதுகளில் பிராமணர்களின் பேச்சுநடையிலேயே கதைகள் அதிகமாக வெளிவர, கன்னியாகுமரி மாவட்ட நாடார் இன மக்கள் பேசும் பேச்சுமொழியில் சிறப்பாக வந்த நாவல் என்ற சிறப்பைHepshi-Bai_Jesudasan-Su-Raபுத்தம்வீடு பெற்றது. அதன்பிறகு மாஜனீ, டாக்டர் செல்லப்பா, அனாதை என பல்வேறு நாவல்களைப் படைத்தார் ஹெப்சிபா.

தமிழின் சிறந்த இலக்கிய படைப்புகளை கவுண்ட் டவுன் ஃபிரம் சாலமோன் (Count down from Solomon) என்ற பெயரில் ஆங்கிலத்தில் தந்துள்ளார் ஹெப்சிபா. நான்கு பெரிய தொகுதிகளாக ஆங்கிலத்தில் ஏசியன் பப்ளிகேசனால் வெளியிடப்பட்ட இந்தத் தொகுதியில் மூன்றாவது தொகுதி முழுக்க கம்பரசம் சொட்டுகிறது. லட்சுமணனின் சகோதரத்துவம், பரதனின் விட்டுக்-கொடுக்கும் தன்மை, ராமனின் தலைமைப் பண்பு, சொல்லின் செல்வன் ராமன், யுத்தகாண்டத்தில் கூட இலக்கியம் சொட்டும் தன்மை ஆகியவற்றை அழகாக ஆங்கிலத்தில் கூறியுள்ளார் ஹெப்சிபா. கம்பனில் இல்லாதது எதுவும் இல்லை. இலக்கியம் என்றால் கம்பன். கம்பன் என்றால் இலக்கியம்! என்கிறார் ஹெப்சிபா.

இவரது முதல் நாவலான புத்தம் வீடு ஆங்கிலத்தில் லிசிஸ் லெகசி (Lissys Legacy) என்ற பெயரில் சமீபத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. ஏற்கனவே மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது புத்தம்வீடு. இந்திய சுதந்திரத்தின் 50-வது பொன்விழாவின்போது மாஸ்டர் பீசஸ் ஆஃப் இன்டியன் லிட்டரேச்சர் (Master Pieces of Indian Literature) தொகுதியில் 1353-ம் பக்கத்தில் ஹெப்சிபா ஜேசுதாசன் குறித்து பதிவும் செய்யப்பட்டுள்ளது. என்சைக்ளோபீடியா பிரிட்டாணிகாவிலும் இவரைப்பற்றி குறிப்பு காணப்படுகிறது. An early Sheaf, Sky Lights ஆகியவை இவரது ஆங்கிலக் கவிதை நூல்களாகும். en- Exercises என்ற தலைப்பில் ஆங்கிலக் கட்டுரை நூல் ஒன்றும் Tit-bits for Tinytots, STORY TIMES DARLINGS ஆகிய குழந்தை இலக்கிய நூல்களும் Songs of The Cuckoo and Other Poems என்ற தலைப்பில் பாரதியாரின் குயில் பாட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் Songs of The Cuckoo and Other Poems என்ற சுயசரிதை நூலையும் வெளியிட்டுள்ளார்.

2002-ல் கணவர் இறப்புக்குப்பின் மகனுடன் இருக்கிறார் ஹெப்சிபா. நிறைய தமிழிலக்கியங்களை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கத் திட்டங்கள் வைத்திருந்தார் ஹெப்சிபா. அவரது மனம் முழுக்க சந்தோஷத்தின் வெளிப்பாடுதான்.

அவருடைய மகன் டாக்டர் தம்பி தங்ககுமார் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவர் தாயாரின் படைப்புகளைத் தொகுத்து வைத்திருக்கிறார். ஹெப்சிபாயிடம் நாம் இலக்கியம் பேசப்பேச பழைய நினைவுகளை மீட்டுக்கொண்டு வந்து பலவிஷயங்களைப் பேச வைத்தது டாக்டர் தம்பிதான்.

திருவனந்தபுரம் கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் புலிப்புனத்தில் இறங்கி ஹெப்சிபா ஜேசுதாசன் வீடு எது என்று கேட்டால் எல்லோருக்கும் தெரிகிறது.

பார்க்க வந்திருக்கிறோம் என்று கூறியதும் மிகவும் சந்தோஷமாக வரவேற்றார். அதே பழைய புன்னகை மாறாமல் வணக்கத்துடன் நம்மை வரவேற்று உட்காரச்சொன்னார். இப்பவும் என்னை ஞாபகம் வச்சுட்டு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்! என்றார். அருகிலிருந்த அவரது மகன், அம்மா நல்லாதான் இருந்தாங்க.. எப்ப பார்த்தாலும் படிச்சுகிட்டே இருப்பாங்க.. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஆட்டோவிலேர்ந்து கீழே விழுந்ததிலே அவங்களுக்கு தலையில அடி பட்டுடுச்சி.. அதுல கொஞ்சம் பிரச்சனை.. ஞாபக மறதி நிறைய! என்றார் ஆனால் அவர் எழுதிய பழைய கட்டுரைகள் பற்றிப் பேசினால் கோர்வையாக பல விஷயங்களைக் கூறினார்.

நம்மைப் பார்த்ததும் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் நிறைய விஷயங்களைப் பேசினார். வாழ்க்கையைச் சந்தோஷமா அனுபவிச்சுகிட்டிருக்கேன் என்றவர் இதுக்கு முன்னாடியும் நாலஞ்சுபேரு என்னைப்பத்தி தெரிஞ்சுகிடுறதுக்கு வந்தாங்க. நான் சாகுறதுக்கு முன்னாடி கூட என்னைப்பார்த்துப் பேச உங்களை மாதிரி ஆளுங்க வருவாங்க.. என்று சிரித்தபடியே சொன்ன ஹெப்சிபாவுக்கு இப்போது வயது 84. தற்கால பத்திரிகை, இலக்கிய உலகம் பற்றி எதுவுமே ஹெப்சிபாவுக்குத் தெரியவில்லை. தன்னுடைய நுட்பமான அறிவாலும் கணவரின் ஒத்துழைப்பாலும் பலவற்றை காலங்களுக்கு முன் சாதிக்க முடிந்தது என்று சிலாகித்து சிலாகித்துச்சொல்கிறார். முகத்தில் எப்போதும் ததும்பி வழியும் மாறாத அன்பும் புன்னகையும் அவரிடம் நமக்கு திரும்பத்திரும்ப பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

ஆடிமாத சாரல்மழை வெளியே விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. ரப்பர் மரங்கள் அடர்ந்த புலிப்புனத்தில் உள்ள ஹெப்சிபாவின் வீட்டில் பழங்கால சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி நமக்கு அவர் அளித்த நேர்காணலின் சுருக்கம்தான் இது. நாம் அவரைச் சந்திக்க வந்திருக்கும் செய்தி அறிந்து அவரது வீட்டருகே வசிக்கும் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஏனோஸ் நமக்கு உதவுவதற்காக அங்கே வந்தார். இங்கே நாம் அவரிடம் சில கேள்விகள் எழுப்பும்போது அதற்கான பதிலை பேராசிரியர் ஏனோஸ் ஞாபகப்படுத்திதான் அவரிடமிருந்து பதிலைப் பெற முடிந்தது.

பேராசிரியர் ஏனோஸ், அவரது மகன் தம்பிதங்ககுமார் ஆகியோரின் உதவியுடன்தான் இந்த நேர்காணல் தயாரிக்கப்பட்டது. இலக்கியம் பற்றிப்பேசினால் ஹெப்சிபாவின் மனம் முழுக்க சந்தோஷம் வெளிப்படுவதைக் காண முடிகிறது. இப்போது அவர் இலக்கியம் படைப்பதும் இல்லை, படிப்பதும் இல்லை. விழித்திருக்கும் பொழுதுகளில் பார்வை மங்காத கண்களின் வழியே பைபிளைத்தான் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறார்.

தீராநதி: உங்க இளமைப்பருவத்தைப்பத்தி சொல்லுங்களேன்..?

ஹெப்சிபா: நீங்க கேட்குறதுனால சொல்லுறேன். எங்க பழங்காலச்சுவடுகள் எங்க குடும்பப் பிள்ளைங்க தெரியணும்கிறதுனாலதான் சொல்லுறேன். எனக்கு சாரோட பூர்வீகம் மிகவும் ஏழைமக்களிடையே இருந்தது. சேனம் விளையில் ஆறேழு தலைமுறைக்கு முன்னாடி அவர்கள் வந்து குடியேறின போது அவர்கள் பனையேற்றுத்தொழிலாளிகள். அவங்க வீட்டுல நிறைய படிச்சது அவருதான். எனக்கு ஊரு புலிப்புனம். கோவிலோட சேர்ந்து தமிழ்ப்பாடசாலை இருந்ததால் அடுத்த தலைமுறைக்கு நல்ல கல்வி கெடைச்சுது. எங்க குடும்பத்துல உள்ளவங்க அங்கே படிச்சுதான் முன்னேறினாங்க. என் மதினி ருக்மிணிக்கு இப்பவும் பென்சன் கிடைக்குதுனா காரணம் அன்னிக்கு அவங்களோட படிப்புதான். படிச்ச ஸ்கூல்லயே வேலை பார்த்தாங்க.

என் பூர்வீகத்தை எடுத்துகிட்டீங்கன்னா அம்மா வழியில கல்வி, அப்பா வழியில சொத்து எனக்கு கிடைச்சதுனு சொல்லலாம். என்னோட தாத்தா அந்தக்காலத்துல பி.. பாஸாகி மார்த்தாண்டம் எல்.எம்.எஸ். ஆண்கள் பள்ளியில் முதல் தலைமை ஆசிரியரா வேலையில சேர்ந்தாங்க. அவங்களுக்கு மதபோதனை செய்யுறதுல மிகுந்த ஈடுபாடு. அதனால வேலையை ரிசைன் பண்ணிட்டு பாஸ்டரானாங்க. என் அம்மாவின் பாட்டி கூட எல்.எம்.எஸ். பெண்கள் பிரைமரி பள்ளிக்கூடத்துல ஆசிரியையா வேலை பார்த்தாங்க. அவங்களும் ஒரு பைபிள் உமனா இருந்தாங்க. தமிழாகட்டும். இங்கிலீஷ் ஆகட்டும், கணக்காகட்டும் எனக்கு சின்ன வயசுல அவங்கதான் சொல்லித்தந்தாங்க. பப்பா (அப்பாவை பப்பா என்றுதான் சொல்கிறார்) வடபர்மாவில ஒரு அரசு பள்ளிக்கூடத்துல டீச்சரா வேலை பார்த்துட்டு இருந்தாரு.

அன்னிக்கு பொம்பிளைங்களைப்படிக்க வைக்கிறதுன்னா சாதாரண விசயமா? என்கூட நாலு சகோதரருங்க. வீட்டுல ஒரே பொண்ணு நான். அதனால் நான் வீட்டுல செல்லப்பிள்ளையா இருந்தேன். என்னோட பப்பா பர்மாவுல இருந்ததுனால அம்மா ஊருல உள்ள பள்ளிக்கூடத்துல என்னைச் சேர்த்தாங்க. ஒரு நாள் ஒரு டீச்சரு எங்கம்மாவக் கூப்பிட்டு இந்தச் சின்னப்பிள்ளைக்கு மூளையே கிடையாது. உதவாக்கரையான இவளைப்போய் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி கஷ்டப்படுத்தியேளே..!ன்னு சொன்னார். எங்கம்மாவுக்கு ரொம்ப வேதனையாப்போச்சு. அப்பா பர்மாவிலேர்ந்து வந்ததும் இதைப்பத்தி அவங்ககிட்டே சொன்னாங்க. உடனே அப்பா என்னை பர்மாவுக்குக் கூட்டிட்டு போனாரு. பப்பா ஸ்கூல் விட்டு வரும்போது நிறைய புக்ஸ் கொண்டு வருவாங்க.. அதுல அழகான படம் போட்டிருப்பாங்க. அதை ரசிக்கிறதுதான் என்னோட வேலை. அப்படியே பர்மாவில இங்கிலீஷ் சரளமா பேசக் கத்துகிட்டேன். அந்த வயசுல ஒருநாள் ராத்திரி ஒரு சொப்பனம் கண்டேன். கனவுல ஒரு தேவதை என் கையில் ஒரு பேனாவைத் தந்தது போல். எனக்கு அந்த சொப்பனம் பிடிச்சிருந்தது. என்னோட வாசிப்புக்கு காரணம், சிறுவயது பர்மா வாழ்க்கைதான். என்னோட ஒன்பதாவது வயசுல பப்பா வேலை பார்த்த ஸ்கூல்ல 5-வது வகுப்பில் சேர்க்கப்பட்டேன். வகுப்பில நான் தான் முதலாவது. பப்பாவுக்கு பெருமைன்னா பெருமை. அப்புறம் 6-வது வகுப்பிலயும் முதல் இல்லைன்னா இரண்டாவது இடம் எனக்குத்தான் கிடைக்கும். இங்கிலீசுல இலக்கணத்தை நல்ல ஆர்வமா கத்துகிட்டேன். பத்தாவது வயசுல என் முதல் இங்கிலீஷ் போயம் (ஆங்கில கவிதை) எழுதினேன். பப்பாவுக்கு ஆச்சரியம். எனக்கு வாசிக்க நிறைய புத்தகங்கள் தந்தார். அங்கேயே ஏழாம் வகுப்பு வரை படிச்சேன். அப்போது தமிழாசிரியர் சொல்லி உருகிய, இன்றைக்கோ கம்பன் இறந்த நாள் என்ற பாடலை இன்னிக்கும் நினைக்கிறது உண்டு. வெண்பாவின் இலக்கணமென்று நாற்சீர், முச்சீர் நடுவே தனிச்சீர் என அடிக்கடி நினைத்துப் பார்க்கிறதுண்டு.

பதினாலாவது வயசுல காட்டாத்துறையில் உள்ள பள்ளிக்கூடத்துல என்னைக்கொண்டு வந்து சேர்த்தாங்க. அங்கே என்னன்னா என்னோட ஆங்கில அறிவு என்னை மதிப்புக்குரியவளாக்கிச்சு. பர்மாக்காரி பவுறப்பாருன்னு என் காது படவே பேசுவாங்க. டீச்சர்மாருங்க ஆங்கிலத்தைத் தப்பா பேசுறப்ப அவங்க சொல்லுறதைத் திருத்தியிருக்கேன். பொறவு நாகர்கோவில் டதி பள்ளிக்கூடத்துல படிச்சேன். ஆங்கிலத்தில் இருந்த ஈடுபாடு காரணமா எனக்கு தமிழில் கவனம் செல்லவில்லை. டதியில் தமிழ் சொல்லிக் கொடுத்தவர், பர்மாக்காரி பர்மாவுக்குப்போயிடுனு சொல்லி என்னை கிண்டல் பண்ணுவாரு.

தீராநதி: அன்னிக்கு எந்தக் கல்லூரியில படிச்சீங்க..?

ஹெப்சிபா: ஸ்காட் கிறிஸ்டியன் காலேஜ்ல இன்டர்மீடியேட் படிக்கிறப்ப நான்தான் மாநிலத்திலேயே முதலாவதா வந்தேன். திருவனந்தபுரம் யூனிவர்சிட்டி கல்லூரியில் பி.. ஹானர்ஸ் மேற்படிப்பு படிச்சேன். அப்பத்தான் எனக்கு ஆங்கிலக் கட்டுரைகளும் கவிதைகளும் ஊற்றெடுத்து பெருகத்துவங்கின.

முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் எனக்கு சீனியர். இந்த நிலையில எனக்கு ஆங்கிலக் கவிதைகள் படைக்கணும்னு வெறி. முட்டத்துல வைச்சு எஸ்.சி.எம். காம்பில் வைத்து ஒரு கல்லூரி மாணவன் இறந்ததைப்பற்றி கவிதை எழுதினேன். அந்தக் கவிதை பிரேம் செய்யப்பட்டு ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி பிரின்சிபால் அறையில் தொங்கவிடப்பட்டிருந்தது. இன்டர்மீடியேட் படிக்கும்போது நான் இங்கிலீசில் திருவாங்கூர் ஸ்டேட் பர்ஸ்ட். ஆனால் அப்போது இரண்டாம் உலகப்போர் துவங்கிச்சு. உடனே பப்பாவுக்கு பயம் வந்துடுச்சு. அவரு இமயமலையேறி இந்தியாவுக்குத் தப்பி வீடு வந்து சேர்ந்தாரு. சாகிற வரைக்கும் பப்பாவை எக்சைட் செய்யும் அந்த மலைப்பயணம். வழியில் எத்தனையோ பேர் செத்து விழுந்தார்களாம். பப்பா சொன்னது இப்பவும் ஞாபகமா இருக்கு. ஆறாம் வகுப்பில் என்கூடப்படித்த சைனா மாணவன் ஜப்பான் வீசிய குண்டுக்குப் பலியானான். ஊருக்கு வந்ததுக்கப்புறம் பப்பா என்னை நிறைய படிக்கச் சொல்லுவாரு. நான் நிறைய படிச்சு காலேஜ் லெக்சர் ஆகக்காரணமே பப்பாதான். அவரோட தூண்டுதல்தான் எனக்கு ஆங்கில இலக்கியத்துல ஈடுபாட்டை உருவாக்கிச்சு.

தீராநதி: ஆங்கிலப் பேராசியரான நீங்க தமிழ்ப்பேராசியரான ஜேசுதாசனை கல்யாணம் செய்துகிட்டது எப்படி?

ஹெப்சிபா: திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில படிச்ச பிறகு வேலை தேடிட்டு இருந்தேன். இந்த நிலையில என்னைப்பத்தி ஜேசுதாசன் கேள்விப்பட்டிருக்காரு. அப்பவே நான் ஆங்கிலத்துல கட்டுரைகள் எழுதியதால், என்னைப்பத்தி நிறைய பேருக்குத் தெரிஞ்சிருக்கு. அவரு தமிழ்ப் பேராசிரியர். அவருக்கு தமிழில் உள்ள நல்ல இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கணும்னு ஆசை. எங்க வீட்டாருங்க பேசினாங்க. பொதுவா ஒரு ஆங்கிலக் கல்வி பெற்றவ ஒருத்தி தமிழ்க் கல்வி பெற்றவரை கல்யாணம் செஞ்சுக்கிறதை குறைவா நினைப்பாங்க. ஆனால் அவரோட ஆழ்ந்த மனசை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். கல்யாண ஏற்பாடு நடந்துகிட்டிருக்கிறப்பவே எனக்கும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் வேலை கிடைத்தது.

தீராநதி: உங்கள் கணவர் பேராசிரியர் ஜேசுதாசன் பற்றிச் சொல்லுங்களேன்..?

ஹெப்சிபா: அவங்க சொந்த ஊரு சேனம்விளை. அன்றைய திருவாங்கூர் அரசரின் ஊக்கத்தொகையைப் பெற்று பி.. ஹானர்ஸ் படிச்சாரு. இவர் மாணவராகவும் ஆசிரியராகவும் இருந்தபோது கம்பனிடம் ஈடுபாடு வரக்காரணமாயிருந்தது பேராசிரியர் பன்னிருகை பெருமாள் முதலியார். ஹானர்ஸ் முடிச்சதும் அண்ணாமலையிலயும் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலயும் ஆசிரியரா இருந்தார். பிறகு திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் விரிவுரையாளரா, பேராசிரியரா, துறைத்தலைவரா இருந்தார். அப்புறம் கோழிக்கோடு பல்கலைக்கழகம், பாலக்காடு சித்தூர் அரசினர் கல்லூரியில் முதுகலைத்துறையில் தலைவரா வேலை பார்த்தார். அவரு முதற்கனி என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இது முழுக்க முழுக்க மரபுக்கவிதைத்தொகுதி. அதுல ஷெல்லி, கீட்ஸ் உட்பட சில ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்திருந்தார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் வழிகாட்டுதல்ல அவரு (ஜேசுதாசன்) தமிழ் இலக்கிய வரலாறு பற்றி ஆய்வு செய்தார். ஆனால் ஆராய்ச்சிப் படிப்பு முடியாததுனால் அவர் தொகுத்த செய்திகளை கல்கத்தா ஒய்.எம்.சி.. மூலமா ஸ்டரி ஆஃப் டமில் லிட்டரேச்சர்ங்ற பேர்ல புத்தகமா வெளியிட்டாங்க. நிறைய கட்டுரைகள் அவங்க எழுதியிருக்காங்க. அவர் மாணவர்களுக்கு பண்டை இலக்கியங்களைப்போல கம்பனும் புதுமைப்பித்தனும் சுந்தரராமசாமியும் முக்கியம் என்பதை எடுத்துச் சொல்லியிருக்காரு. கேரள பல்கலைக்கழக கல்லூரியில வேலை பார்த்தபோது கேரளத் தமிழ் மாணவர்களுக்கு தற்காலத் தமிழ்ப் படைப்பாளிகளை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பை இவர் ஏற்படுத்திக் கொடுத்தார். கர்நாடக இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இசையை முறையா கத்துகிட்டவரு. என்கிட்டயும் சரி பிள்ளைங்க கிட்டயும் சரி, இவரு கோபப்படவே மாட்டாரு. ரொம்ப அன்பா இருப்பாரு. கவுன்ட் டவுன் ஃபிரம் சாலமோன் தொகுதிகளை இவரோட உதவி இல்லாம இவ்வளவு சிறப்பா கொண்டு வந்திருக்க முடியாது. கம்பனைக் குறித்துத்தான் மூன்றாவது தொகுதியில் சொல்லியிருந்தேன். மூன்றாவது தொகுதி வெளியான பதினைஞ்சாவது நாள் அவரு இறந்துபோனாரு (கண்கலங்குகிறார்).

தீராநதி: அப்புறம் தமிழ்நாவல் பக்கம் உங்க கவனம் திரும்பினது எப்படி?

ஹெப்சிபா: அப்புறம் எங்க வாழ்க்கை நல்லாதான்போயிட்டிருந்துச்சு. எங்க வாழ்க்கை இல்லறத்தோட மட்டுமே நிற்கவில்லை. இரண்டுபேரும் சேர்ந்து இலக்கியத் தேடல்களிலும் ஈடுபட்டோம்.. முதற்கனி, பாரதியாரின் குயில்பாட்டு ஆகியவற்றை அவங்ககிட்டே கேட்டுக் கேட்டு நான் ஆங்கிலத்தில மொழிபெயர்த்தேன். இந்த நேரத்தில தான் அவங்க என்னை தமிழ்ல நாவல் எழுதணும்னு கேட்டுகிட்டே இருந்தாரு. அப்படி இருக்கிறப்ப பழைய நோட்புக்கிலேர்ந்து கொஞ்சம் பேப்பரைக் கிழிச்சு நான் கதை எழுதத்தொடங்கினேன். அதுல ஒரு இடத்திலயும் அவரு தலையிடவில்லை. பதினைஞ்சு நாளு கழிச்சா ஒரு நாவல் ரெடி. கையெழுத்துப்பிரதியை அவரு படிச்சு பார்த்துட்டு கொள்ளாம்.. நல்லாருக்குனு சொன்னாரு. கடைசில என்ன தலைப்பு வைக்கலாம்னு யோசிச்சப்ப புத்தம் வீடுனு அவங்க சொன்னாங்க.. பொறவு கையெழுத்துப்பிரதியை எழுத்தாளர் நகுலன்கிட்டே கொண்டு போனாங்க. அங்கேயிருந்து நண்பர் சுந்தரராமசாமியிடம் கையெழுத்துப்பிரதி போச்சு. எங்க சாரும் சுந்தரராமசாமியும் நல்ல நண்பருங்க. சுந்தரராமசாமி நிறையதடவை எங்க வீட்டுக்கு வந்திருக்காரு. அவரு எழுதின கதையில சிலது படிச்சிருக்கேன். எதுன்னு ஞாபகமில்லை. என்னோட புத்தம் வீடு நாவலை சுந்தரராமசாமி படிச்சுட்டு நாவல் நல்லாருக்குனு என் சார்கிட்டே சொல்லியிருக்காரு. கடைசியில் தமிழ்ப்புத்தகாலயம் கண.முத்தையா வாங்கி அதை புத்தகமா போட்டாங்க.!

தீராநதி: புத்தம்வீடு நாவலை உண்மைச் சம்பவத்தை அடிப்படையா வைச்சா எழுதினீங்க..? இன்னிக்கு வட்டார வழக்கில நிறைய நாவல்கள் வருது ஆனா அந்த காலகட்டத்துல நாடார் சமுதாய மக்களின் வாழ்க்கையை படைப்பிலக்கியத்தில் நீங்கதான் முதல்முதலா பதிவு செய்ததா சொல்லுறாங்க

ஹெப்சிபா: உண்மைச் சம்பவமான்னு கேட்டா.. என்ன பதில் சொல்லுறது. ஆனால் அந்த நாவல்ல கையாண்டிருக்கிற நிறைய கதாபாத்திரங்கள், கதைக்களன்கள் எல்லாமே உண்மைதான். அன்னிக்கு எங்க வீட்டை புத்தம்வீடுன்னுதான் சொல்லுவாங்க. அதுமாதிரி அந்தக் கதையில வர்ற கண்ணப்பச்சி தாத்தா பேரும் என்னோட தாத்தா பேருதான். புத்தம் வீடுக்கு முன்னாடி நாடார் சமுதாய வாழ்க்கைமுறை தமிழ்ல நாவல்வடிவமா வரலைன்னு நினைக்கேன். அதை அவுங்க (பேராசிரியர் ஜேசுதாசன்) ஒரு பெரிய குறையா சொன்னாங்க. அப்பெல்லாம் பிராமண வாழ்க்கைமுறைதான் அதிகமா தமிழ்ல வந்திருக்கு. நாட்டுல பிராமணன் மட்டும்தான் இருக்காங்களா? அவங்க வாழ்க்கைமட்டும்தான் வாழ்க்கையா? நம்ம வாழ்க்கை வாழ்க்கை இல்லையா?ன்னு ஒருதடவை சொன்னாங்க. அவங்க சொன்னதை யோசிச்சுப்பார்த்தப்பதான் நான் வாழுற சமுதாயத்தைப்பத்தி அதேபேச்சுநடையில புத்தம் வீட்டை எழுத முடிஞ்சது. அந்த நாவல்ல நாடார் சமுதாய வாழ்க்கை முறையை ஓரளவுக்கு நல்ல படியா பதிவு செய்திருக்கேன்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. அதுல வர்ற பனையேறி அன்பையன் குடும்பம் மாதிரி நிறையப் பேரை நான் எங்க ஊருல சந்திச்சிருக்கேன்.

தீராநதி: அன்னிக்கு புத்தம் வீடு நாவல் இலக்கிய உலகில் பெரும் விவாதப்பொருளா இருந்ததுதானே..

ஹெப்சிபா: ஆமாம். இந்த நாவல்பத்தி நிறைய விவாதங்கள் அன்னிக்கு வந்துச்சு. சில மலையாள நாவல்கள்தான் புத்தம்வீடு எழுதத் தூண்டுதலா இருந்துச்சுன்னெல்லாம் சொன்னாங்க. ஆனால் எனக்கு மலையாளம் வாசிக்கவே தெரியாது. மலையாளம் நல்லா பேசுவேன். மலையாளிங்க கிட்டே சரிசமமா பேசுவேன். தமிழில் வந்த 10 நாவல்களில் ஒன்னுன்னுகூட புத்தம் வீடைச்சொன்னாங்க. என்னோட நாவல் சம்பந்தமா வந்த விவாதங்களை நான் பெருசா எடுத்துக்கலை. பொதுவா நான் ஆங்கிலத்துலதான் நிறைய எழுதினேன். அவுங்க என்னை கல்யாணம் செய்ததனாலதான் நான் தமிழ்ல எழுதினேன். இல்லைன்னா நான் தமிழ்ல எழுதமாட்டேன். நான் தமிழ்ல நாவல் எழுதியிருக்கேன்னு மார்த்தாண்டத்துல உள்ள என் சொந்தக்காரங்ககிட்டே பெருமையா சொன்னப்ப தமிழிலையா?ன்னு இழிவா கேட்டாங்க என் சொந்தக்காரங்க. புத்தம் வீடுக்கப்புறம் டாக்டர் செல்லப்பா, மாஜனீ, அநாதை ஆகிய நாவல்கள் எழுதினேன்.

தீராநதி: நீங்க நாலு நாவல்கள் எழுதினாலும் இன்னிக்கும் பேசப்படுற நாவலா புத்தம் வீடு இருக்கு. புத்தம்வீடு பேசப்பட்ட அளவுக்கு மத்த நாவல்கள் பேசப்படலையே..?

ஹெப்சிபா: புத்தம்வீடு என்னோட முதல் நாவல். அதை எழுதறப்ப என்ன மனநிலையில இருந்தேனோ அதே மனநிலைதான் மத்த நாவல்களை எழுதறப்பவும். புத்தம் வீடு நாவல்ல இருந்த புதுமை எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. அதுல இதுவரை யாருமே சொல்லாத வட்டார சொல் வழக்கைப் பயன்படுத்தி எழுதியிருந்தேன். புத்தம்வீடுல கல்வி அறிவில்லாத சமுதாயத்தைப்பத்தி சொல்லியிருந்தேன். அதுல சொல்லியிருந்த சமுதாய அமைப்பு இப்படியும் ஒரு சமுதாயம் உண்டா?னு வாசகர்களிடையே கேள்வி எழுப்பியது. அறிமுகமில்லாத ஒரு சமுதாயத்தைக் காட்டினதுனாலதான் புத்தம் வீடு பேசப்பட்டதுன்னு நெனைக்கேன். மத்த நாவல்களைப் பொறுத்தவரையில் அதுல வர்ற சமுதாய அமைப்புகள் எங்கேயும் காணப்படக்கூடிய பொதுவான சமுதாயத்தைப்பத்தி எழுதியிருந்ததுனால அது வாசகர்களை ஈர்க்காமப்போச்சோ என்னவோ..?

தீராநதி: நீங்க நாவல்களில் மதப்பிரச்சாரம் செய்ததாக அன்றைக்கு பேசப்பட்டதே?

ஹெப்சிபா: கண்டிப்பா இல்லை. நான் நாவலை நாவலா பார்த்தேனேதவிர எந்த இடத்திலயும் மதப்பிரச்சாரம் செய்யலை. நான் வாழ்ந்த எனக்குத்தெரிந்த நாடார் கிறிஸ்தவ குடும்பத்தைப்பற்றிச் சொல்லும்போது அவர்களின் மத இயல்புகளைத்தான் நாவலில் சொன்னேனேதவிர எந்த வகையிலும் நான் நாவலில் மதப்பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. ஆனால் நான் பைபிள் பத்தி பிரச்சாரம் நிறைய செய்திருக்கேன். ஆனால் நாவலை அதுக்குப் பயன்படுத்தவில்லை.

தீராநதி: உங்கள் நாவல்களில் பெண்கதாபாத்திரங்களைச்சுற்றியே கதை நகர்த்தப்படுகிறதே? உங்களின் புத்தம்வீடு நாவலாகட்டும், மாஜனீ ஆகட்டும் பெண்களின் வேதனைகளை பரிவுடன் சொல்லியிருந்தீர்கள். உங்களை நீங்கள் எப்போதாவது பெண்ணியவாதி என்று எண்ணியிருக்கிறீர்களா?

ஹெப்சிபா: வீட்டிலயும் சரி, பள்ளிக்கூடத்திலயும் சரி, கல்லூரியிலயும் சரி பெண்களிடம்தான் எனக்கு நெருங்கிய தொடர்பு. கஷ்ப்படுறவங்க மேல இரக்கம் வருவது இயல்பு தானே. என்னைச்சுத்தி நடக்கிற பலவிஷயங்கள் என்னை பாதிச்சிருக்கு. பெண்களுக்கு சமுதாயத்தில் பெரிய தாக்கம் உண்டு. எதையும் சாதிக்கும் ஆற்றல் உண்டு, உண்மையான உழைப்புக்கு மதிப்புக்கொடுப்பவர்கள் என்பதையும் உணர்த்துவதற்காகவே என் நாவல்களில் வரும் பெண்களை உயர்வாகச் சித்தரித்திரிந்தேன்.

தீராநதி: உங்கள் நாவல்களில் வரும் பெண்கள் அனைவரும் கிறிஸ்தவப்பின்னணியில் வளர்ந்தவர்களாக காண்பித்திருந்தீர்கள். இதற்குக் காரணம் ஏதேனும் உண்டா?

ஹெப்சிபா: கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்திலயும், கிறிஸ்தவக்கல்லூரியில் படித்ததினாலும், அக்கம்பக்கத்தவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்ததினாலும் கிறிஸ்தவர்களோடு மாத்திரமே நெருக்கமான பழக்கம் இருந்ததினாலும் என் நாவல்களில் வரக்கூடிய பெண்பாத்திரங்களும் கிறிஸ்துவப் பின்னணியில் வளர்ந்தவர்களாக அமைந்துவிட்டனர்.

தீராநதி: நீங்கள் படைத்துள்ள பெண்பாத்திரங்கள் உங்கள் குடும்பத்தோடு இணைந்த பாத்திரங்கள் என்று சிலர் கருதுகிறார்களே. நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

ஹெப்சிபா: அது என் குடும்பத்தோடு இணைந்த பாத்திரங்கள் அல்ல. அப்படி சிலர் கருதினால் அது தவறு. ஆனால் நான் எழுதிய நாவல்களில் படைக்கப்பட்ட பெண்கள் அன்றைய காலகட்டத்தில் நான் சந்தித்த சில பெண்கள்தான்.

தீராநதி: நீங்கள் படைத்துள்ள பெண் பாத்திரங்களில் உங்கள் சுயநிலைகளை அதிகமாக வெளிப்படுத்தும் பாத்திரமாக நீங்கள் கருதுவது எது?

ஹெப்சிபா: மாஜனீ. பர்மாவில் ஏழு வயதிலிருந்து 14 வயது வரையிலும் நான் படிக்க நேர்ந்தது. என் தந்தை அங்கே ஆசிரியரா பணியாற்றினார். அதற்குப்பிறகு அங்கே போர் ஏற்பட, இந்தியா திரும்ப நேர்ந்தது. இந்தக் காலகட்டத்துல நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் என் மனசுல இன்னிக்கும் ஓடிகிட்டிருக்கு. இதை மையமா வைச்சே மாஜனீ நாவலைப்படைச்சேன். மாஜனீ நாவலில் வரும் மாஜனீ கேரக்டரின் இயற்பெயர் கிரேஸ் அழகுமணி அவளது பெயரில் உள்ள இறுதிப்பகுதியை பர்மீய ஒலிக்கிசைய மாஜனீ என மாற்றி அழைப்பதைத்தான் நாவலுக்குத் தலைப்பாக வைத்தேன்.

தீராநதி: இந்த நாவல்களைப் படைச்சதுக்கப்புறம் நீங்க எழுதுறதை விட்டிட்டீங்க போல?

ஹெப்சிபா: ஆமாம். தமிழ்நாவல் எழுதறதை விட்டேன். ஆனால் நான் தமிழ், ஆங்கிலத்துல கட்டுரைகள் எழுதிகிட்டிருந்தேன். எனக்கு எழுதணும்னு உந்துதல் வராம நான் எழுதமாட்டேன். எழுத்து மனசிலேர்ந்து வரணும். அதுக்காக என்னதான் உந்தித்தள்ளினாலும் எழுதமுடியாது. நாவல் எழுதலைன்னு எனக்கு வருத்தம் ஒண்ணும் கிடையாது. ஆனால் குழந்தைகளுக்காக நிறைய எழுதத் துவங்கினேன். பத்து வருஷத்துக்கு முன்னாடி எழுத ஆயத்தமானபோது ஒரு குரலைக் கேட்டேன். stop that you have other work to do அதே வேளை மின்னல் போல, பழைய இலக்கியம் தொட்டு freedom movement வரை ஒரு ரோட்டைக்கண்டேன். 1998-ல் துவங்கி 2002-ல் நான்கு வால்யூம்களாக Count down from Solomon வெளியிட்டிருக்கேன். இதுக்கு அவுங்க(ஜேசுதாசன்) ரொம்ப உதவி செய்தாங்க. எகிப்தில் உள்ள மன்னன் சாலமனின் அரண்மனையில் தேக்குமரத்துண்டுகளாலான பலகைகள் இருந்தது. அன்றைக்கு எகிப்தும் இந்தியாவும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தன. தென்னிந்தியாவிலிருந்துதான் தேக்குமரம் அங்கே கொண்டுசெல்லப்பட்டிருக்க வேண்டும். எனவே தமிழ்நாட்டுடன் அன்றைக்கு எகிப்திற்கு தொடர்பு ஏற்பட்டிருக்கவேண்டும். அதனால்தான் கவுண்ட் டவுன் ஃபிரம் சாலமோன்னு தொகுப்புக்கு பேர் வைச்சேன்.

தீராநதி: தலித் இலக்கியம் பற்றி உங்கள் கருத்தென்ன..?

ஹெப்சிபா: இலக்கியத்தை மேல்வர்க்க இலக்கியம் தலித் இலக்கியம்னு பிரிச்சுப்பேசுறதுல எனக்கு உடன்பாடு இல்லை. அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி ஜாதியை நான் எதிர்க்கிற ஆளாக்கும். ஒரு விசயம் சொல்லுதன் கேட்டுகிடுங்க.. என்னோட மகன் டாக்டர் தம்பி தங்ககுமார் கேரளா பல்கலைக்கழக கல்லூரியில பிசிக்ஸ் படிச்சதுக்கப்புறம் சென்னை ..டி.யில மேற்படிப்பு படிக்க செலக்ட் ஆனான். படிச்சு முடிச்சு வந்ததுக்கப்புறம் மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்துவக்கல்லூரியில புரபசரா வேலை கிடைச்சது. வேலை கிடைச்சதும் என்கிட்டே சொன்னான், அம்மா எனக்கு நம்ம ஜாதியில பொண்ணு வேண்டாம். வேற ஜாதியில எனக்கு அம்மா பொண்ணு பாத்துதரணும்.. டவுரி ஒண்ணும் வாங்கக்கூடாது.. குறைஞ்சது பி.. வரையாவது படிச்சிருந்தாபோதும்.. நாம் கிறிஸ்துவத்தை கடைப்பிடிக்கிறதுனால கிறிஸ்துவரா இருந்தா நல்லதுனு சொன்னான். நானும் அவரும்(ஜேசுதாசும்) என் மகன்கிட்டே உட்கார்ந்து பேசுனோம். வேற ஜாதியில பொண்ணு பார்க்கிறதுல ஒண்ணும் பிரச்சனை இல்லை. ஆனா நாளைக்கு குழந்தைங்க பிறந்து அதுகளுக்கு கல்யாணம் பண்ணுறப்ப ஏதாவது பிரச்சனை வந்தா என்ன பண்ணுறதுன்னு அவன்கிட்டே கேட்டோம். அதுக்கு அவன் சொன்னான், அதைப்பத்தி அப்ப பாத்துக்கலாம்னு. நாங்க சரின்னுட்டோம். அன்னைக்கு எங்க வசதிக்கு பலரும் பல லட்சரூபாய் டவுரி தந்து பொண்ணைத்தர தயாரா இருந்தாங்க. ஆனா எங்களுக்கு எங்க மகனோட விருப்பம்தான் பெருசா தோணிச்சு. எங்க முடிவை சர்ச் பாஸ்டர்கிட்டே எங்க மகனோட எதிர்பார்ப்பைச் சொன்னோம். உடனே பாஸ்டர் சிரிச்சுகிட்டே சொன்னாரு, ஒரு குடும்பத்துக்கு பல லட்சரூபா லாபமாச்சுன்னு.. மகன் ஆசையைச் சொல்லிட்டான். அவனுக்கு விரும்பினமாதிரி எங்க போய் பொண்ணு தேடுயதுன்னு பலருகிட்டேயும் பேசினோம். அப்போதான் டதியில பாடம் சொல்லித்தந்த டீச்சர் பத்தி ஞாபகம் வந்துது. அவங்க ஷெட்யூல்ட் காஸ்ட். அவங்களோட ஹஸ்பண்ட் பிராமின். திருவனந்தபுரத்தில அவரு வேலை பார்த்தாரு. நான் வேலைக்கு வந்ததுக்கப்புறம் அவங்களோட எந்தத் தொடர்பும் இல்லாம இருந்துச்சி.. ஒரு வழியா அவங்களைக் கண்டுபிடிச்சு என் மகனின் விருப்பத்தைச் சொன்னேன். அவரு ஆந்திராவில் இருக்கிற அவரோட உறவினர் பாஸ்டர் தேவபிரகாசம் பத்தி சொன்னாரு. தேவபிரகாசமும் பிராமின் குடும்பத்தைச்சேர்ந்தவர். அவரும் கிறிஸ்டினா கன்வெர்ட் ஆனவரு. இவரு தனியா போதம் செய்திட்டிருந்தாரு. அவருக்கு இரண்டு பெண்பிள்ளைகளும் இரண்டு பையன்களும். இந்த நிலையில அவருக்கு மனைவி இறந்துபோனாங்க. இவரு போதனை செய்ய ஊரூரா அலைஞ்சிட்டிருப்பாரு. அதனால் அவருக்கு பிள்ளைங்க எதிர்காலம் பத்தி பயம் வந்துது. இந்தச் சமயத்துல எனக்கு டதி ஸ்கூல் டீச்சர் பாஸ்டர் தேவபிரகாசத்தோட மூத்த மகள் விஜய கீர்த்தியை என் மகனுக்கு பேசி முடிச்சாங்க. திருவனந்தபுரத்தில சர்ச்சுல வைச்சு கல்யாணம் நடந்தது. அதனால் எனக்கு ஜாதியில எல்லாம் நம்பிக்கை இல்லை. அதுபோலவே என் பேத்திக்கும் (தம்பி தங்ககுமாரின்மகள்) கலப்புத்திருமணத் தம்பதியரின் மகனைத்தான் பார்த்து திருமணம் செய்து வைத்தோம். எனக்கு தலித்துன்னும் கிடையாது.. பிராமணன்னும் கிடையாது.. நாடார்ன்னும் கிடையாது. அதனால இலக்கியத்தை தலித்துன்னு பிரிச்சுப்பாக்கிறது சரியில்லைங்கிறதுதான் என்னோட கருத்து.

தீராநதி: இப்போது தமிழிலக்கியத்தை எடுத்துகிட்டா தலித் இலக்கியம் முன்னேற்றப்பாதையில் செல்வதாக தெரிகிறது. தலித் எழுத்தாளர்கள் பற்றி உங்கள் கருத்து.

ஹெப்சிபா: அதுதான் மொதல்லேயே சொல்லிட்டேனே, நான் இலக்கியத்தைப் பிரிச்சுப்பாக்கவே இல்லைன்னு. யாரு தலித் எழுத்தாளர்னெல்லாம் எனக்குத்தெரியாது..

தீராநதி: இலக்கியத்தைப்பத்தி உங்கள் மதிப்பீடு என்ன..?

ஹெப்சிபா: இலக்கிய உலகம் கடல் போல. மனிதர்களில் எத்தனை விதமோ, இலக்கியமும் அத்தனைவிதமாகத்தானிருக்கும். கலங்கல் நீர்போன்ற வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இலக்கியம்தான் இன்று பெருவாரியான மக்களைக் கவர்கிறது. அதில் அதிசயம் ஒன்றும் இல்லை. இது இயல்புதான். ஆசிரியர்கள் தங்கள் வாழ்க்கைத் தத்துவ நிலையிலிருந்துதானே தங்கள் படைப்புகளுக்கு உருக்கொடுக்க முடியும். தரக்குறைவான படைப்பாளர்கள் விற்பனையை முன்னிட்டு அல்லது புகழை முன்னிட்டு ராகத்துக்குத் தகுந்த தாளமாக, எந்தத் தத்துவம் மக்களிடையே எடுபடுகிறதோ, அந்தத் தத்துவத்தையே கையாளுகிறார்கள். இதில் புதுமை ஒன்றும் இல்லை. பொதுவுடமை இலக்கியமாவது, புராண இலக்கியமாவது நமது நம்பிக்கையைக் கலைக்கப்போவது இல்லை. சத்தியத்தில் நிலை நிற்பவர்களுக்கு சத்தியம் வழியாகத்தான் இலக்கியத்தை உணர முடியும். தூய்மையையும் சத்தியத்தையும் கம்பர் மனசார வாயாரப் பாடுவதற்காகவே நாம் கம்பரைப் பாராட்டுகிறோம். பொது உடைமை இலக்கியத்தின் ஒரு பெரிய குறை என்னவென்றால், பொய்தான். பணக்காரன் மகாபாவியாக இருக்கலாம், ஒப்புக்கொள்கிறோம். வஞ்சனைக்காரனாக இருக்கலாம். ஏழைமீது காட்டுவது அக்கிரமமாக இருக்கலாம். அதையும் ஒப்புக்கொள்வோம். ஆனால் ஏழையானவன் நல்லவன் என்று எடுத்துக்காட்டுகிறார்களே, அதைத்தான் ஒப்புக்கொள்ளமுடியாது. ஏழையின் கையில் அதிகாரத்தைக் கொடுத்துப்பார்த்தாலல்லவா தெரியும். அவன் கொண்டு பிறந்த குணம் எப்படிப்பட்டது என்பது..? அதற்காக அக்கிரமத்தை அக்கிரமமல்ல என்று சொல்லவேண்டாம். ஆனால் ஏழை மீது இரக்கம் பாராட்டும்போது, அந்த இரக்கம் உண்மையானதுதானா? அல்லது சொந்தக்காரியம் சிந்தாபாத் என்ற முறையில் அமைந்திருக்கிறதா என்பதுதான் விஷயம். பொய்யின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு, காட்டுற இரக்கத்திற்கு என்ன பெயர் கொடுப்பது.? குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கிறதா? எதுவாக இருந்தாலும் அது கலை என்று நாம் ஒப்புக்கொள்ள முடியாது. மெய்யான கலை, உண்மையின் அடிப்படையிலேயே உருப்பெறுவது. உண்மை என்பது எல்லா மனுஷருக்குமே உரிமையுள்ள ஒன்று. ஆனால் அதற்கு வேண்டுமென்றே கண்ணடைத்துக்கொண்டால் என்ன செய்ய முடியும்? அத்தகையை நிலையைக் கலை என்று எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்..? மனித இருதயம் கலையால் மாற்றம் அடையுமோ என்பது சந்தேகத்துக்குரியது. மண்ணை உடைத்து மரமடித்து விதைபோடுகிறமாதிரி, கலையால் மனித சிந்தனைக்கு ஓரளவு பக்குவம் கொடுக்கமுடியும். மனமாற்றம் என்று நாம் சொல்லும்போது அது சிந்தனையளவில் நின்று விட முடியாதல்லவா? ஓல்ட் மேன் அன்ட் தி சீ என்ற நூல் நம்மை வெகுவாக சிந்திக்க வைக்கிறது. கடலோடு போராடின மீனவனை ஒரு வீரனாகவே காட்டுகிறது. ஆனால் அதே மீனவன் ஆசிரியரிடம் பொருளுதவிக்காகப் போனபோது ஆசிரியர் மறந்துவிட்டதாக அறிகிறோம். கலை என்பதே இந்த அளவுதான். கற்பனையோடு பெரும்பாலும் நின்று விடுகிறது. கற்பனை என்பது மனிதனுக்கு இறைவன் கொடுத்த ஒரு அருமையான வரம்தான். செவியில்லாமல் வீணையைக் கேட்டு இன்புற முடியுமா? கண்ணில்லாமல் நிலவைப் பார்த்து ரசிக்க முடியுமா? செவியையும் கண்ணையும் கொடுத்த இறைவனே கற்பனையையும் நமக்குக் கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்த வரங்களை நாம் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம். கண்ணையும் செவியையும் கர்த்தர் கொடுத்திருக்கிறார் என்பதற்காக இருட்டு விடிய டி.வி.(டெலிவிஷன்)க்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு கண்களைக் கெடுத்துக்கொண்டிருக்கிறோம். கலை கலை என்று பலரும் வனைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பல எழுத்தாளர்களுக்கும் வாழ்க்கையை விட கலைதான் பெரிதாகத் தெரிகிறது. அதனால் வாழ்க்கையே தொலைந்து விடுகிறது. கலையும் நெறிதவறிப் போய்விடுகிறது. கலை என்ற நிலையில் இலக்கியத்திற்கு ஒரு கணிசமான வரையறை உண்டு. நல்ல இலக்கியங்களை வாசித்துப் பழகினவர்களுக்கு அது இந்த வாழ்க்கையில் ஒரு இன்பம் தருகிறது என்பது உண்மை. அத்தகைய இன்பத்தில் தவறில்லை என்பதும் உண்மை. இனிய பதார்த்தங்களை நாம் சாப்பிடுவதில் தவறில்லை எனில் நல்ல நூல்களை வாசிக்கிறதிலும் தவறிருக்க முடியாது. ஜேன் ஆஸ்டினின் கதைகளைப் படிக்கும்போது ஒரு அடிப்படை நிம்மதியை நாம் அனுபவிக்கவே அனுபவிக்கிறோம். நேர்மாறாக வர்ஜனியா ஊல்ஃபின் கதைகளை வாசிக்கும்போது, ஐயோ என்ன பரிதாபம்! இப்படியா வாழ்க்கையைக் கண்டிருக்கிறாள்? என்ற மனக்கஷ்டம் மேலோங்கி நிற்கிறது. கற்பனை இலக்கியத்தில் செயல் என்றாலோ பெரும்பாலும் கற்பனை உலகத்தோடு நின்று விடுகிறது. அப்படி நிற்கவும்தான் வேண்டும். இல்லாவிட்டால் மனிதன் பைத்திய நிலையில் அல்லவா ஆகிவிடுகிறான். கற்பனையில் டார்சான் (டார்ஜான்) என்னவெல்லாமோ செய்கிறான். அதை நிஜ வாழ்க்கையில் செயல்படுத்திவிட்டால் மரத்திலிருந்து விழுந்து முதுகை ஒடித்துக் கொள்ளலாம். அல்லாவிட்டால் புலியின் வாயில் சென்று விழலாம். சத்தியம் என்பது, கற்பனையில் கிரியை செய்யும்போது அந்தக் கற்பனைக்கு, சிருஷ்டியின் நிழல் என்ற அளவுக்கு அழகு வருகிறது. என்னதான் இலக்கியம் என்றாலும் இறைவனின் ஆசியின்றி ஒன்றுமே இல்லை. இன்றைய இலக்கிய ஆசிரியர்களின் விஷயம் பயத்தைத் தருகிறது. பிறவிச்செவிடன் பாட்டுப்பாடப்போனால் பாட்டின் கதி என்னவாகுமோ அந்தக் கதிதான் அவன் எழுதுகிற இலக்கியத்துக்கும். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் எதற்கும் குறைபட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். சத்தியம் சத்தியம் என்பதையும் இலக்கியம் வெறும் இலக்கியம் என்பதையும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

தீராநதி: அதென்ன உங்களுக்கு கம்பனிடம் அத்தனை ஈடுபாடு..? கவுன்ட் டவுன் ஃபிரம் சாலமோனில் மூன்றாவது தொகுதி முழுக்க கம்பரசத்தை அழகாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பன்முகச் சிந்தனைகளை உருவாக்கியிருந்தீர்கள். இதற்குக் காரணம்..?

ஹெப்சிபா: தமிழ்ல கம்பனில் இல்லாதது எதுவும் இல்லை. தமிழ் இலக்கியம்னா அது கம்பன் தான். என்னைப்பொறுத்தவரை சமுதாயம் ஆகட்டும், நட்பாகட்டும், போர் ஆகட்டும், கம்பராமாயணத்துல ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கைதான். நாடு கடத்தப்பட்ட ராமன் பின்னால தருமம் இரங்கிப்போகிறது. ராமனின் பட்டாபிஷேகத்துக்கு என்று அமைத்த முல்லைப்பந்தல் கலைவது, ராமனிடம் அபயம் தேடுமாறு புத்தி சொல்லும் சகோதரனிடம் அழும் கும்பகர்ணன், தன்னுடைய நாயகியிடமிருந்து தன்னைப்பிரிக்கும் கடலை உற்றுநோக்குவது மருதத்தின் வர்ணனை, ராஜகுமாரி திருமணத்தன்று ராஜசபையில் வருகிற அழகு என ஆயிரம் இடங்களில் கம்பன் வாழ்க்கையின் ஆழங்களைத்துழாவி, அதன் சிகரங்களை எட்டிப்பிடித்து அதன் அழகுகளை கையிலடக்கி விடுகிறான். இதனால் தான் கம்பனை சாகாவரம் பெற்ற கவியாக உலகிலுள்ள மகா கவிகளில் ஒருவனாக ஏன் ஷேக்ஸ்பியரோடேயே தோளோடு தோளாக நிற்கக்கூடியவனாக நாம் கருதுகிறோம். ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியர் எப்படி நம்மை திகைக்க வைக்கிறானோ அதுபோலவே கம்பனும். கம்பராமாயணத்தில் ஒரு சொல் கூட வீணான சொல் கிடையாது. அதிகப்பிரசங்கம் என்பார்களே, அது கம்பராமாயணத்தில் கிடையாது. கம்பன் பல்வேறு கவனங்களில் நம்மை ஈர்க்கும்போது காவியத்தை வேண்டுமென்றே நீள வைக்கிறான். அது சபையின்தேவை. கம்பராமாயணத்தின் சில அழகுகள் சிலருக்கென்றே அமைக்கப்பட்டன. கேட்போரை ஈர்க்கவேண்டும். அழகு மந்திரத்தால் கட்டுப்படுத்தவேண்டும். இதெல்லாம் இல்லாமல் அன்று கம்பன் கவியாக இருந்திருக்க முடியாது. கம்பனின் மகா காவியப்பரப்பில் நாம் உற்று நோக்குகிற அனுபவம், ஷேக்ஸ்பியரின் நாடக சாகரத்தில் பார்க்கிற அனுபவத்தைப் போலிருக்கும்.

ஷேக்ஸ்பியராகட்டும் கம்பனாகட்டும் இயல்பிலேயே மகா கவிகளாக அமைந்தவர்கள். இருவருக்கும் திடீர் திடீர் என்று வாழ்க்கையின் மிகப்பெரிய இரகசியங்களைப்-பற்றிய தரிசனங்கள் கிடைத்துக் கொண்டிருந்தது. உள்ளுணர்வு அவர்களை உந்தித்தள்ளிய வேகத்தில் தங்களை அறியாமலேயே கலை எண்ணத்தைக் கடந்த மகாகவிகளாகிவிட்டார்கள்.

புவியினுக்கணியாய், ஆன்ற பொருள் தந்து, புலத்திற்றாகி

அவி அகத்துறாஇகள் தாங்கி, ஐந்திணி நெறி அளாவி,

சவிஉறத்தெளிந்து, தண்ணென்(று) ஒழுக்கமும் தழுவி, சான்றோர்

கவியெனக்கிடந்த கோதாவரியினை வீரர்கண்டார்! என்ற கோதாவரியினைப்பற்றிய இந்த அற்புத வரியிலிருந்து கம்பன் கவிதையை எப்படிப்பார்க்கிறான் என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

மகா காவியத்தை விட விரிந்து பரந்து கிடக்கக்கூடியது எது? பெரு வெள்ளத்தின் பிரவாகத்துக்கு வேறு எந்த ரீதியாக எழுதிய கவிதையை ஒப்பிட முடியும்? மட்டுமல்லாமல் கம்பனுக்கு மூல நூலான இராமாயணம் இருக்கவே இருக்கிறது. கம்பனைப்பற்றிய கவிக்கு எதைப்பின்பற்றத்தேவை என்பது நன்கு தெரிந்திருக்கும். தன் காவிய முன் மாதிரி தன் முன்னால் இருக்க, ரசிகர் சபைக்கு தினம் தினம், படலம் படலமாகப்பாட வேண்டிய தேவையும் இருந்திருக்கிறது. கம்பனைப்போல் செவிக்கு இனிமையாகப்பாட வல்லவர் யார்? இந்த இனிமை சில வேளைகளில் வார்த்தைப்பந்தலாக அமைந்து விடுகிறது. பொருளை உணராமலேயே இசையை ரசிக்கிற நிலைமை வந்து விடுகிறது. விரிந்து, பரந்து கிடக்கிற காவியம் வேண்டுமல்லவா? இழுக்கிற இழுப்புக்கெல்லாம் காவியம் வளைந்து கொடுக்கிறது. சபையில் சுகம் காண வந்தவனை, கனவு காணவந்தவனை திருப்தி செய்வதற்கென்றும் காவியத்தை அமைக்க வேண்டிய நிலை பலவிதப்பட்ட ரசிகர்களை திருப்தி செய்கிற வேலைக்கு கம்பன் இறங்கியிருக்க வேண்டும். ஷேக்ஸ்பியர் செய்ததும் இதைத்தான்.

கம்பன் வால்மீகியிடமிருந்து கடன் வாங்கினானா? ஷேக்ஸ்பியர் எத்தனையோ பேரிடமிருந்து காப்பி அடித்திருக்கிறான். ஷேக்ஸ்பியர் வெற்றி பெற்ற மாதிரியே கம்பனும் வெற்றி பெற்றான். மக்கள் அவன் யாரிடமிருந்து காப்பியடித்தான் என்பதை மறந்துவிட்டு கம்பனிலேயே பெருமிதம் கொண்டார்கள். ஆங்கிலேயர் ஹாலின்ஷெட் க்ரானிக்கிள் போன்ற மூல நூல்களை மறந்துவிட்டு ஷேக்ஸ்பியர் எடுத்துக்காட்டிய வாழ்க்கை நாடகத்தில் பெருமிதம் கொண்டார்கள் அல்லவா, அதுபோல் இங்கே நான் அழுத்திக்கூற விரும்புகிற விஷயம், ஷேக்ஸ்பியரின் குற்றங்குறைகளைப்போலவே கம்பனின் குற்றங்குறைகளையும் பெரும்பாலும் சபையின் விருப்பு வெறுப்புகளோடும், காலத்தின் தேவைகளோடும் பண்பாட்டின் அமைப்போடும் பொருந்தக்காணலாம்,

கம்பன் பாலுறவை வெறியோடு, மிருக இச்சையோடு ஒரு கூச்சமும் இல்லாமல் விவரிக்கத்துணிவது என்னவோ உண்மைதான். ஆனால் சீதாராமர் காதலில் அந்த விஷயத்தில் மவுனம் சாதிக்கிறான் என்றே சொல்ல வேண்டும். அனுமனை இராமன் சீதையிடம் அனுப்பும்போது ஏதெதோ உளறுகிறானே அதை மட்டும் நாம் நீக்கிவிட்டுப் பார்த்தால் அவற்றில் கம்பனின் இயல்பான பண்புகள் காணப்படவில்லை என்பது ஞாபகமிருக்கவேண்டும். கம்பனிடம் தான் சபைக்கு முன் கலைஞனாக வேண்டும் என்ற உத்தரவாத உணர்வு தெரிகிறது. இந்த உணர்வால் கலைக்கு அல்லது உத்திக்கு அதிகப்படியான முக்கியத்துவம் வந்து அதனால் கம்பனை வேண்டாத வழிகள் பலவற்றுக்கு இழுத்துச் செல்கிறது. அன்றைய நிலையில் இந்த வழிகள் தவிர்க்கக்கூடாதவையாக இருந்திருக்கலாம். கம்பனிடமிருந்து சபை எதிர்பார்த்த கலையும் பக்தியும். சபையில் அவன் துணிந்தெழுதின காமரசம் கொண்ட பல கட்டங்களை ரசிக்கக்கூடிய பல கவியுள்ளம் படைத்தவர்கள் இருந்திருக்க வேண்டும். தன் தேவன் தேவியரை அவன் எடுத்துக்காட்டிய விதத்தில் பக்தியுணர்வில் கரைந்து போகத்தயாராக பக்தர்களும் இருந்திருக்கவேண்டும். எழுத்துப்பிரவாகம் அவனுள் இருந்தது. அவன் நல்லகாலம் அதில்லாமல் ராமாயணம் அரங்கேற்றப்பட்ட வட்டத்தின் தேவைகளை அவன் திருப்தி செய்வதில் வெற்றி கண்டிருக்கமுடியாது. அந்த வட்டம் ஏற்கெனவே அறிந்திருந்த ராமாயணத்தை ஒட்டித்தன் காவியத்தை அமைப்பது கூட கம்பனின் வெற்றிக்கு அவசியமாக இருந்தது. அது போல காமப்பித்தர்களுக்கும் பக்தர்களுக்கும் கலைப்பித்தர்களுக்கும் கூடத்திருப்தி தேடிக்கொடுப்பது கம்பனின் இலக்கிய வெற்றிக்கு மிகமிக அவசியமானதாக இருந்தது. சபை விரும்பியதை கம்பன் செய்தான். கம்பனில் சொல்லாததும் எதுவும் இல்லை. அதனால்தான் Count down from Solomon. ஒரு தொகுதி முழுவதுமே கம்பராமாயண இலக்கிய ரசத்தை சொட்டச்சொட்ட சொல்லியிருக்கேன்.

தீராநதி: உங்களுக்கு விருது ஏதாவது கிடைத்திருக்கிறதா?

ஹெப்சிபா: தமிழ்லேர்ந்து ஆங்கிலத்துல எழுதினதுனால எனக்கு 1965-ல் ஒரு விருது கொடுத்தாங்க. நான் விருதை எதிர்பார்த்து ஒண்ணும் எழுதவில்லை.

தீராநதி: நீங்க எழுதினது பணத்துக்காகவா? உங்கள் ஆத்ம திருப்திக்காகவா?

ஹெப்சிபா: பணத்துக்காக எழுதவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. வீட்டுலயும் எனக்கு நல்ல வசதி. அதுக்குமேல பேராசிரியர் வேலை இருந்ததுனால் எனக்கு பணத்துக்கு பிரச்சனை ஒண்ணும் இல்லை. மொதல் நாவல் எழுதினேன். ஒரு கட்டத்துல நாவல் எழுதவேண்டாம்னு சொல்லி இலக்கியம் பக்கம் போனேன். கடைசியா தமிழ் இலக்கியம் பத்தி நான் எழுதிய கவுண்ட் டவுன் ஃபிரம் சாலமோன் நான்கு தொகுதிகளை நினைக்கிறப்ப எனக்கு பயம்தான் வருது. எழுதுறது எனக்கு கடவுள் தந்த வரம்னு நினைக்கேன். 9 வயசுல எனக்கு தேவதை பேனா தந்ததுமாதிரி வந்த கனவை அடிக்கடி நினைச்சுப்பார்ப்பேன். அதனால என்னோட பேனாவால கிடைக்கிற ஒரு காசுகூட என்னோட குடும்பத்துக்கு செலவிடக்கூடாதுங்கிறதுல நான் வைராக்கியமா இருக்கேன். என் எழுத்திலேர்ந்து கிடைக்கிற வருமானத்தை சர்ச்சுகளுக்கும், உதவி மையங்களுக்கும் செலவிடுறேன். புலிப்புனம் பகுதியில நானும் அவங்களும் (ஜேசுதாசன்) சேர்ந்து ஒரு ஆங்கிலப்பள்ளியைத் துவங்கினோம். அதுக்கு பேருகூட ஆங்கிலப்பேராசிரியரின் ஆங்கிலப்பள்ளின்னு வைச்சோம். அவர் காலத்துக்கப்புறம் தங்கக்கண் நினைவு ஆங்கிலப்பள்ளின்னு பேர் மாத்திட்டோம். இங்கே நாங்க குறைஞ்ச செலவில இந்தப் பகுதியில உள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலக்கல்வி வழங்கிட்டு இருக்கோம். என்னோட மருமகள்தான் இப்ப இந்தப் பள்ளியை நடத்திகிட்டு வர்றாங்க. இந்தப் பள்ளிக்கூடத்தை நடத்த போதிய வருமானம் இல்லாததனால் என்னோட எழுத்திலேர்ந்து கிடைக்கிற வருமானம்தான் பள்ளிக்கூடத்தை நடத்துறதுக்கு உதவியா இருக்கு.

தீராநதி: நீங்கள் எழுதிய கிராண்ட்மா டைரிக்கு திருவாங்கூர் இளவரசி முன்னுரை அளித்திருந்தார்களே..

ஹெப்சிபா: நான் கேரள பல்கலைக்கழக கல்லூரியில் வேலை பார்த்தபோது திருவாங்கூர் இளவரசி கவுரி லெஷ்மிபாய் எனது மாணவி. நான் ஆங்கிலத்தில் கவிதை வெளியிடுகிறேன் என்றதும் மனப்பூர்வமாக முன்வந்து முன்னுரை வழங்கினார்.

தீராநதி: நாவல் எப்படி இருக்கணும்னு சொல்ல வர்றீங்க..?

ஹெப்சிபா: எழுதுறது பெரிய விஷயம் இல்லை. ஆனால் எழுதறவங்களுக்கு ஒரு மேதைத்தன்மை இருக்கணும்கிறதுதான் என்னோட அபிப்பிராயம். இப்ப முட்டையை எடுத்துகிட்டோம்னா வெள்ளைக்கருதான் அதிகமா இருக்கு. ஆனால் மஞ்சள் கருதான் முக்கியம். முட்டையில இருக்கிற மஞ்சள்கரு போலத்தான் மேதைத்தன்மை. நாவலில் உண்மைத்தன்மை இருக்கணும். சமுதாயத்தைப்பத்திச் சொல்லியிருக்கணும். நாவலில் யதார்த்தம் வெளிப்படணும்.

தீராநதி: இப்ப உள்ள எழுத்தாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்..?

ஹெப்சிபா: அப்பவும் சரி, இப்பவும் சரி, எனக்கு அதிகமாக நாவல்கள் படிக்கிற வாய்ப்பு குறைவு. இந்தக் காலத்துல யாரு எழுதுறாங்கன்னு ஒண்ணுமே எனக்குத் தெரியாது.

தீராநதி: மேல்நாடு இலக்கியத்திலும் தமிழிலும் உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆங்கில எழுத்தாளர்களில் உங்களைக் கவர்ந்தவர்..?

ஹெப்சிபா: ஜேன் ஆஸ்டின். அவரோட எம்மா நாவல் ரொம்பப் பிடிக்கும். அது போல டால்ஸ்டாயின் எழுத்துக்களை ரொம்பப் பிடிக்கும்.

தீராநதி: தமிழில் வெளியான சிறந்த நாவல் என்று எதைச் சொல்வீர்கள்?

ஹெப்சிபா: முன்னாடி கல்கி நிறைய எழுதியிருந்தார். ஆனால் அதில் யதார்த்தமில்லை. தமிழ்ல நிறைய நாவல்கள் இருக்குது. நான் போதுமான அளவுக்கு தமிழ்நாவல் வாசிக்கவில்லை. அதனால் எது நல்ல நாவல்னு என்னால் சொல்ல முடியலை. கல்லூரியில் படிச்சிட்டிருந்த, வேலை பார்த்த காலத்துல உள்ள நாவல்களைத்தான் சிலவருசத்துக்கு முன்னாடி வரை படிச்சது. இப்ப ஒண்ணுமே படிக்க முடியவில்லை. அதனால் நாவல்களைப் படிக்காம சிறந்த நாவல் எதுன்னு என்னால சொல்ல முடியாது.

தீராநதி: உங்களுக்குனு ஆசைகள் ஏதாவது?

ஹெப்சிபா: இலக்கியத்தில் ஈடுபாடு உள்ள எங்கள் வீட்டில் எங்கள் பிள்ளைகளுக்கு இலக்கிய ஈடுபாடு இல்லாமல் போனது வருத்தம்தான். கம்பனைக் குறித்து ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என நினைத்திருந்தேன். இப்போது எனக்குள்ள உடல் நிலையில் என்னால் இது முடியாது. யாராவது மொழிபெயர்க்க வந்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன்!

(நிறைய கேள்விகள் கேட்டும் ஹெப்சிபாவிடமிருந்து உரிய பதில்களைப்பெற சிரமப்படவேண்டி வந்தது. நிறைய கேள்விகளுக்கு மவுனமே பதில். பேராசிரியர் ஏனோஸ் உதவியால் ஓரளவுக்கு அவரிடமிருந்து பதில்களைப் பெற முடிந்தது.)

நன்றி: தீராநதி 2008

 

புத்தம் வீடு 

ஹெப்சிபா ஜேசுதாசன்

காலச்சுவடு பதிப்பகம் (நவம்பர் 2011)

 

பனைவிளை  கிராமத்தில் இருக்கும் ஒரே ஒரு  ஒட்டு வில்லை வீட்டை  மிக விரிவாக விவரிப்பதில் ஆரம்பிகிறது இந்த நாவல்.   கிராமத்தவர் அனைவரும் அந்த வீட்டைப் புத்தம் வீடு என்று அழைக்கிறார்கள்சிதிலமடைந்த அந்த வீட்டின் பழம் பெருமையை பறை சாற்றுவது அந்த வீட்டின் உறுதியான தேக்கு மரத்தாலான கதவு மட்டுமே, என்பது போன்ற நுட்பமான வீட்டைப் பற்றிய விவரணைகள்  மூலம் நம்மை வெகு சீக்கிரத்திலேயே நாவலுக்குள் இழுத்துக் கொண்டு விடுகின்றார் ஹெப்சிபா ஜேசுதாசன்.  



வயதான வீட்டுப் பெரியவர கண்ணப்பச்சியும் அவரது இரண்டு மகன்களும் தான் புத்தம் வீட்டின் ஆண் மக்கள்.  மகன்கள் இருவரும் குடும்பச் சொத்தான பனை மரத் தோப்பில் இருந்து வரும் வருமானத்தை மட்டுமே வைத்துக் கொண்டு வைத்துக் கொண்டு, வேறெந்த முனைப்பும் இன்றி வாழ்ந்து வருகிறார்கள்.  இவர்களது கையாலாகாத தனம் கன்னப்பச்சிக்கு பெரும் குறை.  வீட்டுத் திண்ணையில் அமர்ந்து காறித் துப்பிக் கொண்டு தன் அதிருப்தியை அவ்வப்போது பதிவு செய்கிறார்  கண்ணப்பச்சியின் மூத்த மகனின் மகள் லிஸி தான் கன்னப்பச்சியின் செல்லப் பேத்தி.  லிஸி  குழந்தையாய் இருப்பதில் இருந்து, அவள் திருமணம் வரை நடக்கும் நிகழ்ச்சிகளை ஒரு நேர்கோட்டில் எளிய நடையில் விவரிக்கிறார் ஹெப்சிபா.  இந்தக் கதையை  மேம்போக்காக பார்த்தால் ஒரு மெல்லிய காதல் கதை போலத் தோன்றலாம்.  ஆனால், கதையின் உண்மையான களம், வெகு விரைவாக மாறி வரும் சமுதாயத்தில் நிகழும் தவிர்க்க முடியாத  உரசல்களை  முன்வைப்பது தான்

பனையேறிகள், பனைமரத் தோப்புக் காரர்களின் தயவில் அண்டி வாழ்பவர்கள் .  அப்பன் பனையேறி என்றால் மகனும் பனையேறியாக மட்டுமே ஆக முடியும் என்ற சமுதாய கட்டுப்பாடு  உறுதியாக இருந்த காலத்தில் நாவல் ஆரம்பிக்கறது.  ஒரு சின்னத் தவறுக்காக ஒரே வார்த்தையில் பல ஆண்டுகளாக தங்கள் தோப்பில் பனையேறி வந்த   தங்கையனை வேலையை விட்டு துரத்தி விடுகிறார் மூத்த மகன்.  அந்த அளவுக்கு பனந்தோப்பு முதலாளிகளுக்கு செல்வாக்கு.  பனையேறிகளுக்கும் வேறு போக்கிடம் இல்லாத நிலை.  சுற்றி இருக்கும் நகரங்கள் பெருகப் பெருக இந்தச் சூழ்நிலை மாறுகிறதுபனையேறிகளின் மகன்கள், நகரங்களுக்குச் சென்று பிற தொழில்களில் சேர்ந்து பணம் சேர்க்கும் முனைப்பு கொள்கிறார்கள்.  இந்தச் சமுதாய மாற்றத்தைக் கூர்ந்து கவனித்து, புதிய யுகத்திற்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொள்ளாத பனந்தோப்பு முதலாளிகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் செல்வாக்கை இழக்க நேரிடுகிறது.   இப்படி ஆண்டாண்டு காலமாக இறுகிக் கிடந்த விழுமியங்களின் அச்சாணிகள் தளர்வதை சித்தரிப்பது தான் இந்த நாவல்.  

 

ஹெப்சிபா ஜேசுதாசனின் ஆடம்பரமற்ற நடையில்  கதை, மிகச் சரளமாக  ஓடுகிறது. ஒவ்வொரு பாத்திரமும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டு இருக்கிறது.   கதையின் மையத்திற்கு முக்கியமில்லாததாகத் தோன்றும் சின்ன, சின்னப் பாத்திரங்கள்  கூட ( தங்கையனின் அம்மா, மிஷன் வீட்டு மேரி போன்ற பாத்திரங்கள்) மிகுந்த கவனத்துடன் சித்தரிக்கப் பட்டுள்ளன.   எப்படி ஒரு நல்ல தேர்ந்த ஓவியனால்  ஒரு சில கோடுகளைக் கொண்டே ஒரு நுட்பமான சித்திரத்தை வரைய முடிகிறதோ, அது போல், ஆசிரியர் ஹெப்சிபா ஜேசுதாசன், ஒரு சில வரிகளிலேயே ஒவ்வொரு பாத்திரத்தின் பரிணாமங்களையும் சுருங்க, ஆனால் கச்சிதமாகக் கூறி விடுகிறார்.  நாவலில் திகட்ட வைக்கும் தகவல்கள் இல்லை.  கதாசிரியரின் பிரசார நெடி இல்லைமிகைப்படுத்தப்பட்ட உணர்வுப் பூர்வமான வசனங்கள் இல்லை.   எல்லாப் பாத்திரங்களும் நம்பகத் தன்மையோடு இருக்கின்றன.  பனைவிளை கிராமத்தில் வாழும் மக்களின் உறவு முறைகளை, அந்தக் கிராமத்தில் ஏற்படும் பொருளாதார மாற்றத்தை,- மொத்தமாகச் சொல்லப் போனால்  பனைவிளை கிராமத்தின் சாரத்தைநம்மால் புரிந்து கொள்ள முடிகிறது

இன்னொரு விஷயம், இந்த நாவல் 1964லில் எழுதப்பட்டது.  ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த நாவலை இன்று படிக்கும் போது கூட, நவீனமாகத் தான் தோன்றுகிறது.  இதற்கு முக்கிய காரணம், நாவலின் ஆடம்பரமற்ற, மிகுந்த கவனத்துடன் எழுதப்பட்ட நடை.  இரண்டாவது காரணம், இந்த நாவல் சொல்லும் சமூக உரசல் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருப்பது தான்.  1960களில் பனையேறியின் மகன்கள் நகரங்களுக்குச் சென்றது பனைவிளை போன்ற கிராமங்களின் இறுகிப் போன விழுமியங்களை இளகிப் போகச் செய்தது.  2000த்தில் படித்து மேலைநாடு சென்று திரும்பி வந்த (வராத) மென்பொருள் மைந்தர்கள் அதே போன்ற மாற்றங்களைத் தங்கள்  வீட்டளவில் அல்லது கிராமத்தளவில் நிகழ்த்திக் கொண்து தானே இருக்கிறார்கள்சுத்த சைவ உணவு மட்டுமே சாப்பிட்ட குடும்பத்தைச் சார்ந்த பெற்றோர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் பேரக் குழந்தைகள் ஹாம்பர்கர் சாப்பிடுவதை ஒப்புக் கொள்வதைப் பார்க்கத் தானே செய்கிறோம்?

 

 

இத்தகைய அதிவிரைவான சமூக மாற்றத்தை எந்த அளவிற்கு மக்கள் உள் வாங்கிக் கொள்கிறார்கள் என்ற முக்கியமான கேள்வி எழுகிறது அல்லவாஇதைப் பக்கம் பக்கமாக விவரிக்காமல், ஹெப்சிபா ஜேசுதாசன் ஓரிரு வரிகளிலேயே அழகாகச் சொல்லி விடுகிறார். உதாரணமாக, தன் காதலை தைரியமாகத் தன்  அம்மையின் முன் வைக்கும் போது லிஸி, தன் குடும்பத்தில் ஆண்டாண்டு காலமாக நிலவி வந்த கலாசாரத் தளைகளை உடைத்து எறிகிறாள்.  ஆனால்,அதே லிஸி, கல்யாணத்திற்கு அனைவரும் ஒப்புக் கொண்ட பின்னர் தன்னைப் பார்க்க விரும்பும் தங்கராஜை பார்க்க முடியாது என்று மறுத்து விட்டு அடுக்களைக்குள் நுழைந்து கொள்கிறாள், என்று நாவலை முடிக்கிறார் ஜேசுதாசன்.  அடுக்களைக்குள் ஆண்கள் - குறிப்பாக வேற்று ஆண்கள்வருவது இயலாது என்ற கலாச்சாரத் தடையை, லிஸியும் சரி, தங்கராஜும் சரி, விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள்.  சமூக மாற்றங்கள் மிகுந்த தயக்கத்துடன், தேவைகேற்ப  மட்டுமே மாறுகின்றன என்பதை எப்படி ஒரு வரியில் சொல்லி விடுகிறார் பாருங்கள்? ஆக, நாவலின் கருவும், அதைச் சொல்லும் ஆடம்பரமில்லாத முறையுமே இந்த நாவலின் சிறப்பு அம்சங்கள்.  சமுதாய மாற்றங்களை எதிர் கொள்வதில் உள்ள சங்கடங்களை, உரசல்களைசமரசங்களை, பேரங்களை தெளிவாக, கதையோடு ஒட்டி, முன் வைக்கிறது இந்த நாவல்.  

 

புத்தம் வீட்டின் உறுதியான, அழகிய வேலைப்பாடுகளைக் கொண்ட தேக்கு மரக் கதவு, அந்த வீட்டின் பாரம்பரியத்தைக் கவனமாக காத்து வருகிறது.  வெளி உலக மாற்றங்களை, வீட்டுக்குள் இருப்போர் உறுதியுடன் போராடினால் மட்டுமே, மிகுந்த தயக்கத்துடன், தேவையான அளவு மட்டுமே திறந்து உள்ளே வர அனுமதிக்கிறது.  கதவின் பின் இருக்கும் புத்தம் வீட்டு மனிதர்களுடன் பழகும் போது நம்மைப் பற்றியும் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிகிறது.

 

 

 

ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விளக்கு விருது விழா

திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் கட்டடத்தில் விளக்கு விருது பேராசிரியர் ஹெப்சிபா ஜேசுதசனுக்கு வழங்கும் விழா 29.12.2002 அன்று மாலை ஆறு மணிக்கு நடைபெற்றது. வெளி ரங்கராஜன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். சுந்தர ராமசாமி முக்கிய விருந்தினராக வந்து கலந்து கொண்டு விருதை வழங்கினார். புதுமைப் பித்தனின் படத்தை தமிழ்ச் சங்க கட்டிடத்திலும் அவர் திறந்து வைத்தார்.

ரங்கராஜன் விளக்கு அமைப்பு சார்பில் வழங்கப் படும் இவ்விருது எளிமையான ஒன்று என்றாலும் முக்கியமான இலக்கிய படைப்பாளிகளுக்காக மட்டுமே இது வரை வழங்கப்ப ட்டுள்ளது என்றார். சி.சு.செல்லப்பா, பிரமிள், நகுலன், பூமணி ஆகியோருக்கு இது ஏற்கனவே வழங்கப் பட்டுள்ளது. ஹெப்சிபா அவர்களுக்கு வழங்கப் பட்டது இப்பரிசுக்கு பெருமை சேர்க்கிறது என்றார்.

சுந்தர ராமசாமி தன் உரையில் பேராசிரியை ஹெப்சிபா அவர்களை, பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியாது என்றார். பேராசிரியர் ஜேசுதாசன் தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமையும், ரசனையும் உடையவராக இருந்தும் கூட தன் மனைவியை முன்னிறுத்தி அவரது திறமைகளை வெளிக் கொணர்வதை மட்டுமே தன்னுடைய முதல் நோக்கமாக கொண்டிருந்தார். ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் முக்கியமான பெரும் நூலான Count down from Solomonனின் ஆக்கத்தில் பேராசிரியர் ஜேசுதாசனுக்கும் முக்கியமான பங்கு உண்டு. எழுதாத நூல்களிலேயே கூட தன் பெயரை போட்டுக் கொள்ளும் இந்நாட்களில் தன்னுடைய பங்கு உள்ள நூலிலேயே தன் பெயரை போட்டுக் கொள்ளாத பேராசிரியர் மிக அபூர்வமான ஒரு ஆளுமை என்றார்.

புத்தம் வீடு மிக முக்கியமான ஒரு நூல், அந்நூல் வெளி வந்த போது பரவலான கவனத்தை அது பெற வில்லை. விமரிசகர்கள் அதைப் பேசி முன்னிறுத்தவுமில்லை. ஆயினும் அந்நூல் தன் அழகியல் குணத்தாலேயே இலக்கிய முக்கியத்துவத்தை பெற்று ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்கும் மேலாக தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. Count down from Solomon அடிப்படையில் ஒரு இலக்கிய வரலாறு என்றாலும் நுட்பமான முறையில் அது தமிழிலக்கியம் மீது விமரிசனங்களை முன் வைக்கிறது.

ரங்கராஜன் குறிப்பிட்டது போல இப்பரிசு எளிய ஒன்று அல்ல. இன்று தமிழில் வழங்கப் படுவதிலேயே மிக முக்கியமான இலக்கிய பரிசு இது தான். இதனுடன் ஒப்பிடுகையில் சாகித்ய அகாதமி விருது மதிப்பிற்குரியதல்ல. காரணம் தரமான படைப்பாளிகளுக்கு மட்டுமே இப்பரிசு இது வரை வழங்கப் பட்டுள்ளது. சாகித்ய அகாதமியால் புறக்கணிக்கப் பட்ட படைப்பாளிகளுக்கு மட்டுமே இது வழங்கப் பட்டுள்ளது. இதை பெற்றுக் கொண்ட ஒருவர் சாகித்ய அகாதமி விருதை புறக்கணிக்க வேண்டும். சாகித்ய அகாதமி விருது தமிழ் எழுத்தாளர்களை சிறுமைப் படுத்தி வருகிறது. சிலர் அதைப் பெற போட்டியும், சிபாரிசும் செய்கிறார்கள் என்றார் சுந்தர ராமசாமி.

நீல.பத்மநாபன், ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் புத்தம் வீடு தமிழில் ஒரு முக்கியமான திறப்பை உருவாக்கியது என்றார். வட்டார வழக்கு என்றும் கொச்சைமொழி என்றும் முத்திரை குத்தி மண்ணின் மணம் கொண்ட படைப்புகளை நிராகரித்து வந்த காலகட்டத்தில் வெளி வந்த புத்தம்வீடு ஒரு முக்கியமான முன்னுதாரணமாக அமைந்து இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டது. பொதுவாக தமிழில் ஒதுங்கி இருப்பவர்களைப் புறக்கணிக்கும் போக்கு தான் உள்ளது. அதற்கு மாறாக ஹெப்சிபா ஜேசுதாசன் போன்ற ஒரு அமைதியான சாதனையாளருக்கு விருது தர விளக்கு அமைப்பு முன் வந்தது பாராட்டுக்கு உரியது என்றார்.

.மாதவன், தமிழில் ஆர்.ஷண்முக சுந்தரத்தின் நாகம்மாள், சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை, ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம்வீடு ஆகியவை முக்கியமான முன்னோடி இலக்கிய முயற்சிகள் என்றார். அது வரை தமிழிலக்கியத்தில் மொழி பற்றி உருவாக்கியிருந்த பிரமைகளை உடைத்து அசலான வாழ்க்கையை எழுத்தில் வைத்த முக்கியமான இலக்கிய படைப்புகள் இவை. ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு பிறகு புத்தம்வீடு மறு பதிப்பு வந்திருப்பதும் மற்ற நூல்கள் மறு பதிப்பு வராததும் தமிழின் உதாசீன மனநிலையை காட்டுபவை. விளக்கு விருது முக்கியமான சேவையை செய்துள்ளது என்றார்.

ஜெயமோகன் தமிழ் இலக்கியத்தில் அறுபதுகள் வரை யதார்த்தத்துக்கு இடமில்லாத நிலை இருந்தது என்றார். ஒன்று கற்பனா வாதப் பண்பு கொண்ட மிகையான கதைகள். மறு பக்கம் சீர் திருத்த நோக்கம் கொண்ட விமரிசன யதார்த்ததை முன் வைக்கும் படைப்புகள். இரண்டுமே அப்பட்டமான உண்மையை பேசும் தன்மை இல்லாதவை. கற்பனா வாதப் பண்பு கொண்ட இலக்கியங்கள் ஒரு சமூகத்துக்கு அவசியம் தேவை. அவை இல்லையேல் சமூகம் தன் கனவு காணும் திறனை இழந்து விடும். ஆனால் அவை யதார்த்த வாத இலக்கியத்தால் சம நிலைப் படுத்தப் பட்டிருக்க வேண்டும். மேலான இலக்கியம் யதார்த்தத்திலிருந்தே துவங்கும். ஆனால் அதில் நின்று விடாது. அதன் உச்சம் கற்பனையின் உச்சமே.

தமிழில் தூய யதார்த்த வாதப் பண்புள்ள எழுத்தை முன் வைத்த மூன்று நாவல்கள் ஆர்.ஷண்முக சுந்தரம் எழுதிய நாகம்மாள், நீல. பத்மனாபன் எழுதிய தலைமுறைகள் மற்றும் ஹெப்சிபா ஜேசுதாசன் எழுதிய புத்தம் வீடு. புத்தம் வீடு துவங்குவதே அழகான குறியீட்டுத் தன்மையுடன் தான். மண்ணை விவரித்து மனிதர்களுக்கு வருகிறது. நாகம்மாள் கூட அப்படித்தான். மண்ணிலிருந்து சொல்ல ஆரம்பிக்கும் ஒரு கதை கூறும் முறைஅதில் உள்ளது. மிகையே இல்லாமல் மிக, மிக மென்மையாக அது வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது. ஆகவே அது முக்கியமான இலக்கிய ஆக்கம். உணர்ச்சிகளை ஆரவாரமே இல்லாமல் சொல்லும் அதன் போக்கு நமக்கு முக்கியமான ஒரு முன்னோடி முயற்சியாக அமைந்தது.

Count down from Solomon இலக்கிய விமரிசன நூல் என்ற முறையில் தமிழில் மிக, மிக முக்கியமானது. இன்னும் இது தமிழில் பேசப் படவில்லை. இது வரை தமிழிலக்கிய வரலாறு ஒருவகை அதிகார நோக்கில்தான் எழுதப் பட்டுள்ளது. ரசனை மற்றும் அற மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆக்கப் பட்ட வரலாறு இது. இந்நூலை முன்னிறுத்தி சில கூட்டங்களை நடத்தும் நோக்கம் சொல் புதிதுக்கு உண்டு. ஹெப்சிபா அவர்களின் ஆத்மார்த்தமான இலக்கிய பணிக்கு கிடைத்துள்ள இந்த இலக்கிய விருது முக்கியமானது என்றார்.

ஏற்புரை வழங்கிய ஹெப்சிபா ஜேசுதாசன் தன் வாழ்க்கையின் சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். பேராசிரியரை திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சியை பற்றி அழகான முறையில் சொன்னார். மாப்பிள்ளை தேடும் போது பெண்ணின் கருத்தை கேட்கும் வழக்கம் அன்றில்லை. ஆனால் ஹெப்சிபாவின் மனதில் ஒரு குரல் நீ பேசவேண்டும் என்று சொன்னது. அவர் தன் தந்தையிடம் தனக்கு எது முக்கியம் என்று சொன்னார். விரும்பியவரையே மணம் செய்தும் கொண்டார். அதைப் போல எழுதும் தூண்டுதலும் தனக்கு கனவில் ஒரு பேனா கிடைத்தது போலவே வந்தது என்றார். எல்லா தருணத்திலும் தன் அந்தரங்கமான குரலைத் தொடர்ந்தே தான் சென்றதாக அவர் சொன்னார். அக்குரல் எப்போதுமே அச்சமில்லாததாக, முற்போக்கானதாக, மனிதாபிமானம் கொண்டதாக இருந்தது என்பது முக்கியமான ஒன்றாக இருந்தது. தன் கணவர் தனக்கு ஆசிரியராகவும், நண்பராகவும் இருந்தார் என்றார் ஹெப்சிபா. தமிழிலக்கியம் குறித்து ஆங்கிலத்தில் எழுத வேண்டுமென்ற கனவு பேராசிரியர் ஜேசுதாசனுக்கு திருமணத்துக்கு முன்பே இருந்தது. அதை எழுபது வயதுக்கு பிறகே நிறைவேற்றி வைக்க முடிந்தது. நூலின் இறுதிப் பகுதியை எழுதிவிட்டேன்; இனி மரணம் ஒரு பொருட்டே அல்ல என்றார் ஹெப்சிபா ஜேசுதாசன். முடிந்தால் ஆங்கிலத்தில் ஒரு சுயசரிதையை எழுதும் நோக்கம் தனக்கு உண்டு என்றார். கிராம வழக்கில் இயல்பாக அமைந்த அவரது தன்னுரை அழகான அனுபவமாக அமைந்தது.

சிறந்த முறையில் கூட்டத்தை அமைத்திருந்த தமிழ் சங்க தலைவர் வினாயக பெருமாள் பாராட்டுக்குரியவர்.

 

ஹெப்ஸிபா ஜேசுதாசனின் படைப்புலகமும் கருத்துலகமும்

·                     ஒரு நாவலாசிரியரின் ஒட்டுமொத்த படைப்புகளையும் வாசித்து முடித்து விட்டு திறனாய்வுக்கட்டுரை எழுத நினைத்த போது முதலில் தெரிவு செய்த நாவலாசிரியர் ஹெப்சிபா. இந்தக் கட்டுரையைப் படித்த பலர் என்னைப் பாராட்டினார்கள். ஹெப்சிபாவே அப்போது வந்த திணை இதழின் நேர்காணலில் இந்தக் கட்டுரையின் கருத்தை ஏற்றுச் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருந்தார்.  22 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்தக் கட்டுரையை அவரது இறப்பை ஒட்டி வலைப்பூவில் ஏற்றிக் காணிக்கை ஆக்குகிறேன்.



ஹெப்ஸிபா ஜேசுதாசன் அறுபதுகளின் மத்தியில் புத்தம் வீடு என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகில் பிரவேசம் செய்தவர். தான் எழுத ஆரம்பித்த காலம் தொடங்கி, தமிழ் இலக்கியச் சூழலில் நிலவும் ஒரு மனோபாவத்திற்கு எதிராக இயங்கியும் வருபவர். தமிழ் இலக்கியச் சூழல் என்பது பொதுவாக அறுபதுகளுக்கு முந்தியும் பிந்தியும் இரண்டு முகங்களைக் கொண்டதாகவே இருந்து வந்துள்ளது. குழுமன நிலையோடும், கட்சி அடிப்படையிலும் இயங்கிக் கொண்டிருக்கும் சிறுபத்திரிகை உலகம் ஒரு முகம். இதில் ஒரு எழுத்தாளன் ஒரு குழு சார்ந்தவனாகவோ, அல்லது கட்சி சார்ந்தவனாகவோ அடையாளங் காணப்படுதல் தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது. இன்னொரு முகம் வெகுஜனப் பத்திரிகைகளின் உலகமாகும். பெருமுதலாளிகளின் வணிக லாபத்திற்கு எழுத்துச் சரக்கினை உற்பத்தி செய்யும் பேனாத் தொழிலாளர்களைக் கொண்டது இம்முகம். இவ்விருமுகங்களில் ஏதாவது ஒன்றை அணிந்து கொள்ளாமல் இயங்கி வருபவர் ஹெப்ஸிபா ஜேசுதாசன். அதே வேளையில் சிறுபத்திரிகைக் குழுவினராலும், கட்சி சார்ந்த விமரிசகர்களாலும் புறமொதுக்கப்படாமல், தமிழ் நாவல் இலக்கியத்திற்கு முக்கியப்பங்களிப்பு செய்தவர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளவர். இத்தகைய விதிவிலக்குகள் நவீனத் தமிழிலக் கியப்பரப்பில் வெகு சொற்பமே.

ஹெப்ஸிபா ஜேசுதாசனுக்குக் கிட்டியுள்ள விதிவிலக்குத் தன்மையை மனதில் கொண்டு அவரது நாவல்களின் படைப்புலகத்தையும், அதில் வெளிப்படும் வாழ்க்கை பற்றிய, இலக்கியம் பற்றிய அவரது கருத்துநிலை களையும் அறிய முயல்கிறது இக்கட்டுரை. ஒரு படைப்பாளியின் படைப்புலகத்தையும் அதன் வழி வெளிப்படும் வாழ்க்கை, இலக்கியக் கோட்பாடுகளை அறிந்து கொள்ள அடிப்படைப்பாளியின் ஒட்டுமொத்தப் படைப்புகளும் மிக அவசியம். ஆங்கிலத்தில் மூன்று கவிதைத் தொகுதிகளையும் தமிழில் நான்கு நாவல்களையும் எழுதியுள்ள ஹெப்ஸிபாவின் நான்கு நாவல்களும் இங்கு ஆய்வுப் பொருளாகியுள்ளன.

ஹெப்ஸிபாவின் புத்தம் வீடு, டாக்டர் செல்லப்பா என்ற இரண்டு நாவல்களும் சிறிது இடைவெளியோடு 1964,1967 களில் வெளிவந்துள்ளன. அடுத்த இரண்டு நாவல்களான அனாதை, மானி என்ற இரண்டும் முறையே 1978, 1982 களில் வெளி வந்துள்ளன. இந்த நான்கு நாவல்களையும் ஒருசேர வைத்துப் பார்க்கும் நிலையில் முதல் மூன்று நாவல்களிலும் ஒருவிதமான தொடர்ச்சியைக் காண முடிகின்றது. பனைவிளை என்ற தென் தமிழ் நாட்டின் கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்த ஒரு சில மனிதர்கள் இம்மூன்று நாவல்களிலும் வருகின்றனர். புத்தம் வீட்டின் முக்கியப்பாத்திரமான லிஸியும் அவளது கணவரான தங்கராஜுவும், அவனது தம்பி செல்லப்பனும் மூன்று நாவல்களிலும் வருகின்றனர். தங்கராஜூவின் தம்பியான செல்லப்பனே, டாக்டர் செல்லப்பா வாகப் பரிணாமம் கொள்கிறான். தங்கராஜுவின் உறவுக்காரனும் நண்பனுமான தங்கையனின் மகன் தங்கப்பன் தான் அனாதை நாவலின் நாயகனான அனாதை தங்கப்பனா கப் பரிணாமம் பெற்றுள்ளான். புத்தம் வீட்டின் நிகழ்வுகள் கூடப் பின்னிரண்டு நாவல்களிலும் நினைவு கூரப்பட்டுள்ளன. இந்தப் பாத்திரத் தொடர்ச்சியினையும், நிகழ்வுகளின் நினைவு கூர்தலையும் கொண்டு இம்மூன்று நாவல்களையும் ஒருநாவலின் மூன்று பாகங்கள் என்று சொல்ல முடியாது; தனித்தனி நாவல்களே. ஏனெனில் இம்மூன்று நாவல்களின் பின்னணிகள் வேறானவை; பாத்திரங்களின் குணங்கள் வேறானவை; சமூகப் பொருளாதாரச் சூழல்கள் வேறானவை. இம்மூன்று நாவல்களிலும் இடம் பெறும் பாத்திரங்களே கூட ஒவ்வொன்றிலும் வேறு வேறான குணங்களைக் கொண்டவைகளாகவே சித்திரிக்கப்பட்டுள்ளன. இதை மனங்கொள்ள டாக்டர் செல்லப்பா வின் பதிப்பக உரையில் காணப்படும் இந்த டாக்டர் செல்லப்பா புத்தம் வீட்டின் இரண்டாம் பாகம் போன்றது என்ற குறிப்பு வாசகர்களைத் தவறான வாசிப்புக்கு இழுத்துச் செல்வதாகவே தோன்றுகிறது. இவ்விசயம் இத்துடன் நிற்க.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuU9-BqeYvhD0mmssKBvBaNr3OENFl3Tr3rpaZJucj2aDhBP8QT6mRnFOwb0rkytsJFTodA-dpVrKJl_VS-M0_4N7PGOSLIBQ79H4rIBjkscXjO-PYitlRG19Z7m9D5f25IMqtL60LMQE0/s1600/images+(11).jpgபனைவிளைக் கிராமத்தில் பழம்பெருமைகளையும் பழைய சமூக மதிப்புகளையும் கொண்ட புத்தம் வீட்டினைச் சுற்றிச் சுற்றி வரும் புத்தம் வீடு நாவலையும், பனையேறியின் மகனான செல்லப்பன் வேலூர், மதுரை முதலான நகரங்களில் வாழ்ந்து டாக்டர் செல்லப்பாவாக மாறும் நிலையைச் சித்திரிக்கும் டாக்டர் செல்லப்பாவையும், பனை யேற்றத் தொழிலாளியான தங்கையனால் அனாதையாகக் கைவிடப்பட்டு, தங்கராஜுவால் பட்டப் படிப்பு வரை படிக்க வைக்கப்பட்டு, திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷனையொட்டிய ஒண்டுக் குடித்தன வீட்டில் அனாதையாகச் செத்துப் போகும் தங்கப்பனின் வாழ்க்கையைச் சொல்லும் அனாதை நாவலையும், இரண்டாம் உலகப்போரின் கொடூரத் தாக்குதலினால் பர்மாவை விட்டு வெளியேறிச் சிதறுண்டு பனைவிளைக் கிராமத்தை வந்து சேரும் ஒரு இந்தியக் குடும்பத்தின் அவலத்தைச் சொல்லும் மா-னீ நாவலையும் ஒரு சேர வைத்துப் பார்க்கும் நிலையில் ஹெப்ஸிபாவின் படைப்புலகம் பல்வேறு கிளைகளைக் கொண்ட பரந்து விரிந்த தளங்களையும், களங்களையும் கொண்டதல்ல என்ற உண்மை புலப்படுகிறது. அவரது படைப்புகள் குடும்ப அமைப்பு என்ற உலகத்தைத் தாண்டி வெளியில் செல்லவே இல்லை.

இந்தியக் குடும்ப அமைப்பின் ஆதாரக் கண்ணி திருமணம் என்ற பந்தம் ஆகும். இந்தத் திருமண பந்தத்தை மையமாகக் கொண்டே ஹெப்ஸிபாவின் நாவல்கள், வெவ்வேறு பின்னணிகளைக் கொண்டு, அந்தந்தப் பின்னணியில் இயங்கக் கூடிய யதார்த்தமான பாத்திரங்களை உலவ விடுகின்றன. இயல்பான குணங்களோடு வெவ்வேறு பின்னணியில் இயங்கும் இந்தப் பாத்திரங்களில், யாருடைய செயல்பாடுகளையும் நேரடியாகக் குறைசொல்லாமல், ஆனால் தன் சார்புநிலை எந்தப் பாத்திரத்தின் மேல் உள்ளது என்பதை ஒவ்வொரு நாவலிலும் வெளிப்படுத்துகிறார் ஹெப்ஸிபா. சில படைப்பாளிகள் சொல்வது போல் எல்லாப் பாத்திரங்களும் அதனதன் போக்கில் பிறந்து உலாவுகின்றன; அவற்றின் செயல்பாடுகளுக்கு நான் பொறுப்பாளியல்ல என்று தட்டிக் கழித்து விட முடியாதபடி சில பாத்திரங்களின் வழி தனது வாழ்க்கை பற்றிய கோட்பாட்டைக் குறிப்பிட்டுச் செல்கின்றார். இப்படிச் சொல்வதன் மூலம் மற்ற பாத்திரங்களை மொண்ணைத் தனமாக இயல்பற்றனவாகப் படைத்துள்ளார் என்பது பொருள் அல்ல; ஒவ்வொரு நாவலிலும் ஒரு பாத்திரத்தின் வழி தனது சார்பை வெளிப்படுத்தியதன் மூலம் அவரின் விருப்பத்தை- வாழ்க்கை பற்றிய புரிதலைத் தெளிவு படுத்தியுள்ளார் என்பது தெளிவாகின்றது.

பனைவிளைக் கிராமத்தில் பாரம்பரியச் செல்வாக்கோடு நின்ற புத்தம் வீடு, பாரம்பரியப் பெருமைகளையெல்லாம் ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருப்பதையோ, அந்த வீட்டின் ஆண்கள் அந்தப் பெருமையை மீட்டெடுப்பதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லையென்றோ, அந்த வீட்டின் மருமகள்கள் அடுப்படியிலும், வீட்டுச் சுவர்களுக்குள்ளும் முடங்கிப் போனது பற்றியோ ஹெப்ஸிபா கவலைப்படவில்லை. கவலைப்பட்டு இவற்றில் ஏதாவதொன்றின்பால் தன்சார்பை வெளிப் படுத்தியிருந்தால் புத்தம் வீடு கவனத்துக்குரிய நாவல்களுள் ஒன்று என்று கணிக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. பழைய சமூக மதிப்புக்களில் ஊறிப்போனவர்களின் செயல் பாடற்ற தன்மையை வெளிப்படுத்திய ஒரு நாவலாக நின்று போயிருக்கும். ஆனால் பாரம்பரியச் செல்வாக்கை இழந்து கொண்டிருப்பதோடு, மாறிவரும் சமூக மதிப்புகளை ஏற்றுக் கொள்ளத் திராணி யற்ற புத்தம்வீட்டுப்  பெண்ணொருத்தியின்பால் தன் சார்பை வெளிப்படுத்தியதின் மூலம், தன் நாவலுக்கு நேர இருந்த விபத்தைத் தவிர்த்துள்ளார் ஹெப்ஸிபா ஜேசுதாசன். புத்தம் வீட்டு லிஸி தன் குடும்பத்தில் தனக்கு மறுக்கப்பட்ட சுதந்திரம், சின்னச் சின்ன அபிலாஷைகளுக்கும் தடை இவற்றையெல்லாம் மீறுகிறாள். தான் விரும்பிய ஆடவன் ஒருவனை, புத்தம் வீட்டிற்கு இருப்பதாகக் கருதிக் கொண்ட அந்தஸ்துக்குக் குறைவான ஆனால் வாழ்க்கையை, உழைப்பை நேசித்த ஒருவனை, பனையேற்றத் தொழிலாளியின் மகனான தங்கராஜுவைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்வதைச் சித்திரிப்பதன் மூலம், புத்தம் வீடு நாவலுக்குத் தமிழ் நாவல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாவல் என்ற இடத்தைப் பெற்றுத் தந்துள்ளார் எனலாம். இந்தச் சித்திரிப்பின்போது கூட புத்தம் வீட்டு லிஸி, தன் காதலுக்காக உயிரை விடவும் தயாரான, காதலை அடைய வீர சாகசங்கள் செய்பவளாகக் காட்டாமல், செயல்பாடுகளின் இயல்போடு சென்று தன் விருப்பத்தை அடைபவளாகக் காட்டியுள்ளார்.

புத்தம் வீட்டின் லிஸியின் மீது தன் சார்பை வெளிப்படுத்தியதன் மூலம் ஹெப்ஸிபா தனது வாழ்க்கை பற்றிய புரிதலைத் தெளிவு படுத்தியுள்ளார் எனலாம். பழைய சமூக மதிப்புகளும் வாழ்க்கை முறைகளும் மாறிக் கொண்டிருக்கின்றன; மாறிக் கொண்டிருக்கும் போக்கில் லிஸியைப் போன்றவர்களே தனது வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதையும் வெளிப்படுத்துகின்றார் எனலாம். இந்த வெளிப் படுத்துதலின் மூலம் மாற்றத்தை எதிர்கொள்பவர்களாக இருப்பார்கள் என்பதையும் வெளிப்படுத்துகின்றார் எனலாம். இந்த வெளிப்படுத்துதலின் மூலம் மாற்றத்தை எதிர்கொள்பவர்களின் பக்கம் நிற்காமல் பழைமையின் பக்கம் நின்று கண்ணீர் விடுவதோ, குடும்பப் பாரம்பரியம் தகர்ந்து விட்டது என்று புலம்புவதோ சரியான இலக்கியமன்று. யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொள்பவர்களின் பக்கம் நிற்பதே சரியான இலக்கியவாதியின் கடமை என்ற நிலைபாட்டோடு அதையே தனது இலக்கியக் கோட்பாடாகக் கொண்டிருந்தார் என்றும் உணர முடிகிறது.

ஹெப்சிபாவின் முதல் நாவலான புத்தம் வீட்டில் வெளிப்படும் வாழ்க்கை பற்றிய, இலக்கியம் பற்றிய இந்தக் கோட்பாடுகள் பிந்திய நாவல்களிலும் தொடர்ந்து வந்துள்ளன. பனைவிளைக்கிராமத்தின் பனையேறிக் குடும்பத்து முதல் தலைமுறைப் படிப்பாளியான செல்லப்பா தன் திருமண உறவுகளை அமைத்துக் கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறான். மருத்துவப் படிப்பைத் தொடங்கிய முதல் வருடமே திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகிறான். அந்த வட்டாரத்தில் இருந்த குறிப்பிடத்தக்க பணக்காரர்களில் ஒருவரும் எஸ்டேட் ஓணருமான ஜஸ்டின் ராஜின் மகள் எமிலியைத் திருமணம் செய்து கொள்ள நேருகிறது. அவனது மருத்துவப் படிப்புத் தொடர வேண்டுமானால், அதைத் தவிர வேறு வழியில்லை. அவனும் ஒத்துக் கொள்கிறான். ஆனால் திருமணத்தைத் தொடர்ந்து அவனது தந்தை இறக்க, அதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால் மணமக்கள் பிரிக்கப்படுகின்றனர். பணத்தையும் எமிலியையும் கொடுத்து செல்லைப்பனை விலைக்கு வாங்கிவிட்டதாக நினைத்த ஜஸ்டின்ராஜ் அதிர்ச்சியடையும்படி செல்லப்பன் நடந்து கொள்கிறான். எமிலியை முழுவதுமாக விலக்கி விடுவது என்று முடிவு செய்கின்றான்.  பழைய சம்பிரதாயங்களும் கற்கோயில் மாதா முன்னால் கொடுத்த திருமண ஒப்புதல்களும் அவனை ஒன்றும் செய்யவில்லை.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2DQde6bCpUXcGbuzBowHzKoaEalJab4uy-_miMUV0k5jtQcc2tAX6rq5knby-sbMyMkfC_Q6aVq40DaLbmh0EUYupHq4OYtYit_yFsZ5EUgA7RnsS2TJDo-cV-mbskpQ_TWnT_kVh9_5S/s1600/images+(42).jpg

படிப்புத் தொடர்கிறது; மனம் புதிய ரசனைக்கு, சமூக மதிப்புகளுக்குத் தாவுகிறது; புதிய வாழ்க்கையைத் தேடுகிறது; தேர்ந் தெடுக்கிறது. கல்லூரி வாழ்க்கையின் போது இசை மூலம் தனது மனதில் இடம் பிடித்த கமலாவையொத்த, இசையில் விருப்ப முடைய, பாடுவதில் வல்லமையுடைய வசந்தாவை மனைவியாக்குகிறான். இடையூறாக நின்ற சாதி, மதம், அம்மா, படிக்க வைத்த அண்ணன், அண்ணி முதலான அனைத்து உறவுகளையும் ஒதுக்கி விடுகிறான். தன் விருப்பம்போல மனைவியைத் தேடிக் கொண்ட செல்லப்பன் , டாக்டர் செல்லப்பாவாக மாறி நடுத்தர வர்க்கத்துக் கணவன் மனைவிகளுக்கிடையே ஏற்படும் சகலவிதமான சந்தேகத்தோடும் , சுகதுக்கங்களோடும் செத்துப் போகிறான்.

இந்த நாவலிலும் ஹெப்ஸிபா தன் சார்பைச் சரியான புரிதலிலேயே வெளிப்படுத்தியுள்ளார். தான் செய்வது இன்னதென்று தெரியாமலமேயே, தந்தையின் சொல்கேட்டு கணவனை உதாசீனப் படுத்திய எமிலியைச் செல்லப்பன் அறவே ஒதுக்கி விட்டபொழுது அவனை ஆசிரியர் நிந்திக்கவில்லை. அந்த அறியாப்பருவத்துப் பெண்ணின் சார்பாளராக மாறவில்லை. கிராமத்துச் சமூகத்திலிருந்து விடுபட்டு நடுத்தர வர்க்க வாழ்க்கைச் சூழலுக்கு மாறும் மனிதர்களின் வாழ்க்கை மாற்றத்தில் இத்தகைய பிடிவாதமும், சுதந்திரமான, மனம் விரும்பியபடி துணையைத் தேடிக் கொள்ளத் தூண்டும் போக்கும் நிலவும் என்கின்ற சமூகநிகழ்வைச் சரியாகப் புரிந்து கொண்டவராக ஹெப்ஸிபா தன்சார்பை செல்லப்பாவின் பக்கமே வெளிப்படுத்துகின்றார். செல்லப்பன் வசந்தாவை மணந்து கொண்டதைப் பற்றி எமிலி என்ன நினைத்தாள், அவள் வாழ்க்கை என்னவாக ஆனது, என்பது பற்றிக் கூட ஹெப்ஸிபா தம் நாவலில் எழுதவில்லை. அவருடைய நோக்கமெல்லாம் முதல் தலைமுறைப் படிப்பாளி ஒருவன் தன் குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் எதிர்கொள்ளும் முரண்பாடுகளைப் படம் பிடிப்பது மட்டுமாகவே இருக்கிறது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzUuZtV2XjUcG1kR6p5H2uybPpy6df2adcOF5_ej6-ani3kthp4lV_UsfFvcqfGk8gBeaeVFg49QzZklFmRo9g6Es4DS5SxQ6sMvvHXhZUK2GyNhHzmse50ZREJ5QyxqL1qG7PIIhQ2HPW/s320/images+(13).jpg

மூன்றாவது நாவலான அனாதை வடிவ ரீதியாகவும் கதையைச் சொல்வதிலும் தெளிவற்ற தன்மையைக் கொண்டுள்ளது. இந்நாவல், படித்த ஆனால் வேறொரு சூழலில் வாழ வேண்டிய இளைஞன் ஒருவனின் குடும்ப உறவுகளைச் சித்திரிக் கிறது. தங்கராஜுவின் மகள் ரோஸம்மா, தங்கப்பன் மீது காதல் கொண்டு, பெற்றோரை விட்டு விட்டு, அவர்கள் ஏற்பாடு செய்த திருமணத்தை உதறிவிட்டு தங்கப்பன் தங்கியுள்ள நாகர்கோவிலுக்கு வந்துவிடுகிறாள். அவளது துணிவு தன் மீது கொண்ட காதலை உணர்த்துவதாகவும், தனக்கும் அவள் மீது அன்பு, காதல் என்ற நிலைக்கு உரியது என்று உணர்ந்த போதிலும் அவனது அனாதை மனது அதை மறுக்கிறது. தன்னை வளர்த்துப் படிக்க வைத்த தங்கராஜூ மாமா குடும்பத்திற்கு நேரக்கூடிய அவமானத்தை மனதில் கொண்டு, ரோஸம்மாவின் காதலை ஏற்க மறுக்கிறான். ரோஸம்மாவை பனைவிளக்கே அழைத்துவந்து , பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு திருவனந்தபுரம் போய்விடுகிறான். டுடோரியல் காலேஜில் கிடைக்கும் சம்பளத்திற்கேற்ப, ஆஸ்பத்திரிக்கிளார்க்கின் மகள் மேரியைத் திருமணம் செய்து கொள்கிறான். ஆஸ்பத்திரி கிளார்க் வேதமாணிக்கம் கூட அவன் அனாதை என்பதைத் தெரிந்து முதலில் தயங்கினார். பின்னர் அவரது பெண்ணிற்கும் வேறு வழியில்லை என்ற நிலையில் தங்கப்பனுக்குப் பெண் கொடுக்கிறார். திருமணத்திற்குப் பின் தகப்பன் தனிக்குடித்தனம் போவது, குடும்பத்தை நடத்தச் சிரமப்படுவது என்பதோடு பனைவிளைக் கிராமத்தோடு தொடர்பு ஏற்படுவது என்பதாக நாவல் நகர்கிறது. ரோஸம்மாவின் தம்பியும், தங்கராஜுவின் மகனுமான ஞானபாலனின் திருமணத்தையொட்டி குடும்பத்தோடு பனைவிளைக்குப் போகிறான். தங்கப்பனின் மனைவி மேரிக்கு, ரோஸம்மாவோடு தங்கப்பனுக்கு இருந்த பழைய நட்பு தெரிய வருகிறது. அதனால் எழுந்த சந்தேகமும் தாழ்வு மனப்பான்மையும் குடும்பத்தில் நிலவிய நல்லுறவையும் சகஜநிலையையும் சிதைத்து விடுகின்றன. இரண்டாவது பிரசவித்தின் போது மேரி செத்துப் போக, குழந்தையும் அவனிடமிருந்து பிரிக்கப் படுகிறது. அனாதை யென உணர்ந்த தங்கப்பன் தற்கொலை செய்து கொள்கிறான்.

தன் படிப்பின் மூலம் கௌரவமான நிலையை அடையும் செல்லப்பாவின் குடும்ப உறவுகளையும், சுதந்திரமான இயக்கங்களையும், டாக்டர் செல்லப்பாவில் சித்திரித்த ஹெப்ஸிபா, அனாதையில் படிப்பு மட்டுமே உடைய ஒருவன் தன் குடும்ப உறவுகளை அமைத்துக் கொள்வதில் உள்ள சிக்கல்களை வெளிப்படுத்தியுள்ளார் எனலாம். தங்கப்பனிடம் படிப்பும், அதுதந்த காதல் பற்றிய , குடும்பம் பற்றிய, எதிர்காலம் பற்றிய புதிய சிந்தனைகள் இருந்தன என்றாலும் அவனது பொருளாதார நிலை அதனை நிறைவேற்ற இடந்தரவில்லை. ரோஸம்மையை ஏற்றுக் கொள்ள மனசு விரும்பினாலும், செய்ந்நன்றி மறப்பது தவறு எனச் சிந்திக்கச் செய்கிறது. தங்கப்பனுக்கு ரோஸம்மையிடமிருந்த அன்பை அறிந்த மேரி, அவனைக் குத்திக் காட்டும்போதெல்லாம் ரோஸம்மையின் தியாகத்தை அவனது மனசு அசை போடுகிறது. தன் நினைவாகத் திருமணமே செய்து கொள்ளாத ரோஸம்மைக்குத் தான் செய்த துரோகமே தன்னைப் பழிவாங்குவதாக உணர வைக்கிறது. ஆனால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இங்கே செல்லப்பா எடுக்கும் முடிவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும். தான் விரும்பிய பெண்ணிற்காக அனைத்து உறவுகளையும் தூக்கி எறிகின்றான் செல்லப்பா. செல்லப்பாவுக்கும் தங்கராஜுவிற்கும் இடையே உள்ள மனநிலை வேறுபாட்டிற்குக் காரணம் அவர்களின் பொருளாதாரச் சூழமைவேயன்றி வேறில்லை. செல்லப்பா கிராமத்தில் தனக்கென இருந்த வேர்களை பொருளாதார உறவுகளைத் தானே அறுத்துக் கொண்டான். அவ்வேர்களே அவனை மேல்மத்தியதர வர்க்க வாழ்க்கைக் குரியவனாக்குகிறது. ஆனால் தங்கராஜுவோ வேர்களற்றவன். கிராமத் திலிருந்து பறித்தெடுக்கப்பட்டு நகரத்தில் எறியப்பட்டவன். கீழ் மத்தியதர வர்க்க வாழ்க்கையின் பிரதிநிதி. அவனது விருப்பங்களும் ஆசைகளும் கானல் நீராகிப் போவது இன்றைய சூழலில் யதார்த்தமான ஒன்றேயாகும். இங்கும் ஹெப்ஸிபா சமூக நிகழ்வின் சரியான புரிதலை உணர்ந்து கொண்டவர் என்பதைக் காட்டி விடுகின்றார். கல்வி, வேலை, வாழும் இடம் முதலியவற்றால் கிடைக்கும் புதிய சிந்தனைகள் மனதில் இருந்தாலும் ஒருவனது பொருளாதாரப் பின்னணி அவனது வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு நாவலைப் படைத்துள்ளார் என்றே தோன்றுகிறது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOAmAJ-RMvHkw0-BQD0aOsDBYGGPjCTzGI8icc8S93sdYoDhaGkQyGISxhX7xWuvXqu3-DR3B8RYWhtNHgFoooTZU88Pflp_Sr3NAZ77gEEFkcX4bpVYOF4WBU6fapWWk-tSw1Xye5Pl5p/s1600/madurai.-17.jpg

கடைசியாக வெளி வந்துள்ள மா-னீ, அவரது முதல் மூன்று நாவல்களின் படைப்புலகத்திலிருந்து சற்று விலகியது. இந்நாவலில் குடும்ப உறவுகள் குறிப்பிட்ட பொருளாதாரப் பின்னணியில் நிறுத்தப்படாமல், உலகப் போர் என்ற பெரும் நிகழ்வொன்றின் பின்னணியில் நிறுத்தப்பட்டுள்ளன. உலக மொழிகள் பலவற்றிலும் உலகப் போரின் விளைவுகள் பற்றிய நாவல்கள் வந்துள்ளன என்றாலும் தமிழில் மிகவும் குறைவு.

மா-னீ இரண்டு நோக்கங்களைக் கொண்டது. இரண்டாம் உலகப்போரின் உக்கிரம் ஒரு குடும்பத்தை எவ்வாறு அலைக்கழித்தது என்பதைச் சொல்வது முதல் நோக்கம். இரண்டாவது நோக்கம், பர்மீய வாழ்க்கை முறையோடு இந்தியாவிலிருந்து போன காட்டிலாகா அதிகாரி ஒட்ட முடியாமல் தவிப்பதும், அவரது மகன்கள் அந்த வாழ்க்கையோடு கலந்து விட முயல்கையில் அவருக்கு ஏற்படுகின்ற அதிர்ச்சியை வெளிப் படுத்துவதும் ஆகும். முதல் நோக்கம் நாவலில் முறையாகத் தரப்பட்டுள்ளது. போர்க்காலத்தில் மகன்கள் இருவரையும் பர்மாவிலேயே விட்டுவிட்டு தந்தை, தாய், இளம்வயதுப் பெண் ஆகிய மூவரும் இந்தியாவிற்குக் கிளம்புகின்றனர். கிளம்பிய அன்றே மகள் பிரிந்து விடுகிறாள். அவளை மட்டும் சுமந்து கொண்டு ரங்கூன் செல்லும் ரயில் கிளம்பி விடுகிறது. தாயும் தந்தையும் கால்நடையாகவும் கட்டை வண்டியிலும் அரக்கன்யோமா மலைகளைத் தாண்டி இந்தியாவிற்கு வரும் வழியில் மகள் காது நகைகளையும் ஒரு காதையும் இழந்து மூளியாகி சொந்த ஊரான பனைவிளையை அடைகிறாள். பல நாட்கள் கழித்து தாய் வந்து சேருகிறாள். கையில் பணம் எதுவும் இல்லமல் வந்த அவர்களை உறவினர்கள் சரியாக வரவேற்கவில்லை. பின்னர் மகன்களில் ஒருவன் ஒரு கண்ணை இழந்தவனாய், கையில் போதிய பணத்தோடு வந்து தங்கையை சுதந்திரப் போராட்ட வீரன் ஒருவனுக்கு மணம் முடித்து வைக்கிறான். இன்னொரு தமையன் என்ன ஆனான் என்பதே தெரியவில்லை. நாவல் ஒருவழியில் சுபமாக முடிகிறது.

மா-னீ ஒரு வகையில் சுயசரிதை போல என்ற குறிப்புடன் வந்துள்ளதால் அவரது சார்பு வெளிப்படும் என்று எவரையும் அடையாளங்காட்ட இயலவில்லை. கிரேஸ் அழகுமணி, ராணி என்ற பெயர்களோடு  மானீ என்ற அழைக்கப்பட்ட, அந்தக் குடும்பத்தின் இளம் பெண்ணின் பார்வை யிலேயே நாவல் செல்கிறது. என்றாலும் ஹெப்ஸிபா குடும்ப உறவுகளில் தான் வெளிப்படுத்தும் ஒரு சார்பினை இந்நாவலிலும் வெளிப் படுத்தியுள்ளார்.

காட்டிலாகா அதிகாரியின் மூத்த பையனான ரஞ்சன் தான் பர்மீயப் பெண்ணொருத்தியை செல்வராஜுவின் கௌரவத்திற்குக் குறைவான குடும்பத்தைச் சேர்ந்தவளை விரும்பி, கர்ப்பமடையச் செய்துவிட்ட நிலையில், அதை நாவலாசியர் விலகி நின்றே பார்க்கின்றார். அதை ஏற்க மறுக்கும் செல்வராஜுவின் செயல்பாடுகளைக் காலத்தோடு ஒட்டாத தன்மையுடையன என்பதைத் தான் எழுதும் தொனியிலேயே வெளிப்படுத்தி விடுகிறார்.

ஹெப்ஸிபாவின் நான்கு நாவல்களையும் அவற்றில் வெளிப்படும் சார்பு நிலையையும் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தோமானால், அவரது வாழ்க்கை பற்றிய மதிப்பீடுகளும், சமூகம் பற்றிய கோட்பாடுகளும் வெளிப்படுவதை அறியலாம். ஹெப்ஸிபா தன் காலத்து மனிதர்களின் வாழ்க்கை முறையும் சமூக மதிப்புகளும் மாறி வருகின்றன என்பதை உணர்ந்தவராகத் தன்னை அடையாளங்காட்டுகின்றார். மாறிக் கொண்டிருக்கும் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் சிலவகைப்பட்ட மனிதர்களின் செயல்பாடுகளின் நியாயப்படுத்துவது அவசியம் என்பதையும் உணர்ந்தவராக வெளிப்படுகின்றார். இந்த நியாயப்படுத்தும் தன்மை, குறிப்பிட்ட சமூகப் பொருளாதாரச் சூழநிலையில் குறிப்பிட்ட வகையான தன்மையைக் கொண்டதாக அமையும் என்ற சமூகத்தின் இயங்கியலைப் புரிந்து கொண்டவர்களின் தன்மையாகும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnoP5JPTizaOEdCIMD9j-3dEi921UgA3An6Be_Xu2HJ4LLj9_qFwAGTS3TJT6fyyA1nkb-CAZ9RPIhtx4EzYbVR_acokhzjYOtaJJF2i-8qk8iWaozM-aaTitqFjhi5OkwwbmSMnqhv1yl/s1600/images+(12).jpg

சமூகத்தின் இயங்கியல் தன்மையைப் புரிந்து கொண்ட ஹெப்ஸிபாவின் வாழ்க்கை பற்றிய கோட்பாடு அதன் போக்கிலேயே அவருக்குரிய இலக்கியக் கோட்பாட்டையும் உருவாக்கித் தந்துவிடுகிறது. அந்தக் கோட்பாடே யதார்த்தவாதம் (realisam ) என்பது. இந்த யதார்த்தவாதம், பனைவிடலிகளின் சப்த ஒழுங்கையும், பனையேறிகளின் கோவணத் தையும், அக்காணியின் மணத்தையும், கல்லூரிக் காதலர்களின் கற்பனையையும், அனாதைப் பையனின் வறுமைத்துயரத்தையும் அப்படியே படம் பிடித்துக் காட்டுவதோடு நின்று விடுகிற இயல்புநெறிவாதத்திலிருந்து (Naturalism ) விலகி, சமூக வளர்ச்சியைப் புரிந்து கொண்ட ஆசிரியர், யார் பக்கம் தன் சார்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்து வெளிப்படுத்தும் தன்மையதாகும். இதுவே ஹெப்ஸிபாவின் இலக்கியக் கோட்பாடாகும். இந்த இலக்கியக் கோட்பாடே சமூகத்தை வளர்ச்சிப் போக்கில் நகர்த்தும் தன்மையுடைய இலக்கியக் கோட்பாடே அவருக்கு நாவல் வரலாற்றுக்கு முக்கியப் பங்களிப்பு செய்தவர் என்ற பெருமையினைப் பெற்றுத் தந்தது எனலாம்.

=====================================================================

மா-னீ


ஹெப்சிபா ஜேசுதாசனின் மா -னீ நாவல் வெளியாகி இருபத்தியேழு வருசங்கள் ஆகிவிட்டது. இன்று வரை அந்த நாவல் குறித்து விரிவான விமர்சனம் எதுவும் வெளியானதாக தெரியவேயில்லை. தமிழ்வாசகபரப்பில் ஏனோ அந்த நாவல்  கவனம் கொள்ளாமலே போய்விட்டது.

 

அதற்கான முக்கிய காரணம்  ஹெப்சிபா தனது நாவல்கள் குறித்து அதிகம் பேசாதவர். எந்த இலக்கிய குழுவோடும் தன்னை இணைத்து கொண்டு சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதவர். மிக குறைவாக, ஆனால் சிறப்பாக எழுதியவர்நவீன விமர்சகர்களின் கருணையும் தயவும் மிக்க கடைக்கண் ஹெப்சிபாவின் நாவல் மீது இன்று வரை படவேயில்லை.

 


திருவனந்தபுரத்தில் ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு நகுலனிற்கு விளக்கு விருது கொடுக்கப்பட்ட நிகழ்வில் ஹெப்சிபாவை ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அவரோடு பேசியதில்லை. ஆனால் அவரது சாந்தமான முகம் நினைவில் அப்படியே இருக்கிறது. அன்றைய நிகழ்வில் நகுலன் மேடையில் இருந்தபடியே ஹெப்சிபா இது யார் உன் பேரக்குழந்தையா என்று அரங்கில் இருந்த ஒரு குழந்தையை சுட்டிகாட்டி கேட்டார். ஹெப்சிபாவிடம் அதற்கும் புன்னகையே பதிலாக வந்தது. ஜேசுதாசன் சிறந்த பேராசிரியர். தேர்ந்த வாசகர். நுட்பமான விமர்சகர். அவரது அக்கறைகளும் வாசிப்பு அனுபவங்களும் தனிசிறப்பானவை.

 


புத்தம்வீடு என்ற ஹெப்சிபாவின் நாவல் குறித்து சிஎல்எஸ் கருத்தரங்கில் வாசிக்கபட்ட கட்டுரையை படித்திருக்கிறேன். சில கல்லூரிகளில் புத்தம்வீடு பாடமாகவும் கூட வைக்கபட்டிருந்தது. அது மரபான தமிழ்நாவல்களில் இருந்து மாறுபட்டது. அதை விடவும் நான் மானீயை முக்கியமானதாக கருதுகிறேன்.
இன்று வாசிக்கப்படும் போதும் மா-னீ தேர்ந்த கதை சொல்லும் முறையும் கவித்துவ அழகுடன் கூடிய நடையும்  நுட்பமான விவரணைகளும், மிகையற்ற உணர்ச்சிநிலைகளும் கொண்ட அற்புதமான நாவல் என்பதில் உறுதியே ஏற்படுகிறது.

 


மா-னீ சிதறுண்ட பர்மீய தமிழ் குடும்பம் ஒன்றின் கதையை பேசுகிறது. தமிழ்நாவல் வரலாற்றில் மறக்கமுடியாத பெண் கதாபாத்திரம் மா-னீ. லாசராவின் அபிதா போல இந்த பெயரும் சொல்ல சொல்ல நாவில் தித்திப்பு தருவதாகவே இருக்கிறது. மானீ என்ற இளம்பெண்ணே கதையை விவரிக்கிறாள். அவளது அன்பும் காதலும் குடும்பத்தின் மீதான அக்கறையும் அகதியாக வெளியேறிய போது அடையும் வலியும் துக்கமும் நாவலெங்கும் பீறிடுகின்றன.

 


மானீ 140 பக்கமே உள்ள நாவல். அன்னம் பதிப்பகத்தால் 1982ம் ஆண்டு இதன் முதல்பதிப்பு வெளியானது. பத்து ரூபாய் விலை. ஆனாலும் பல ஆண்டுகள் விற்கபடாமலே இந்நாவல் தேங்கி போயிருந்தது,

 

மா-னீ என்ற தலைப்பே நம்மை வசீகரிக்கிறது. அந்த சொல்லின் ஊடாக ஒரு இளம்பெண் வெளிப்படுகிறாள். அவளது பெயரே அவளை பற்றிய கற்பனையை நமக்குள் கிளர்ந்து எழுச்செய்கிறது. உண்மையில் அது தான் இந்த நாவலும் கூட.

 


மா-னீ என்பது பர்மாவில் அவளுக்கு பள்ளி தோழிகள் வைத்த பெயர். உண்மையில் அவளது பெயர் கிரேஸ் அழகு மணி. வீட்டில் அவளை எல்லோரும் ராணி என்று கூப்பிட்டார்கள். அதுவும் வெறும் ராணியில்லை பர்மா ராணி. தென்தமிழ்நாட்டில் இருந்து பர்மாவிற்கு பிழைக்க போனவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்கள் கூலிகளாகவும், சிறு வணிகம் செய்வதற்காகவும் பர்மா சென்றவர்கள். தலைமுறையாக அங்கே தங்கிவிட்டார்கள். யுத்தமே அவர்களை தேசத்தை விட்டு வெளியேற்றியது.

 


பர்மா பிரிட்டீஷ்காலனியாக இருந்தது என்பதால் இந்தியர்கள் அங்கே குடியேறுவதும் வேலை செய்வதும் இயல்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பர்மாவிற்கு சென்று வட்டிதொழில் நடத்திவந்தனர். அவர்களின் அக்கறையால் அங்கு தமிழ் பள்ளிகளும் கோவில்களும் கடைகளும் உருவாக்கபட்டன. தமிழ் வளர்ச்சிக்கு அவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். பர்மாவின் எந்த நகரத்திற்கு போனாலும் அங்கே தமிழ் பேச தெரிந்த நூறு பேராவது இருப்பார்கள் எனும் அளவிற்கு தமிழ் மக்கள் அங்கு வசித்து வந்தனர்.

 


மியான்மர் எனப்படும் பர்மா தென்கிழக்கு ஆசியநாடுகளில் ஒன்றுஒருபக்கம் சீனாவும் இன்னொரு பக்கம் தாய்லாந்தும் இருக்கின்றனமிக வளமான நாடு. இயற்கையின் உன்னதங்கள் நிரம்பியது. ஐராவதி என்ற மிகப்பெரிய ஆறு ஒடுகிறது. பௌத்த மதம் வேரோடிய நாடு. ஆண்டின் மழை அளவு மிக அதிகமானது. அடர்ந்த காடுகளே அதன் வளத்திற்கு முக்கிய காரணம். பர்மீயர்கள் எனும் பூர்வமக்களின் தேசமது. பர்மீய மொழியே முக்கிய ஆட்சிமொழியாக இருந்தது. ஆங்கிலேயர்களின் ஆக்ரமிப்பின் பின்பு ஆங்கிலமும் அரசு மொழியாக்கியது. பின்பு தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளும் பரிவர்த்தனைக்கான அங்கீகாரத்தை பெற்றன. 1948ல் தான் பர்மா சுதந்திரம் பெற்றது.

 


இன்றுள்ள மியான்மரின் அரசியல் சூழலில் தமிழும் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்கள் போலவே ஒடுக்கபடுகிறார்கள். அவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் கிடைப்பதில்லை

 


பர்மாவின் முக்கிய விவசாயம் நெல். காடுகளில் இருந்து கிடைக்கும் தேக்கும் மூங்கிலும் வனப்பொருட்களும் அவர்களுக்கு பெரிய வருவாயை ஏற்படுத்தி தந்தனஅதனால் பர்மாவிற்கு கூலி வேலை செய்ய நிறைய ஆட்கள் தேவைப்பட்டார்கள். அதற்காகவே இந்தியாவில் இருந்து அதிகம் பேர் பர்மா சென்றார்கள். அது போலவே ஒரளவு படித்தவர்களுக்கு அங்கே நல்ல வேலைகள் கிடைத்தது. ஆகவே தமிழ்நாட்டில் அடிப்படை கல்வி கற்றவர்கள் நல்ல உத்தியோகம் என்று பர்மாவிற்கு சென்றனர். ரங்கூனும் மாண்டலேயும் தான் பர்மாவின் முக்கிய நகரங்கள். அங்கே தான் அதிகம் வணிகம் சார்ந்து இயங்கிய தமிழ் குடும்பங்கள் இருந்தன.

 


பர்மீயர்கள் கடின உழைப்பாளிகள். அதிலும் பர்மீய பெண்கள் சலிக்காத உழைப்பாளிகள். அவர்கள் இயல்பாகவே உறுதியான மனது கொண்டவர்கள். ஆனால் அடுத்தவர் மேல் அன்பு செய்வதில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள். அழகும் கச்சிதமான உடற்கட்டும் கொண்ட பர்மீய பெண்களை வெள்ளைகாரர்கள் தங்களது பாலியல் இன்பங்களுக்காக அதிகம் பயன்படுத்தி கொண்டார்கள்.

 


இந்திய தேசிய ராணுவம் உருவாக்கபட்ட போது அதற்கு பெருமளவு உதவி செய்வதவர்கள் பர்மீய தமிழ் வணிகர்களே. இந்திய சுதந்திரத்திற்கு பர்மீய தமிழர்களின் பங்கு முக்கிய ஆதரவாக இருந்தது. யுத்த காலம் மற்றும் அது தொடர்ந்த நெருக்கடிகள், பர்மாவினை விட்டு தமிழர்கள் வெளியேறி கால்நடையாக தமிழகம் வந்து சேர்ந்த நிகழ்ச்சிகளை சாமிநாத சர்மா எனது பர்மீய நடைப்பயணத்தில் முழுமையாக விவரித்திருக்கிறார். அது போலவே ரங்கூனில் இருந்த தமிழ் வாழ்க்கை பற்றி .சிங்காரத்தின் இரண்டு நாவல்களும் விரிவாக பேசுகின்றன.

 


1948
ல் மார்டன் தியேட்டர்ஸ் பர்மாராணி என்ற படத்தை தயாரித்து வெளியிட்டது. இதில் டி. ஆர் .சுந்தரம் நடித்திருக்கிறார்பர்மாராணி என்ற பெண்உளவாளி எப்படி யுத்த காலத்தில் ஆங்கிலேயர்களுடன் இணைந்து பணியாற்றினாள் என்ற சாகச கதையை இந்த படம் விவரிக்கிறது. ரங்கோன் ராதா, பராசக்தி, புதிய பறவை போன்ற படங்களில் பர்மா யுத்தம் ஏற்படுத்திய விளைவுகள் பதிவு செய்யபட்டிருக்கின்றன. பர்மாசயாம் ரயில்பாதை உருவாக்கத்தின் போது ஜப்பானிய ராணுவம் காட்டிய கெடுபிடிகளும் அதன் தொடர்விளைவுகளையும் முன்வைத்தே  The Bridge on the River Kwai என்று டேவிட் லீன் படமாக்கினார். அந்த படம் பர்மாவில் படமாக்கபடவில்லை. மாறாக இலங்கையில் படமாக்கபட்டது.

 


இந்த நாவல் பர்மாவின் வடக்குபகுதியில் உள்ள கத்தா எனப்படும் சிறுநகரில் வாழ்ந்த தமிழ்குடும்பத்தின் கதையை விவரிக்கிறது. ரங்கூனை போல கத்தா பெரிய நகரமில்லை. வனம் சார்ந்த சிறிய நகரம். ஐராவதி ஆற்றின் வழியாக பயணம் செய்தே அதை அடைய நேரிடும். தேக்கு வனங்கள் நிரம்பிய பகுதி. அங்கே ஆரம்ப காலத்தில் அதிக தமிழ்குடும்பங்கள் வசிக்கவில்லை. பெகுவில் ரயில்பாதை போடுவதற்கான பணி நடைபெற்ற போது சென்ற தமிழ்குடும்பங்கள்  அப்படியே கத்தாவிற்கு குடிபோனார்கள். கத்தா வழியாக எளிதாக சீனாவிற்கு சென்றுவிட முடியும் என்பதால் அங்கே ராணுவ பாதுகாப்பு சற்று கூடுதலாக இருந்தது. பெரிய சிறைச்சாலை ஒன்றுமிருந்தது.

 


இந்த கதை ஹெப்சிபாவின் உண்மை கதை என்பது போன்று நாவல் முகப்பில் உள்ள சமர்ப்பணம் தெரிவிக்கிறது. தன் நினைவில் ஒளிரும் பர்மாவை ஹெப்சிபா எழுத்தில் நிலை பெற செய்திருக்கிறார் போலும்.

 


கதை ராணி என்ற பெண் வழியாகவே விவரிக்கபடுகிறது. அவள் காட்டு இலக்காவில் வேலை செய்யும் தன்னுடைய தந்தை செல்வராஜ். அவளது அம்மா அன்னம்மா  சகோதரர்கள் ரஞ்சன் ஸ்டான்லி இருவரை பற்றி முதல் அத்தியாயத்தில் அறிமுகம் செய்து வைக்கிறாள். எப்படி அவர்கள் குடும்பம் தமிழகத்தில் இருந்து பர்மா வந்தது என்ற கடந்தகாலம் விவரிக்கபடுகிறது
அத்துடன் பர்மாவின் தென்பகுதியில் உள்ள ஒரே கல்லூரியான ஐட்ஸனில் தங்கி படிக்கும்  அவளதுஇரண்டு அண்ணன்களுக்கும் அவளுக்குமான பாசமும் கேலிகிண்டல்களும் அறிமுகமாகிறது.

 


கத்தாவில் ஒரேயொரு உயர்நிலைபள்ளியிருக்கிறது. அங்கே தான் கிரேஸ் அழகுமணி படிக்கிறாள். அவளது பெயரை உடன்படிக்கும் பர்மீய சிறுமிகளால் கூப்பிட முடியவில்லை. அவர்கள் வைத்த பெயரே மா-னீ. காரணம் பர்மாவில் பெண்களின் பெயர்கள் மா-மா, ஷ்வோ- மா, நாண்மா. மா -கிம்-மியா இப்படிதானிருக்கும் ஆகவே அவள் பெயரையும் மானீ என்றாக்கிவிட்டார்கள். அந்த பெயரை வீட்டில் கூட அண்ணன்கள் கேலியாக அழைப்பதுண்டு. அவள் தன்பெயரை ராணி என்று தான் அனைவரிடமும் சொல்கிறாள்

 


திருவதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அருமனை என்ற ஊரை சார்ந்த செல்வராஜ் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த பட்டதாரி. சொந்த ஊரில் குமாஸ்தா வேலை செய்ய திருப்தியில்லாமல் ரங்கூனுக்கு வந்து சேர்கிறார். காட்டிலாக்காவில் வேலைக்கு சேர்ந்து வனப்பகுதியான கத்தாவிற்கு குடியேறுகிறார். ஆங்கிலயே அதிகாரிகளின் நன்மதிப்பை பெற்றதால் அவருக்கு தனி வீடும் வேலையாட்களும் உதவிகளும் கிடைத்தனஅதில் குடும்பத்தை ஒட்டுவதன் ஊரில் உள்ள தனது அம்மா மற்றும் தம்பி தங்ககண்ணிற்கு தேவைப்படும் பணத்தையும் அனுப்பி வைத்து உதவுகிறார்.

 


வீட்டில் ஒரு பர்மீய சமையற்காரன் இருந்தான். அவருக்கு கிழே நிறைய பர்மீயர்கள் வேலை செய்தனர். இவர்களை சமாளிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் பர்மீய மொழியை கற்றுக் கொள்கிறார்அவருக்கு பர்மீய மொழி கற்று தந்தவர் -லூ என்ற ஆசிரியர். எப்போதும் லுங்கி கட்டிக் கொண்டு பட்டு தலைப்பாகை சூடிய வயதானவர். அவர் வழியாகவே லுங்கி என்பது பர்மீய சொல். அவர்கள் கட்டிய உடை இந்தியாவிற்கு வந்தபோது அங்கிருந்தே லுங்கி என்ற வார்த்தை உருவானது என்பதை அறிந்து கொள்கிறார்.

 


காட்டில் வேட்டையாடுவது வெள்ளைகாரர்களின் முக்கிய பொழுது போக்கு . அதற்கு உறுதுணையாக செல்வராஜ் துப்பாக்கியுடன் மிளா வேட்டைக்கு போவதே நடைமுறை.. அவரது ஒரே ஆசை எப்படியாவது எம்ஏ படித்து பாஸ் பண்ணிவிட வேண்டும் என்பது. எம். பாஸ்பண்ணிவிட்டால் உயரதிகாரியாகி விடலாம். அப்புறம் வசதியாக வாழலாம் என்று கனவு காண்கிறார். இதற்காக அவர் அதிகாரிகளுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் வீட்டில் விருந்து கொடுக்கிறார்

 


அந்த பர்மீய வீடும் புறச்சூழலும் அன்னம்மாவின் மனநிலையும் மிக துல்லியமாக விவரிக்கபட்டிருக்கிறது. இந்த நாவலின் தனிச்சிறப்பு பர்மீய வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியிருப்பது. அது படிக்கும்போதே நம்மை பர்மாவில் இருப்பது போன்ற நெருக்கத்தை உருவாக்கிவிடுகிறது

 

ஹெப்சிபா  நுட்பமான எழுத்தாளர் என்பதற்கு அவரது மானீ நாவலின் முதல் அத்தியாயமே சாட்சி. எத்தனை விபரங்கள். எவ்வளவு நுட்பமான விவரிப்புகள். வர்ஜீனியா வுல்பிடம் காணப்படுவது போன்று புறச்சூழலை விவரிப்பதன் வழியே மனிதர்களின் மனநிலையை எடுத்து சொல்லும் கதை சொல்லும் முறை ஹெப்சிபாவிடம் அருமையாக கைவந்திருக்கிறது. அதிலும் பர்மீய கதாபாத்திரங்களை அவர் விவரிக்கும்போது உள்ளார்ந்த கேலியும் அக்கறையும் வெளிப்படுவது வெகுசிறப்பானது.

 


ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக வயது வந்த பெண் வெளியாட்களுடன் பேசுவதோ உலகை தனியாக சுற்றி அறிந்து கொள்வதோ சாத்தியமானதேயில்லை. வீடு தான் அவளது உலகம். குடும்பத்து மனிதர்களின் அனுபவங்களில் இருந்தே அவள் தன்னை உருவாக்கி கொள்கிறாள். வெளிஉலகம் அவள் வரையில் அதிசயமான உலகம். மா-னீயும் அப்படியே இருக்கிறாள்.

 


பர்மாவினை பற்றிய படைப்புகளில் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய  Burmese Days  முக்கியமானது. இந்த நாவல் 1934ம் ஆண்டு வெளியானது. ஜார்ஜ் ஆர்வெல் விலங்குபண்ணை என்ற நாவலை எழுதி மிக பிரபலமானவர். இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். ஆனால் இந்தியாவில் பிறந்தவர். இவரது அப்பா இந்தியாவில் கிழக்கிந்தியகம்பெனியில் சில ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். ஜார்ஜ் ஆர்வெல் ஐந்து ஆண்டுகாலம் பர்மாவில் உயர் போலீஸ் அதிகாரியாக வேலை செய்திருக்கிறார். இந்த நாட்களில் அவர் பர்மாவின் வடபகுதிகளின் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கான முழு அதிகாரத்தை கையில் வைத்திருந்தார்

 


மானீ நாவலில் இடம் பெற்றுள்ள காலகட்டத்தில் அதே கத்தா நகரில் ஜார்ஜ் ஆர்வெல் வசித்திருக்கிறார். இவரது நாவலிலும் கத்தாவும் வடபர்மீய வாழ்வுமே இடம்பெறுகிறது.

 


ஆர்வெலின் பர்மீய நாட்கள் நாவலில் டாக்டர் வீராச்சாமி என்ற தமிழ்கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. இவரே நாவலின் முக்கியபாத்திரம். இவருக்கு எதிராக ஊழல்பெருச்சாளியான ஒரு பர்மீய நீதிபதி தொடர்ந்து புகார்கள் அனுப்பி  எப்படியாவது டாக்டரை ஒழித்து கட்டி நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்று தொடர்ந்து முயற்சிக்கிறார். டாக்டர் வீராச்சாமியோ ஆங்கில அரசின் விசுவாசி. அவர்கள் எது செய்தாலும் நியாயம் என்று நம்புகின்றவர். ஆனால் தன் மீது சுமத்தப்படும் பொய்குற்றங்களை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 


இந்த புகார்களில் இருந்து தன்னை விடுவிக்க அவர் தனது ஆங்கில நண்பரான ஜான் பிளாரேயை நாடுகிறார். பிளாரே ஆங்கிலேயராக இருந்தாலும் பர்மீயர்களின் சார்பில் பேசக்கூடியவர். அவர்களுக்காக எப்போதும் துணை நிற்பவர். இவர் ஒரு பர்மீய பெண்ணை காதலித்து அவளை இரண்டாவது மனைவி போல துணைக்கு வைத்திருக்கிறார்ஜான் உதவியால் தன் மீதான புகார்களில் இருந்து தற்காலிகமாக தப்பி முடிந்த வீராச்சாமி முடிவில் பர்மீய நீதிபதியின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடுகிறார்.

 


இந்த நாவலின் ஊடாக பர்மா காலனியாக இருந்தபோது நடைபெற்ற அரசியல் கொந்தளிப்புகள், ஆங்கிலேய அதிகார துஷ்பிரயோகங்கள், பர்மீய மக்களை கொத்தடிமை போல நடத்திய விதம் யாவும் விவாதிக்கபடுகிறது
உலகப்புகழ்பெற்ற ஜார்ஜ் ஆர்வெலின் பர்மீய நாட்களை விடவும் அதே கத்தாவை ஹெப்சிபா சிறப்பாக எழுதியிருக்கிறார். ஆங்கிலேயராக ஆர்வெலிடம் வெளியே இருந்து பர்மாவை பார்க்கும் குணமிருக்கிறது. ஆனால் ஹெப்சிபா அதை தனது சுயமான வாழ்நிலம் போன்று பாவித்து எழுதியதால் அவரால் அதிக கவனத்துடன் நுட்பத்துடன் பர்மீய வாழ்வை எழுத முடிந்திருக்கிறது. ஒருவகையில் பர்மீயர் ஒருவர் தமிழில் நாவல் எழுதியது போன்றே உள்ளது. அது தான்  தனிப்பெரும் சிறப்பு.

 


ஹெப்சிபா பர்மாவில் காணப்படும் புத்த மடாலயங்கள், அங்கு நடைபெறும் வழிபாடுகள்; எளிய மக்கள் புத்தம் மீது கொண்டுள்ள ஈடுபாடு போன்றவற்றை விரிவாக எழுதியிருக்கிறார். பயா பயா என்று உச்சரிக்கும் உதடுகளுடன் பௌத்த கோவிலான பகோடாவை நோக்கி மக்கள் செல்லும் காட்சியும் பொங்கிகள் எனப்படும் பௌத்த குருமார்கள் பற்றியும் தங்கதகடுகள் பதித்த பகோடாக்களிலிருந்து காற்றில் மிதந்து வரும் கோவில்மணிகளின் சப்தமும் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் கோபுரமும் அந்த கோபுர உச்சியினை காற்று வந்து மோதி சப்தமிடுவதும்  எழுத்தின் வழியே காட்சிகளாக ததும்புகின்றன

 


மானீ கிறிஸ்துவ பெண் ஆனாலும் அவளுக்கு பௌத்த மடாலயங்களுக்கு சென்று வரவேண்டும் என்ற ஆசையிருக்கிறது. அவள் யாரும் அறியாமல் சென்று வருகிறாள். மோட்சபயணம் என்ற பௌத்த பாதையில் நடந்து பார்க்கிறாள். மனதை சாந்தம் கொள்ள வைக்கும் பௌத்தத்தை போற்றுகிறாள்
மா-னீ பள்ளி சிறுமியின் வயதில் இருந்து பதின்வயது கொண்ட பெண்ணாகும் வரை நாவல் விவரிக்கிறது. நாவலின் வழியே கத்தாவில் உள்ள பர்மீய வாழ்க்கை. அங்கு ஒடும் ஐராவதி ஆற்றின் வெள்ளப்பெருக்கு. காற்றடி காலத்தில் ஆளை தூக்கி போட்டுவிடும் கொடுங்காற்று அடிப்பது, வறண்ட வெயில்காலம் போன்றவை விவரிக்கபடுகிறது.

 


கத்தாவிற்கு முதன்முறையாக ரயில் விடப்படுவது. அவர்கள் ஆகாய விமானம் பறப்பதை காண்பது , முதன்முறையாக சினிமா தியேட்டர் வருவது, ரேடியோ கேட்க துவங்குவது என்று நாகரீகமாகி வரும் பர்மாவின் சிறுநகரின் கதையும் மானீ கதையோடு கூடவே விவரிக்கபடுகிறது

 


மா-னீயின் குடும்பம் மிக ஐதீகமானது. அப்பா கட்டுபெட்டியான சிந்தனைகளுடன் இருக்கிறார். ஆனால் ஆங்கில கல்விபடித்த அவரது பையன்கள் சுதந்திரமாக சிந்திக்கிறார்கள். அவர்கள் சிகரெட் பிடித்து கெட்டு போனது போல தன் மகள் கெட்டுபோய்விடக்கூடாது என்று மானீயின் அப்பா பயப்படுகிறார். அவர் பர்மீயர்களை ஒரு போதும் தனக்கு சமமானவர்களாக நினைப்பதில்லை. தன்னிடம் கூலி வேலை செய்யும் பர்மீயர் எவராவது தன்னை வீட்டிற்கு சாப்பிட கூப்பிட்டுவிடுவாரோ என்று பயப்படுகிறார். தன் வீட்டில் வேலை செய்யும் பர்மீயர்களை மிக கடுமையாகவே நடத்துகிறார்.

 


மா-னீயின் பெரிய அண்ணன் மா- மியா என்ற பர்மீய பெண்ணை காதலிக்கிறான். அது அவனது அப்பாவிற்கு பிடிக்கவில்லை. மாமியா கர்ப்பமாகிவிடுகிறாள். அவளை ரஞ்சன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பர்மீயர்கள் கோபம் கொண்டு கத்துகிறார்கள். அப்பா இந்த அவமானம் தாங்கமுடியாமல் ரத்தகொதிப்பு நோயாளி ஆகிவிடுகிறார். ரஞ்சன் அந்த பர்மீய பெண்ணை திருமணம் செய்து கொண்டுவிடுகிறான். குடும்பம் சிதைவுற துவங்குகிறது. அடுத்த அண்ணன் பைலட்டாக வேலைக்கு சேர்ந்து குடும்பத்தை கொஞ்சம் முன்னேற்ற பார்க்கிறான்.

 


இதற்குள் யுத்தம் துவங்கிவிடவே ஜப்பானியர்கள் பர்மாவின் மீகு குண்டுபோட துவங்குகிறார்கள். ஊரை காலி செய்துவிட்டு போவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாகிறது. தமிழ்நாட்டிற்கு திரும்பி போய்விடலாம் என் அவர்கள் திட்டமிடுகிறார்கள். ஆனால் எதிர்பாராத குண்டுவீச்சு மற்றும் கலவரம் காரணமான மானீ குடும்பத்தை விட்டு தனித்து பிரிந்து ரயில் ஏறிவிடுகிறாள். அவளுக்கு மலையாளியான நர்ஸ் அன்னம்மா உதவி செய்கிறாள். அவர்கள் கப்பலில் இந்தியா திரும்புகிறார்கள்.

 


பிறந்ததில் இருந்து சொந்த ஊரை அறியாத மானீ முதன்முறையாக சொந்த ஊருக்கு வந்து சேர்கிறாள். அங்கே அறிந்தவர் யாருமில்லை. சித்தப்பா தங்ககண் நாடாரை சந்திக்கிறாள். அவரது வீட்டில் அடைக்கலம் ஆகிறாள். அங்கும் நிம்மதியாக வாழ முடியவில்லை. பிரிந்த குடும்பத்தில் மீதமாக அம்மா மட்டுமே ஊர் வந்துசேர்கிறாள். அவர்களது பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றிவிட்டதாக தங்களை குற்றம் சொல்கிறார்களே என்று சித்தி மனச்சடவு கொள்கிறாள்.

 


முடிவில் சித்தப்பா அவளது எதிர்கால நலனிற்காக மாப்பிள்ளை பார்க்க துவங்குகிறார். பைலட்டாக உள்ள அண்ணன் அவளை தேடி வருகிறான். கல்யாணத்திற்கு தேவையான உடைகள் நகைகள் வாங்க உதவி செய்கிறான். மா-னீயின் திருமணம் நடைபெறுகிறது. அவள் முதன்முறையாக அவளை மணந்துகொள்ள போகும் ஜானை சந்திக்கிறாள். அவன் தன்னை புரிந்துகொண்டு நன்றாக நடத்துவான் என்பது அவனது தோற்றத்திலே தெரிகிறது. அவனிடம் தன்னை ஒப்படைக்கிறாள். அத்துடன் நாவல் நிறைவு பெறுகிறது

 


நாவல் முழுவதும் பெண்ணின் வழியாகவே விவரிக்கபடுகிறது. அவளது ஆசைகள் கனவுகள் ஏமாற்றஙகள் இவையே நாவலை முன்நகர்த்துகின்றன. குறிப்பாக பெண்ணின் மனநிலை காற்றில் அசையும் இலைபோல எப்போது எந்த திசையில் அசையும் என்று தெரியாது என காட்டுகிறது. தாயும் மகளும் பேசிக் கொள்ளும் காட்சிகளும், வழிபடுவதற்கான தேவாலயம் இல்லாத ஊருக்கு வந்துவிட்டதாக மா-னீயின் அம்மா புலம்புவதும், பர்மீய வேலைக்காரன் மாங்போவும் மருத்துவமனை செவிலியாக வரும் அன்னம்மாவின் கதாபாத்திரமும் செதுக்கு சிற்பங்களை போல நுட்பமாக உருவாக்கபட்டிருக்கிறார்கள்.

 


நாவல் முழுவதுமே மா-னீ கடவுளிடம் தன்குடும்பத்தை காப்பாற்றும்படியாக பிரார்த்தனை செய்தபடியே இருக்கிறாள். பிரிந்து போன அண்ணனுக்காகவும் நோயாளியான அப்பாவிற்காகவும் கண்ணீர்விடுகிறாள். அவளது நேசம் புரிந்து கொள்ளபடாமலே போகிறது என்ற துக்கமே அவளை அழவைக்கிறது.
பர்மாவை பிரிந்து தமிழகம் வந்ததை அவளால் தாங்க முடியவேயில்லை. கத்தா என்ற அந்த சிறுநகரம் அவளுக்குள் முழுமையாக பதிந்து போயிருக்கிறது. இந்த நாவலில் பிரதான கதாபாத்திரங்களை விடவும் அதிகம் சிறு கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அசலானவர்கள். அவர்கள் சில அத்தியாயங்களே விவரிக்கபட்ட போதும் தனித்துவமாக பதிவாகியிருக்கிறார்கள்.

 


ஐராவதி நதியை பற்றிய ஹெப்சிபாவின் விவரணைகள் அபாரமானவைநதியின் பூர்வ வரலாறும் அதன் பெருக்கோட்டமும் வரைபடம் போல சித்தரிக்கபடுகிறது. ஐராவதி நதியை பற்றி குறிப்பிடும் போது அது உறங்கும் கடல் என்கிறார் ஹெப்சிபா. அத்துடன் கேலியான குரலில் அது தான் பர்மாவின் ஹைவே. எந்த ஒரு சாலையை விடவும் அதிகம் பயணம் செய்வது ஐராவதி நதியின் மீது தான் என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

 


ஆற்றில் செல்லும் சரக்கு கப்பல்களும் படகுகளும் வண்ணத்துப்பூச்சிகள் பறந்து போவது போலிருப்பதாக எழுதியிருக்கிறார். சிறுவர்கள் ஆற்றில் அடித்து போய்விடாமலிருக்க ஆற்றோரம் குடியிருக்கும் மக்கள் சிறார் இடுப்பில் கயிறு கட்டி அதை ஒரு முளையில் சேர்த்து முடிந்திருப்பார்கள் எனவும் ஐராவதியில் கிடைக்கும் மீன் ருசி, கரையோரம் வாழும் பர்மீயர் வெள்ளகாலத்தில் சந்திக்கும் அவலங்கள் என்றும் சிறப்பு அடையாளங்களை நாவல் முழுவதுமே  காட்டுகிறார்.

 


அழகிய மெல்லிய மஸ்லின் சட்டையின் பொத்தான்களிலிருந்து முத்துகள் வரிசையாக அசைந்தாடபுஷ்பதாம்பாளம் ஒன்றை தாங்கிக் கொண்டு வெல்வெட் செருப்பின் மேல் மெத்தென்று நடந்து அவள் பகோடாவிற்கு போகிறாள். அவள் தலையில் உள்ள புஷ்பசுமை பர்மீயப்பெண்களுக்கு சற்று அத்துமீறியதாக இருக்கும் என்று பர்மீய பெண்ணான மா-மியா பற்றி ஹெப்சிபா தீட்டும் சொற்சித்திரம் காட்சியாக நம்முன்னே தோன்றிமறைகிறது.

 


ஹெப்சிபா தேர்ந்த கதாசிரியர் என்பது அவர் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை சித்தரிக்கும் தருணங்களை கொண்டு அறிந்து கொள்ள முடிகிறது. துளியும் மிகையில்லாத உணர்ச்சி வெளிப்பாடுகள் அவை. இவரது எழுத்தில் எமிலி டிக்கன்சனின் குரல் போன்ற நெருக்கம் உள்ளது. அதே நேரம் கதை சொல்வதில் வர்ஜீனியா வுல்ப் போன்றும் நனவும் நினைப்புமாக கலந்து எழுதுகிறார்.

 


செகாவின் சிறுகதைகளை வாசிக்கையில் உருவாகும் மனவெழுச்சி இரண்டுவிதமானது. ஒன்று மிக சந்தோஷமாக இருக்கும் அதே நேரம் துக்கமாகவும் தோன்றும். அந்த இரண்டுமான கலவை அபூர்வமானது.. அதே மனஎழுச்சியை இந்த நாவலும் தந்தது. நாவல் என்பது நூற்றுக்கணக்கான நிகழ்வுகளின் தொகுப்பு இல்லை. மாறாக ஆயிரக்கணக்கான நுட்பமான தகவல்கள், விவரணைககள் கொண்ட மினியேச்சர் ஒவியம் போன்றது என்பதற்கு மா-னீ ஒரு உதாரணம். இதில் நாலைந்து முக்கிய சம்பவங்களே உள்ளது. அதன் விளைவுகள் என்னவாகிறது என்பதையே கதை தொடர்ந்து செல்கிறது.

 


யுத்தகாலம் பற்றியும் அதன் பின்உள்ளசரித்திரம் பற்றியோ நாவல் அதிகம் கவனம் கொள்ளவில்லை. கதையை சொல்பவள் ஒரு பெண் அவளை யுத்தம் தன் இருப்பிடத்தை விட்டு துரத்தியடிக்கிறது என்பதில் ஹெப்சிபா உறுதியாக இருந்ததால் அவளுக்கு தெரிந்த அளவு விசயங்கள் மட்டுமே நாவலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

 


மா-னீ, நாவலின் இறுதியில் தன் உண்மை பெயரான கிரேஸ் அழகுமணியாக்கு திரும்புகிறாள். அந்த இரண்டு பெயர்களுக்கும் ஊடே பர்மாவில் வாழ்ந்த அவளது நினைவுகள் மறைந்துகிடக்கிறது.

 


வாழ்நிலத்திலிருந்து வெளியேற்றபட்டவர்கள் தன் நினைவில் ஊரையும் அதன் மனிதர்களையும் கொண்டு செல்வார்கள். தனிமையில் அவர்களுக்காக கண்ணீர் சிந்துவார்கள். அவர்களது மனதில், கண்களில், உணவில் எப்போதும் அந்த ஏக்கம் படிந்திருக்கும் என்பார்கள். மானீயும் அதை தான் செய்கிறாள்.

 

இன்றுள்ள இலங்கை தமிழ்சூழலில் இந்த நாவல் இன்னும் முக்கியமானதாகவும் நெருக்கமானதாகவும் உள்ளது. அதற்காகவே இந்நாவல் மறுபடி வாசிக்கபடவும் கொண்டாடப்படவும் வேண்டியிருக்கிறது.
**

ஹெப்சிபா ஜேசுதாசன்

குமரி மாவட்டம் புலிப்புனம் ஊரைச் சேர்ந்தவர். பர்மாவில் 1925ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை பர்மாவில் மர வியாபாரம் செய்து கொண்டிருந்தார். இரண்டாம் உலகப் போரின் போது குடும்பம் நாகர்கோவிலுக்கு இடம் பெயர்ந்தது. நாகர்கோவிலில் படித்த ஹெப்சிபா ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். திருவனந்தபுரம் பல்கலைக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். இவருடைய கணவர் ஜேசுதாசன் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழ்ப் பேராசிரியர். கணவரின் தூண்டுதலால் புத்தம் வீடு நாவலை எழுதினார். இந்நாவல், மலையாளத்திலும் ஆங்கிலத்தில் லிஸ்ஸிஸ் லெகஸி (Lissys Legacy) என்ற பெயரிலும் மொழி பெயர்க்கப்பட்டது. தமிழின் ஆரம்ப நாவல்களில் முக்கியமான 10 நாவல்களைப் பட்டியலிட்டால் நிச்சயம் அதில் புத்தம் வீடு இடம் பெற்றிருக்கும். கணவரின் உதவியோடு Countdown from Solomon என்ற இலக்கிய வரலாற்று நூலை நான்கு பாகங்களாக எழுதினார். இது தவிர கவிதைகள், கட்டுரைகள், சிறுவர் இலக்கியம் என பல தளங்களில் தடம் பதித்திருக்கிறார்.  திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் வழங்கும் விளக்கு விருது 2002ம் ஆண்டு இவருக்குக் கிடைத்தது. 2012, பிப்ரவரி 9ம் தேதி மறைந்தார்

*****

புத்தம் வீடு நாவலில் ஓர் அத்தியாயம்… 

ருஷங்கள் எப்படித்தான் ஓடி விடுகின்றன! வாழ்க்கை முறைதான் எப்படி எப்படி மாறி விடுகின்றது! சுயேச்சையாக ஓடியாடித் திரிந்து, நெல்லி மரத்தில் கல்லெறிந்து, குளத்தில் குதித்து நீச்சலடித்து, கூச்சலிட்டுச் சண்டை போட்டு, கலகலவென்று சிரித்து மகிழ்ந்து, எப்படி எப்படியெல்லாமோ இருந்த ஒரு குழந்தை, பாவாடைக்கு மேல் ஒற்றைத் தாவணி அணிந்து கொண்டு, அது தோளிலிருந்து நழுவிவிடாதபடி இடுப்பில் இழுத்துக் கட்டிக் கொண்டு, கதவு மறைவில் பாதி முகம் வெளியில் தெரியும்படி குற்றவாளிபோல் எட்டிப் பார்க்கிற பரிதாபத்துக்கு இத்தனை சடுதியில் வந்து விடுகிறதே, இந்த வாழ்க்கைத் திருவிளையாடலை என்னவென்று சொல்வது!

அதோ அந்த அடிச்சுக் கூட்டிலிருந்து அப்படிப் பாதிமுகமாக வெளியில் தெரிகிறதே, அந்த முகத்துக்கு உரியவள் லிஸிதான். அந்தக் கண்கள் வேறு யாருடைய கண்களாகவும் இருக்க முடியாது. அவை அவளைக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. ஆனால், அந்தக் கண்களில் குறுகுறுப்போ மகிழ்ச்சியோ துள்ளி விளையாடவில்லை. அவற்றில் படிந்திருப்பது சோகமா, கனவுலகத்தின் நிழலா சும்மா வெறும் சோர்வா என்பதுதான் தெரியவில்லை. தலையில் நன்றாய் எண்ணெய் தேய்த்து வாரியிருக்கிறாள். அவள் முகத்திலும் எண்ணெய்தான் வழிகிறது. மாநிறமான அந்த முகத்துக்கு ஒளி தந்து அழகு செய்வதற்குப் புன்னகை ஒன்றும் அதில் தவழவில்லை. லிஸியா அது? நம் லிஸியா? ஏன் இப்படிக் குன்றிக் கூசிப் போய் நிற்கிறாள்? ஏன்? ஏன்?

முதலாவது, லிஸி பெரிய வீட்டுப் பிள்ளை என்பதை நீங்கள் அறிய வேண்டும். அதை மறந்திருந்தீர்களானால் இதுதான் அதை மறுபடியும் ஞாபகத்தில் கொள்ள வேண்டிய தருணம். லிஸியும் ஒருபோதும் அதை மறந்து விடக் கூடாது. அவள் பெரிய வீட்டுப் பெண். பனைவிளை புத்தம் வீட்டுக் குலவிளக்கு. ஆகையால் அவள் பலர் காண வெளியில் வருவது கொஞ்சங்கூடத் தகாது. அது அவள் விலையைக் குறைப்பதாகும். இரண்டாவது, இற்செறிப்பு ஒரு பழந்தமிழ் வழக்கம். சங்க காலத்திலேயே உள்ள வழக்கம். நல்லவேளையாக இது இன்னும் வெளிவராத இரகசியமாகவே இருந்து வருகிறது. பனைவிளை புத்தம் வீட்டார்க்குச் சங்க கால வழக்கங்கள் ஒன்றும் தெரியாது. அதற்குள்ள தமிழ் ஞானமும் அவர்களுக்குக் கிடையாது. ஆனால் தலைமுறை தலைமுறையாக வரும் வழக்கம் மட்டும் நன்றாகத் தெரியும். லிஸிக்கு பதினான்கு வயது ஆகிறது. “பெரிய பிள்ளை ஆகி விட்டாள். ஒற்றைத் தாவணி அணிந்துவிட்டாள். ஆகையால் இற்செறிப்பு மிகவும் அவசியமாகி விட்டது. நீங்கள் லிஸியின் முகத்தைப் பார்த்தால், அந்தக் கண்கள் மட்டும் உங்களிடம் ஏன்? ஏன்? என்று கேட்பது போலிருக்கும். ஆனால் இதற்கெல்லாம் போய்த் துயரப்படாதேயுங்கள். துயரப்பட்டால் தமிழ்நாட்டின் மற்ற பெண்மணிகளின் துயரங்களுக்கெல்லாம் எப்படிக் கணக்கெடுக்கப் போகிறீர்கள்?

அவள் என்னென்ன ஆசைகளை உள்ளத்தில் போற்றி வளர்த்து வந்தாள் என்று யாரும் கவலைப்படவில்லை. லிஸி வெறும் அப்பாவிப் பெண் ஒன்றும் அல்ல. முதலில் ரகளை நடத்தித்தான் பார்த்தாள். அழுது அடம் பிடித்தாள். அவளுக்குத் தெரிந்த முறையில் சத்தியாக்கிரகம் பண்ணினாள். ஆனால் இத்தனை பேரின் எதிர்ப்புக்கு இடையில் ஒரு குழந்தையின் பலம் எத்தனை தூரந்தான் போக முடியும்? அப்பனும் அம்மையுந்தான் போகட்டும். இந்தக் கண்ணப்பச்சியுங் கூட அல்லவா அவர்களுடன் சேர்ந்து கொண்டார்? கண்ணம்மையின் காரியம் கேட்கவே வேண்டாம். சித்தியாவது ஒருவாக்குச் சொல்லக் கூடாதோ? சித்திக்கு வழக்கம்போல வாய்ப்பூட்டு போட்டிருந்தது. மேரியக்கா இந்தத் தருணம் பார்த்துக் கிராமத்தில் இல்லை. மேரியக்கா பாளையங்கோட்டையில் இருக்கிறாள். காலேஜில் படிக்கிறாள். மேரியக்காவைப் படிக்க வைக்க அவளுக்குச் சித்தப்பாவோ மாமாவோ யார் யார் எல்லோமோ இருக்கிறார்கள். லிஸிக்கு யார் இருக்கிறார்கள்?

பள்ளிக்கூடத்துக்குத்தான் விட்டபாடில்லை. கோயிலுக்காவது விடக் கூடாதோ? நாலு தோழிகளை அங்கு சந்திக்கும் பாக்கியமாவது கிடைக்கும். கண்ணப்பச்சி கண்டிப்பாகச் சொல்லி விட்டார். இப்ப எதுக்கு? மொதல்ல ரெண்டு பேராப் போவட்டும். நம்ம குடும்பத்திலே இல்லாத பழக்கம் நமக்கு என்னத்துக்கு?

ரெண்டு பேர் என்று யாரை கண்ணப்பச்சி குறிப்பிடுகிறார் என லிஸிக்கு ஓரளவு தெரியும். ஆனால் அவள் வருங்காலத்தை விட நிகழ்காலத்திலேயே அக்கறை உடையவள். இரண்டு பேராகக் கோயிலுக்குப் போகலாம் என்ற நம்பிக்கை அப்போதைக்கு அவளுக்குத் திருப்தி தருவதாயில்லை. என்றாலும் இளம் உள்ளங்கள் எப்போதும் அழுதுகொண்டிருக்க முடியாது. எது முதலில் எட்டிக்காயாகக் கசக்கிறதோ அதுவும் நாளடைவில் பழக்கப்பட்டுவிடுகிறது. வாழ்க்கையே உலக ஞானத்தைப் போதிக்கிறது. லிஸிக்குப் பள்ளிக்கூடம் இல்லாவிட்டால் என்ன? வீடு இல்லையா? தோழர், தோழியர் இல்லாவிட்டால் போகிறார்கள். மேரியக்கா தந்த மைனா இருக்கிறது. லில்லி, செல்ல லில்லி இருக்கிறாள். லில்லியோடு கொஞ்சிக் குலவுவதில் பொழுதில் பெரும்பகுதியும் கழிந்து விடுகிறது. அந்தச் சின்னத் தலையை மடியில் இட்டுக் கொள்வதில்தான் எத்தனை இன்பம்! வீட்டு வேலைகளும் அப்படி ஒன்றும் பாரமானவை அல்ல. தானாகச் செய்தால் செய்வாள். இல்லாவிட்டால் அம்மையும் சித்தியும் இல்லையா? லிஸி பெரிய வீட்டுச் செல்லப்பிள்ளை தானே? இப்படியாகத் தன்னை நாளடைவில் சமாதானம் செய்து கொள்ளுகிறாள் அந்தப் பேதைப் பெண். மேலும், பதவிக்காகப் போய் ஏங்கிக் கிடந்தாளே, வீட்டிலேயே அவளுக்கு மகத்தான பதவி காத்துக் கிடக்கிறது. கண்ணப்பச்சிக்குக் கண் மங்கிக் கொண்டிருக்கிறது. கண்ணம்மை போன பிறகு, அதுவும் இரண்டு வருஷம் ஆகி விட்டது. கண்ணப்பச்சிக்குத் தனிமைத் துயரம் அதிகம். லிஸியின் துணையை இன்னும் கூடுதலாக நாடினார். இந்த ஒரு காரணத்தால்தான் லிஸிக்கு அடிச்சுக் கூட்டுக்கு வரும் உரிமை கிடைத்தது. ஆபத்துக்குப் பாவம் இல்லை அல்லவா? கண்ணப்பச்சிக்கு நினைத்த நேரம் பைபிளும், தினப்பத்திரிக்கையும் வாசித்துக் கொடுக்க வேறு யார் இருக்கிறார்கள்? ஆகையால் லிஸிக்கு அடிச்சக்கூட்டில் பெருமையுடன் நடமாடும் பதவி கிடைத்தது. அம்மைக்கும் சித்திக்கும் கிடைக்காத பதவி; அவர்கள் மாமனாருடன் பேசக் கூடாது. அவர்கள் கணவன்மார்களும் சித்தப்பாவும் இப்படி ஆகிவிட்டாரே என தங்கள் தந்தையுடன் பேசுவதில்லை. லிஸிதான் அந்த வீட்டில் கண்ணப்பச்சிக்கு ஊன்றுகோல். அவளுக்கு அது புரியவும் செய்தது. அதனால் கண்ணப்பச்சியிடம் அவளுடைய பாசம் இன்னமும் அதிகமாயிற்று.

வீட்டிலுந்தான் என்னென்ன மாற்றங்கள்? ஆடு குழை தின்கிற மாதிரி வெற்றிலை போட்டு வந்த கண்ணம்மை போய் விட்டார்களே! லிஸி வெற்றிலை இடித்துக் கொடுப்பாள் என்று அவள் கையைப் பார்ப்பதற்கு இப்போது யார் இருக்கிறார்கள்? ஆனாலும் அவள் வீட்டார் பல காரியங்களுக்காக அவள் கையை இன்னும் எதிர்பார்த்துத்தான் இருந்தார்கள். அதற்குக் காரணம் லிஸியேதான். லிஸி, மேரியக்காவின் வீட்டிலிருந்து சில பாடங்களைக் கற்றறிந்தாள். கிராமத்து வீடானாலும் அதைச் சுத்தமாக வைக்கலாம் என்றறிந்திருந்தாள். ஏராளமாகக் குவிந்து கிடக்கும் பழ வகையறாக்களுக்கென்று ஓரிடம், கண்ணப்பச்சி மாட்டுக்கென்று சீவிப்போடும் பனம் பழக்கொட்டைகளுக்கென்று ஓரிடம், இப்படியெல்லாம் ஒழுங்குபடுத்தி வைத்திருந்தாள். ஈக்களின் தொல்லை இப்போது குறைந்துவிட்டது. அடிச்சுக்கூட்டுக்கு நேராகத் திறக்கும் ஜன்னலுக்கு ஒரு கர்ட்டன் கூடத் தைத்துப் போட்டிருந்தாள். அது லிஸிக்கு மிகவும் சௌகரியமாயிருந்தது. யாராவது கண்ணப்பச்சியிடம் எப்போதாவது பேசுவதற்கென்று வருவார்கள். அப்போது வீட்டினுள் இருந்து கொண்டே எல்லாவற்றையும் பார்க்கலாம். வீட்டை இப்போது பார்த்தால் ஏதோ பெண்மணிகள் வாழும் இல்லமாகத் தோற்றமளித்தது. முன்பெல்லாம் லிஸிக்கு இப்போது சித்தியிடம் மதிப்பு மிகவும் குறைந்து விட்டது. சித்தியாவது வீட்டை கவனித்துக் கொள்ளக் கூடாதா? சித்திக்கு அழகாக ஸாரி கட்டத் தெரியும். பவுடரை நாசுக்காகப் பூசத் தெரியும். ஆனால் இந்த அம்மையிடம் ஒத்துப் போகக் கூடத் தெரியவில்லையே; கண்ணம்மை மரித்த பிறகு! சித்தியின் முகம் இப்போதெல்லாம் கவலை படர்ந்த இருள் சூழ்ந்திருக்கிறது. சித்தப்பா அடிக்கடி பிஸினஸ் என்று சொல்லிக் கொண்டு, திருவனந்தபுரம் போய் வருகிறார். அங்கிருந்து யாராவது உறவினரைக் கூட அழைத்து வருவார், போவார். ஆமாம், அதற்காகவாவது வீட்டை நன்றாக வைத்திருக்க வேண்டாமா? உன் முற்றத்தில் பூத்துக்குலுங்குகின்ற ரோஜாச் செடிதான் எத்தனை அழகாயிருக்கிறது! லில்லியின் பட்டுக் கன்னங்களைப் போல் லிஸியின் பழைய நினைவுகளைப் போல். ஆனால் அதைப் பேண வேண்டுமானால் லிஸி மட்டுந்தான் உண்டு வீட்டில். வேறு யார் இருக்கிறார்கள்?
லிஸிக்கு சாமர்த்தியம் இல்லாவிட்டால் அப்பனை இப்படி வீட்டில் பிடித்து வைத்திருக்க முடியுமா? அவர் கள்ளுக்கடைக்குப் போவதை நிறுத்த முடியவில்லை. ஆனால் காப்பிக் கடைக்குப் போகிறதை நிறுத்தி விட்டாள். ஓட்டல் பலகாரம் வீட்டில் கிடைக்கும்போது அவர் எதற்காக ஓட்டலுக்குப் போகிறார்? அவரும் கண்ணப்பச்சியைப் போல லிஸியின் கையை எதிர்பார்த்துத் தானே இருக்கிறார்! இப்படியாக அவளுக்குப் பெருமையும் திருப்தியும் தரக் கூடிய விஷயங்கள் அறவே இல்லாமல் போகவில்லை. இல்லையானால் எப்படித்தான் வாழ்கிறதாம்?


இன்றைய வாழ்க்கையில் மிகமிகப் பிடித்த சமயம் பனையேற்றக் காலந்தான். அக்கானி அவள் விரும்பிக் குடிக்கும் பானம். அதில் விழுந்து செத்துக் கிடக்கும் , எறும்புகளை அவள் ஒருபோதும் அசிங்கமாகக் கருதினதில்லை. அவற்றை அகப்பையால் நீக்கி விட்டுக் கோப்பையை பானையில் இட்டு முகந்து குடிப்பாள். ஆனால், அதுவல்ல விஷயம். அக்கானிக் காலத்தில் அதைக் காய்ச்சுவதற்கென்று ஒரு கிழவி வீட்டுக்கு வருவாள். அவளுடன் பேசிக் கொண்டிருப்பது லிஸிக்கு நல்ல பொழுதுபோக்கு. அவள் எரிப்பதற்கென்று உலர்ந்த சருகுகளை விளக்குமாறு கொண்டு அரிக்கும்போது லிஸியும் கூட நடப்பாள்; அவர்கள் வீட்டடிதான்; ஆகையால் அதில் ஒன்றும் கட்டுப்பாடில்லை. இந்தக் கிழவியின் மகன்தான் இவர்களுக்குப் பனையேறிக் கொடுப்பது. அவன் பெயர் தங்கையன். பனையேற்ற ஒழுங்குபடி ஒருநாள் அக்கானி தங்கையனைச் சேரும். தங்கையன் முறை வரும்போது அவனுடைய இளம் மனைவி அக்கானியை எடுத்துப் போக வருவாள். இவர்கள் குழந்தைகள் இரண்டு பேர். பிறந்த மேனியாகக் கூட ஓடி வருவார்கள். வாழ்க்கை வெறும் சப்பென்று ஆகி விடாதபடி இவர்கள் எல்லோரும் லிஸிக்கு உதவினார்கள்.
லிஸிக்கு வெளியுலகந்தானே அடைத்துக் கொண்டது? ஆனால் உள்ளே இவளுக்கென்று ஒரு தனி உலகம் உருவாகிக் கொண்டிருந்தது. பனையேறுபவர்கள் சடக் சடக்கென்று குடுவையைத் தட்டிக் கொண்டு வருவதும் பனையோலைகளின் இடையே வானத்தை எட்டிப் பிடிப்பதைப் போல் இருந்து கொண்டு அலுங்குகளை அதாவது பனம் பாளைகளைச் சீவிக் கீழே தள்ளுவதும் ஒருவரையொருவர் கூவியழைத்து வேடிக்கை பேசிக் கொள்வதும் எல்லாம் சுவாரஸ்யமான காரியங்களே. பனையுச்சியிலிருந்து எந்தெந்த விஷயங்களெல்லாம் அலசி ஆராயப்படும் தெரியுமா? மன்னர் அரண்மனை இரகசியங்கள் தொட்டு ஹிட்லரின் ராணுவ காரியங்கள் வரையுள்ள விஷயங்கள் அடிபடும். லிஸி இப்போது பள்ளிக் கூடத்தில் படிக்கிற மாதிரிதான். தன் வீட்டு வாசலில் இருந்து கொண்டே பல புதிய பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கிறாள்.
***

ஹெப்சிபா ஜேசுதாசனின் படைப்புலகம் குறித்து பேராசிரியர் .ராமசாமி

சமூகத்தின் இயங்கியல் தன்மையைப் புரிந்து கொண்ட ஹெப்ஸிபாவின் வாழ்க்கை பற்றிய கோட்பாடு அதன் போக்கிலேயே அவருக்குரிய இலக்கியக் கோட்பாட்டையும் உருவாக்கித் தந்துவிடுகிறது. அந்தக் கோட்பாடே யதார்த்தவாதம் (realisam ) என்பது. இந்த யதார்த்தவாதம், பனைவிடலிகளின் சப்த ஒழுங்கையும், பனையேறிகளின் கோவணத்தையும், அக்காணியின் மணத்தையும், கல்லூரிக் காதலர்களின் கற்பனையையும், அனாதைப் பையனின் வறுமைத் துயரத்தையும் அப்படியே படம் பிடித்துக் காட்டுவதோடு நின்று விடுகிற இயல்புநெறிவாதத்திலிருந்து (Naturalism ) விலகி, சமூக வளர்ச்சியைப் புரிந்து கொண்ட ஆசிரியர், யார் பக்கம் தன் சார்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்து வெளிப்படுத்தும் தன்மையதாகும். இதுவே ஹெப்ஸிபாவின் இலக்கியக் கோட்பாடாகும். இந்த இலக்கியக் கோட்பாடே சமூகத்தை வளர்ச்சிப் போக்கில் நகர்த்தும் தன்மையுடைய இலக்கியக் கோட்பாடே அவருக்கு நாவல் வரலாற்றுக்கு முக்கியப் பங்களிப்பு செய்தவர் என்ற பெருமையினைப் பெற்றுத் தந்தது எனலாம்













 

No comments:

Post a Comment